செப்டம்பர் 10, 2012

கிரேக்கக் கலாச்சாரம் யூதக் கலாச்சாரத்தோடு இணைந்ததால் வந்த விளைவுகள்:

 

கிரேக்கக் கலாச்சாரம் யூதக் கலாச்சாரத்தோடு இணைந்ததால் வந்த விளைவுகள்:

1. ஜிம்னாசியம்:

 வாலிபர்கள் தங்களது உடலை உடற்பயிற்சி செய்து பாதுகாப்பது தான் இதன் முக்கிய கொள்கை ஆகும்.

இந்த உடற்பயிற்சியினால் வந்த விளைவுகள்:

அ) மக்கள் தங்கள் சரீரத்தில் ஆடையணிவது மிகவும் குறைந்தது. அதாவது ஆடையை குறைத்து அணிந்தனர். யூதர்களுக்கு அந்த முறை வெட்கமும், குற்றமுமாக இருந்தது. இதனால், யூத வாலிபர்கள் தங்கள் விருத்தசேதனக் குறியை மறைப்பதற்கான வழியை மறுபடியும் ஒரு ஆபரேஷன் செய்ய வந்தனர்.

ஆ) வாலிபர்கள் சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டார்கள். 18 வயதானவர்கள் சேர்ந்து சமூக சேவையில் ஒரு குறிப்பிட்ட சீருடையோடு ஈடுபட்டனர். இது யூத கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.

2. ஸ்டேடியம்: விளையாட்டு அரங்கம்:

கிரேக்கர்கள் எல்லாவிதமான விளையாட்டகளையும் நடப்பிக்க இந்த அரங்கம் காணப்பட்டது. இந்த விளையாட்டக்களை மக்கள் பொழுதுபோக்காக உபயோகித்து வந்தனர். யூத ஆசாரியர்கள் கூட தங்கள் புனித வேலையை விட்டு விட்டு, விளையாட்டைப் பார்க்க வந்தனர்.

3. கலையரங்கம்:

நாடகங்கள் போன்றவை நடிக்கப்பட்டன. கிரேக்கர்கள் தங்கள் பொழுது போக்கிற்காக நடத்தி வந்தனர். யூதர்களின் மனது கறைபடுத்துவதுபோல இந்நாடகங்கள் காணப்பட்டன.

4. கிரேக்கமொழி:

பாலஸ்தீனாவில் உள்ள பக்திற்குரிய யூதர்கள் எபிரேய மொழியை புனித மொழியாக கருதினர். கிரேக்க மொழியை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கிரேக்க மொழி பரவுவதினால் கிரேக்கக் கலாச்சாரம் பரவுவதற்கும் ஏதுவாக அமைந்தது. சந்தைகளில் கிரேக்க மொழி பேசப்பட்டது. வேதவசனங்கள் மறக்கப்பட்டு விடுமோ என்ற பயம் வந்தது.

 ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக யூதர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிரேக்க கலாச்சாரத்திற்குள் இருந்து வந்தனர். யூதர்களிடையில் இருவகை மக்கள் காணப்பட்டனர். ஒரு சாரார் அனைத்துலக சமரச நோக்குடன் நவீனமான எந்த நாகரீகத்தையும் ஏற்க ஆயத்தமுடையவர்களாகக் காணப்பட்டனர். கிரேக்கக் கலாச்சாரத்தை முழுமனதுடன் ஆதரித்தனர். மக்கபேயர் காலத்தில் காணப்பட்ட 'தொபியரும்', பின்னால் வந்த 'சதுசேயரும்', இவ்வகுப்பைச் சார்ந்தவர்கள்தான். 

இன்னொரு சாரார் நியாயப் பிரமாணத்தக்கும், பாரம்பரியத்தக்கும் ஒத்து வராத எந்தக் கலாச்சாரத்தையும் எதிர்த்து வந்தனர். 'ஹசீடிம்' என்ற கூட்டத்தாரும், மக்கபேயர் காலத்தில் காணப்பட்ட 'ஓனியரும்', பின்னால் வந்த 'பரிசேயரும்' இவ்வகுப்பைச் சார்ந்தவர்கள்தான்.

பிற்காலத்தில் கிரேக்க ஞானத்தில் மூழ்கி யூத நம்பிக்கைகளை கிரேக்க ஞானத்தின் அடிப்படையில் விளக்க முயன்ற யூத அறிஞர்களில் முக்கியமானவர் "பைலோ" என்பவராவார். (கி.மு.20-கி.பி.45). தேவனுடைய வார்த்தை (Divine Logos), தேவனுடைய வல்லமை (Divine Power) ஆகியவற்றைக் குறித்த இவரது விளக்கங்கள் முக்கியமானவைகளாகும்.

பாலஸ்தீனாவை விட்டு சிதறியிருந்த யூதர்களும் கிரேக்க மொழியை கற்று கிரேக்க வாழ்க்கை மறையை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் கி.மு.250 - ல் எகிப்தில் வைத்து பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்குப் பெயர்தான் "செப்துவஜிந்த்" என கூறுகின்றனர். இப்படியிருக்க புரட்சி எழும்ப ஆரம்பித்தது.