செப்டம்பர் 24, 2016

நாவின் அதிகாரம்

Image result for proverbs: 18:21

நாவின் அதிகாரம் – வாழ்வதா? சாவதா?


திறவுகோல்வசனம்: நீதிமொழிகள்: 18:21 – “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”.

நம்முடைய நாவில் இரண்டுவித அதிகாரங்கள் உள்ளது. 1. மரணம் 2. வாழ்வு – இதை இப்படியும் சொல்லலாம் – “வாழ்வா? சாவா?

மரணத்துக்கேதுவான வார்த்தைகளை உச்சரித்தால் மரணம் வரும். 
வாழ்விற்கான வார்த்தைகளை உச்சரித்தால் வாழ்வு வரும். மனுஷன் எதை விரும்பி பேசுகிறானோ, அது அவனுக்கு நேரிடும் என்று வேதம் கூறுகிறது.

லூக்கா: 6:45 – “… இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறினார். இருதயம் முழுவதும் வாழ்விற்கான வளமான, நயமான, செழுமையான, இதமான வார்த்தைகள் நிறைந்திருந்தால், நம் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகள் அனைத்தும் நம் வாழ்விற்கேதுவாய் வெளிப்படும். இருதயம் முழுவதும் கசப்பான, கடுமையான, வெறுப்பான, பிரிவுக்கேதுவான, சீர்கெட்ட வார்த்தைகளாக நிறைந்திருந்தால், வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கத்தக்கதாக மரணத்தின் வார்த்தைகளாக வெளிப்படும். எனவே, நம் இருதயத்திலிருந்து வாயின் வழியாக வெளிப்படும் வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

“விசுவாச வார்த்தைகளைப் பேசி வாழ்வடைய வேண்டிய நம்மை, எப்படியாகிலும் அவிசுவாச வார்த்தைகளை பேச வைத்து வாழவிடாமல் செய்ய நினைப்பது  - பிசாசின் தந்திரங்களில் ஒன்று”
Image result for proverbs: 18:21

நம்முடைய வாயின் வார்த்தைகளை கேட்ச் பண்ண இரண்டு வல்லமைகள் இருக்கிறது. நல்ல வார்த்தைகளை உச்சரித்தால் நற்செய்தியின் தூதன் கேட்ச் பண்ணிக் கொள்வான். மரணத்துக்கேதுவான வார்த்தைகளை உச்சரித்தால் சாத்தானின் தூதர்கள் கேட்ச் பண்ணிக்கொள்வார்கள். நீதிமொழிகள்: 6:2 – “ நீ உன் வாய்மொழிகளில் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்” என்று வேதம் கூறுகிறதை நினைவில் வைப்போம்.

மத்தேயு: 22:15,18 – “அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனை பண்ணி, … இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து, …”. 

சத்துருக்கள் எப்போதும் நம்முடைய பேச்சிலே பல சிக்கலில் மாட்டிவிட ... அறியாதவர்கள் போல போட்டு வாங்கப்பார்ப்பார்கள். நாமோ நமதாண்டவர் இயேசுகிறிஸ்துபோல அப்படிப்பட்டவர்களது வஞ்சகத்திலே அகப்படாதபடிக்கு, அவர்கள் துர்க்குணத்தை கண்டறிந்து விட்டு விலகி செல்ல வேண்டும்.

Image result for proverbs: 18:21

வாயின் வார்த்தையில் சிக்குண்டவர்கள்


1.   யோசுவா – கிபியோனியரிடம் வாயின் உடன்படிக்கையினால் சிக்குண்டான்:

யோசுவா: 9 அதிகாரம் முழுவதும். 9:14,15 – “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல், … யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; …”.

2.   எப்பிராயீமர் – கீலேயாத் மனுஷரிடம் வாயின் வார்த்தையினால் சிக்குண்டார்கள்:

நியாயாதிபதிகள்: 12:5,6 – “கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படிஉச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்”.

3.    சிம்சோன் – தெலீலாளிடம் வாயின் வார்த்தையால் சிக்குண்டான்:

நியாயாதிபதிகள்: 16:16,17 – “இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி, … என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்”.

4.   சவுலைக் கொன்ற அமலேக்கிய வாலிபன் தன் வாயின் வார்த்தையினால் சிக்குண்டான்:

2சாமுவேல்: 1:16 – “தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமாக சாட்சி சொல்லிற்று என்றான்”

5.   இஸ்ரவேலின் ராஜா ஆகாப் – சீரியா தேசத்து ராஜா பெனாதாத்திடம் வாயின் வார்த்தையினால் சிக்குண்டான்:  

 1இராஜாக்கள்: 20:32,33 – “இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம் பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான். அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து, உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்”.
   
நம் வாயின் வார்த்தைகளை நன்றாய்க் கவனித்து நம்மை வாழ்வடையச் செய்யாமலிருக்க துஷ்ட மனுஷரும், துஷ்ட சாத்தானும் மிக கவனமாக நம்மிடம் நெருங்குவார்கள். நாமோ… கர்த்தருடைய கிருபையை சார்ந்திருந்து, கர்த்தருடைய வாக்கைக் கேட்டு, இருதயம் முழுவதும் கர்த்தருடைய வசனங்களாலும், சத்தியத்தினாலும் வைத்து வைத்திருந்தோமானால் ஏற்றவேளையில் நிதானித்து பதிலளிக்கும்போது வாழ்வடைந்திருப்போம்.

நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவது போல – சாத்தானும், துஷ்ட மனிதரும் – நம்முடைய வாயின் வார்த்தைகளைக் கொண்டே நம்மை வீழ்த்தவோ, அல்லது நம்மிடமிருந்து தப்பித்துக் கொள்ளவோ முயற்சிப்பார்கள். நாம் அதற்கு இடங்கொடாதவகையில் இருப்போமாக.

1பேதுரு: 5:8,9 – “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; …”
வகைதேடிச் சுற்றித் திரிகிறவனை அறிந்து வைப்பது தவறல்ல; அப்பொழுது அவனுக்கு நாம் பயப்படவோ, அவன் தந்திரங்களில் விழாதிருக்கவோ நமக்கு உதவி செய்திடுமே!

விழுங்குவதற்கு வகைதேடிச் சுற்றித் திரிகிறவன்

சாத்தானும் அவனது தூதர்களும் ஓரிடத்திலும் நிலையாக தங்கி தாபரிக்காதவர்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்து சுற்றிக் கொண்டே இருப்பவர்கள். ஏனென்றால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வல்லமை அவ்வளவுதான். தள்ளப்பட்ட தூதர்கள்தானே. ஒரு தூதனுக்கு உண்டான வல்லமை மாத்திரமே சாத்தானுக்கு உண்டு. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்…
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய பண்புகளை நாம் தியானிப்போமானால் எளிதாக விளங்கிட முடியும்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய பண்புகள்


 யாத்திராகமம்: 3:14 – “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்பவர். பழைய ஏற்பாட்டில் எல்லாரிலும் ஒரு மேன்மையான தேவனைக் காண்கிறோம். சங்கீதம்: 83:17 – “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்” “யேகோவா” என்பதற்கு “தன்னில் தானே” , “தம்மாலே தானே” இருக்கிறவர் என்று அர்த்தமாம். வேதத்தில் இப்பெயர் ஏறக்குறைய 7000 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏசாயா: 43:10,11 – “… எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை…”

ஏசாயா: 44:8 – “… என்னைத் தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்”

ஏசாயா: 42:5 – “வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன்”

ஏசாயா: 42:9 – “பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்குமுன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்”

தேவன் சர்வ வல்லவர்:

ஆதியாகமம்: 17:1 – “… கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, நான் சர்வ வல்லமையுள்ள தேவன்”

எரேமியா: 32:17 – “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை”.

கொலோசெயர்: 1:16,17 – “…அவருக்குள் எல்லாம் நிலைநிற்கிறது” // “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது”

யோபு: 42:2 – “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்…”

1பேதுரு: 3:22 – “… தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது

நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உடையவர். 1தீமோத்தேயு: 6:15,16 – “… அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்ராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்”.

சர்வ வியாபகர்:

எங்கும் வியாபித்திருக்கிறவர் – ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்று பொருள்.

எரேமியா: 23:24 – “யாவானாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக் கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்”.

சங்கீதம்: 139:7,10 – “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? … அங்கேயும் உமது கை என்னை நடத்தும்; உமது வலது கரம் என்னைப் பிடிக்கும்”

யோனா: 1:3,4 – “அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்” என வாசிக்கிறோம். கர்த்தருடைய பார்வைக்கு யோனா தப்பவில்லை.

யோவான்: 3:13 – “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை”. தேவனாகிய கர்த்தர் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தில் பரலோகத்திலும் இருப்பார்; பூமியிலும் இருப்பார். ஏனெனில் அவர் சர்வ வியாபிகர்.

அப்போஸ்தலர்: 17:27 – “… அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே”

சர்வ ஞானமுள்ளவர் //  சர்வத்தையும் அறிந்தவர்:

சங்கீதம்: 139:4 – “என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்”

1யோவான்: 3:20 – “… தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”

யோவான்: 16:30 – “நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்”.

யோவான்: 21:17 – “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்…”.
அப்போஸ்தலர்: 15:18 – “உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது”

நாம் ஆராதிக்கும் தேவன் – சர்வ வல்லவர், சர்வ வியாபிகர், சர்வ ஞானமுள்ளவர், சர்வத்தையும் அறிந்தவர்

இப்படியிருக்க…

சாத்தானை எவ்விதத்திலும் நம் சர்வ வல்லமையுள்ளவருக்கு ஒப்பிடத்தக்கவன் அல்ல. சாத்தான் ஒரு தள்ளப்பட்ட தூதன். விழுந்து போன தூதன். தூதனுக்குரிய வல்லமை, தூதனுக்குரிய ஞானம், அறிவுதான் அவனுக்கு உண்டே தவிர … வேறு ஒரு அதிகாரமும் வல்லமையும் அவனுக்கு இல்லை. கொடுக்கப்படவில்லை. சாத்தான் எதையாகிலும் தெரிந்து கொள்ள விரும்பினால் … அந்தந்த ஸ்பாட்டுக்கே அவன் போய்தான் தெரிந்து கொள்ள முடியும். அல்லது அவனது குட்டிச்சாத்தான்களை ஏவி விடுவதனாலே மீடியாக்காரர்களைப்போல செய்தி சேகரித்து கொண்டு வருவதன் மூலமாகத்தான் அவன் அறிந்து கொள்ள இயலும்.

ஆனால், தேவனாகிய கர்த்தரோ… சர்வ வியாபிகர். இருந்த இடத்திலிருந்து அனைத்தையும் அறிவார். யாரும் அவருக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. சொல் பிறவா முன்னமே அறிவார். இருதயத்தையும், உள்ளந்திரியங்களையும், நினைவுகளின் தோற்றங்களையும் அவர் அறிவார்.

ஆனால், சாத்தானுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. மனிதனுடைய உள்ளத்திலிருப்பதையோ, நினைவிலிருப்பதையோ, இருதயத்திலிருப்பதையோ ஒருபோதும் சாத்தானால் அறியவோ, உணரவோ ஒருபோதும் முடியாது.

எனவேதான், சாத்தான் – நமது வாயிலிருந்து புறப்படுகிற  வார்த்தைகளை கொண்டு தான் நம்மை வீழ்த்தவோ, குற்றப்படுத்தவோ, கவிழ்க்கவோ, மரணிக்கவோ செய்ய முடியும்.

எனவேதான், நீதிமொழிகள்: 18:21 – “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

நம் வாயின் சொற்களை கவனமாக பார்த்து குற்றம் கண்டு பிடித்து … சிதறடிக்கப் பார்க்கிறான். நாம் அவனது வலையில் வகையாக சிக்காதபடி – வாயின் வார்த்தைகளில் கவனமாயிருப்போம். நம் வாயிலிருந்து வாழ்வதற்கான வார்த்தைகளல்ல… மரணத்திற்கேதுவான வார்த்தைகளை உச்சரிக்க தூண்டுவான். நாம் வாயின் வார்த்தைகளைக் கொண்டே நம்மை விழுங்க பார்ப்பான்.

கீழ்க்கண்ட வார்த்தைகளை நம் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் உச்சரிக்காதிருப்போமாக…



  • என்னால் வாழ முடியவில்லை … என்னால் சகித்துக் கொள்ள முடியாது … என்னால் மறக்க முடியாது…



  • என்னால் எதுவும் செய்ய முடியாது … என்னால் சாதிக்க முடியாது … என்னால் பாவத்தை விட முடியவில்லை …



  • என்னால் சிற்றின்பங்களை விட இயலாது … தற்கொலை செய்து கொண்டால் நலம் …. வாழப் பிடிக்கலை …



  • ஊரை விட்டு ஓடிப் போகிறேன் …  ஊழியத்தை விட்டுவிட போகிறேன் … வெறுப்பாயிருக்கிறது …



  • யாரையும் என்னால் நேசிக்க முடியலை … எல்லார் மேலும் கோபம் வருகிறது …. ஒருவரும் சரியில்லை …



  • எல்லாரும் ஒரே மாதிரிதான் … யாரிடமும் உண்மையில்லை …. சமுதாயத்தின் மேல் வெறுப்பாயிருக்கிறது ….



  • ஒருவருக்கும் அக்கறையில்லை … யாருக்கும் பொறுப்பில்லை … எனக்கு எப்பவுமே இப்படித்தான் நடக்கும் …



  • என் நேரம் அப்படி … நான் தொட்டால் துலங்காது … எனக்கு எல்லாமே எதிராகத்தான் நடக்கிறது …



  • எனக்கு யாரும் உதவிட இல்லை … அத்தனை பேரும் துரோகிகள்தான், வஞ்சகர்கள்தான் … அனைவரும் பொய்யர்கள்தான் …



  • என்னையெல்லாம் ஆண்டவர் நேசிக்க மாட்டார்…. அவர் என்னை கைவிட்டு விட்டார்… அவர் ஆசீர்வதிக்க மாட்டார்….



  • பைபிள் படிக்க நேரமே இல்லை … ஜெபம் பண்ண நேரமே இல்லை … ஊழியம் செய்ய என்னால் முடியாது …



  • கடனே நீங்க மாட்டேங்குது … வியாதி நீங்க மாட்டேங்குது … நமக்கு கொடுப்பினை இல்லை …



  • நான் ஏன் இரட்சிக்கப்பட்டேனோ தெரியலை … ஆலயத்துக்கு போக மனதில்லை … மனசுல நிம்மதி இல்லை…



  • பழையபடி இருந்தால் தேவலை… சில சகவாசத்தை விட முடியாது …  புகைப்பதையோ, குடிப்பதையோ நிறுத்த முடியாது ….



  • இப்படித்தான் இருப்பேன்… செத்தால் சாகிறேன் …


இப்படி பேசுவதுதான் முறுமுறுப்பு என்பது. நமக்கு நாமே சாத்தானின் வலையில் மாட்டிக்கொள்ளும்படியான வார்த்தைகள் இது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். பிசாசின் வெற்றி இதில்தான் அடங்கியுள்ளது.

ஆம் பிரியமானவர்களே!

“முடியாது”, “இயலாது”, “தீராது”, “நீங்காது”, “துலங்காது”, “இல்லை” - என்கிற இப்படிப்பட்ட அவ நம்பிக்கை வார்த்தைகளை விசுவாச அறிக்கையிட வைத்து அந்த வார்த்தைகளினாலேயே நம்மை வீழ்த்துவதுதான் பிசாசின் தந்திரங்களில் பிரதானமானது.

ஒன்றை நாம் நன்றாக அறிய வேண்டும். நீங்கள் வெளிப்படையாக பேசாதவரை … சாத்தானால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. 

இரண்டாவது, நீங்கள் வெளிப்படையாக அவிசுவாச வார்த்தைகள் பேசும்போதுதான் சாத்தானுக்கு உங்கள் இருதயத்தின் எண்ணங்கள் தெரிய வரும். அதுவரை அவனுக்கு உங்கள் நினைவுகள், எண்ணங்கள் எதுவுமே தெரியாது. அதை அறிந்து கொள்கிற அறிவு, ஞானம், வல்லமை அவனக்கில்லை.

நீங்கள் பேசுகிற தவறான, முறுமுறுப்பான, மரணத்துக்கேதுவான வார்த்தைகள் வைத்துதான் நமக்கு விரோதமாக சாத்தான் செயல்பட முடியுமே தவிர, அவனால் சுயமாக நமக்கெதிராய் செயல்பட்டு வீழ்த்திட முடியாது. நமது அவநம்பிக்கையான வார்த்தைகள் நம்மைச்சுற்றிலும் இருக்கிற தேவனுடைய பாதுகாப்பு என்கிற வேலியை அகற்றி விடும். பிறகுதான் பிசாசு நம்மை தொட இயலும். தேவனுடைய பாதுகாப்பை விட்டு வெளியே வருவது எவ்வளவு பெரிய இழப்பை தருகிறது என்பதை உணருங்கள். அதனால்தான், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது” என்று கர்த்தர் சொல்கிறார்.

நம் தேவனாகிய கர்த்தரோ … நம் வாயில் விசுவாச வார்த்தைகளை பேச ஆவியானவரைக் கொண்டு அனல்மூட்டி நம்மை எழுப்பி விடுகிறார்.

பிலிப்பியர்: 4:13 – “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு பெலனுண்டு”.

சங்கீதம்: 1:3 – “… அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”

சங்கீதம்: 18:29 – “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்”

மாற்கு: 9:23 – “இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்”.

நீதிமொழிகள்: 28:25 – “… கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்”

எலியா தீர்க்கனுடைய ஏளனமும் சாத்தானுடைய தலைமறைவும்


 1இராஜாக்கள்: 18:27 – “மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணமாயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்ப வேண்டியதாக்கும் என்றான்”

எலியாவின் சவாலுக்கும், பரியாசத்திற்கும் எதிர்கொள்ளாமல் சாத்தான் தலைமறைவான இரகசியம் என்னவாயிருக்கும்? சாத்தானுடைய பண்புகளை எலியா தீர்க்கன் ஏளனம் பண்ணிக் கொண்டிருக்கிறான். அதை நிரூபிக்கவாவது வந்திருக்கலாமே!? ஏனிந்த தலைமறைவு வாழ்க்கை? சாத்தானுக்கு சர்வவியாபகத் தன்மை இல்லை; சர்வ வல்லமையற்றவன்; எதையும் முன்னமே அறியக்கூடிய திறனற்றவன் என்பதை நிருபிக்கப்பட்ட இடம்தான் கர்மேல் பர்வதம்.

சாத்தானால் சாத்தியமற்ற பண்புகள்


1.   உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்: சாத்தான் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் மட்டும்தான் இருக்க முடியும். அதேசமயத்தில், அதேநேரத்தில் உலகின் பலமுனைகளில் பல இடங்களில் இருக்க முடியாது. ஏனென்றால், சாத்தானுக்கு தேவனைப்போல சர்வவியாபிக தன்மை அவனுக்கு இல்லை. தேவனை யாரும் உண்டாக்கவில்லை. அவர் யாரிடத்திலும் வல்லமை பெறவில்லை. ஆனால், சாத்தானோ … தேவனால் தூதனாக சிருஷ்டிக்கப்பட்டவன்; தேவனிடத்திலிருந்து வல்லைமை பெற்றுக் கொண்டவன். தேவனாகிய கர்த்தர் தந்த அளவிற்குத்தான் அனைத்து உரிமைகளும், பண்புகளும், வல்லமையும் இருக்குமே தவிர… சாத்தானிடத்தில் வேறெதையும் நாம் காண முடியாது. மேலும் மேலும் வல்லமையை சாத்தான் அப்டேட், அப்கிரேடு செய்து கொள்ள முடியாது. தன்னில் தானோ அல்லது பிறரிடமோ அல்லது கர்த்தரிடமோ மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ளவோ, வல்லமையை மேம்படுத்திக் கொள்ள முடியாது. வல்லமை மட்டுமல்ல வேறெந்த பண்புகளையும் மேம்படுத்திக்கொள்ளவோ, வளர்த்துக் கொள்ளவோ முடியாது. இருக்கிற வல்லமையின்படி மனிதனை சோதித்துக் கொள்ள வேண்டியதுதான்.
எலியாவின் ஏளனம் என்ன? “உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்” என்பதே. காரணம்? பிசாசுகளின் வகைகளில் பலவகை உண்டு. அதில் ஒருவகை செவிட்டுப் பிசாசு, ஊமைப் பிசாசு, திருட்டுப் பிசாசு. இவைகளெல்லாம் ஒரு மனிதனுக்குள் இருந்தால், சத்தங்காட்டாமல் அமைதியாக உள்ள உட்கார்ந்து கொண்டு, செவியை அடைத்துக் கொண்டு, நாவை கட்டி வைத்துக் கொண்டு இருக்கும். காரணம்? உள்ளே இருக்கிற ஆள் யாரெனத் தெரிந்து விட்டால் துரத்தப்பட வேண்டியிருக்குமே என்பதினால் (மத்தேயு: 12:22 // மாற்கு: 9:25).

2.   அவன் தியானத்தில் இருப்பான்: என்ன ஒரு ஏளனம்?!! சாத்தானுக்கு ரோஷம் வரவேண்டாமா?! மனுஷகொலை பாதகனுக்கு வராதுங்க. என்ன பெரிதாக தியானம் செய்து விட போகிறான்? மனுக்குலம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றா தியானிக்கப் போகிறான்?! இன்னும் எத்தனை மனுஷர்களை அழிக்கலாம்? எந்தெந்த வகைகளில் அழிக்கலாம்? எத்தனை குடும்பங்களை நிர்மூலமாக்கலாம்? மக்களை மூடத்தனத்திலேயே எப்படி நிரந்தரமாக மூழ்கடிக்கலாம்? எத்தனை மனங்களை குருட்டாட்டம் பிடிக்கச் செய்யலாம்? மெய் தெய்வத்தை கண்டவர்களை எப்படி திசைதிருப்புவது? இதுதானே அவனது தியானமாக இருக்க முடியும்? பிசாசு கட்டுகிற தியான பீடங்களில் இதைத்தவிர வேறென்ன இருக்க முடியும்?! பிசாசு செய்கிற யோகாசனங்களில் வேறென்னத்தைக் காண முடியும். நம் தேசத்து மக்களையும், ஆட்சியாளர்களையும் இப்படித்தானே குருட்டாட்டம் பிடிக்கச் செய்திருக்கிறான். அவனது தியானத்தைக் கலைத்து, அவனைது தந்திரங்களை முறியடித்து உண்மை தெய்வத்தை உலகிற்கு காட்ட எலியாவைப்போல  எழும்ப வேண்டிய காலகட்டத்தில் நாம் வந்திருக்கிறோம்.

3.   அலுவலாயிருப்பான்: இடப்பற்றாக்குறையினால் ஒருவனுக்குள்ளேயே லேகியோன் அளவுக்கு குடியிருந்து குடியை கெடுத்துக் கொண்டிருப்பான் என்று எலியா தீர்க்கன் ஏளனம் பண்ணுகிறான் என நினைக்கிறேன். சாத்தானுக்கு இந்தியாவில் இடப்பற்றாக்குறையை ஜெபத்தினால் ஏற்படுத்துவோமாக. உபவாசத்தினால் கடிந்து துரத்துவோமாக. யோவான்: 14:30 – “ … இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”.  சாத்தானுக்கு அலுவலே இல்லாமல் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்தது. சபையைச் சார்ந்தது. ஒருமனப்பட்டு, ஒன்று சேர்ந்து, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் சாத்தானை ஓடஓட துரத்துவோமாக.  கொரியாவில் வந்த எழுப்புதலுக்குக் காரணம் … சாத்தானை கொரியாவில் இராதபடி துரத்தப்பட்டதே காரணம். கர்மேலில் அக்கினி இறங்கி எழுப்புதல் ஏற்பட காரணம்… எலியா தீர்க்கன், சாத்தானை ஓடஓட துரத்தி விட்டதே. இந்தியாவில் எழுப்புதல் ஏற்பட சபைகள் அனைத்தும் ஒருமனப்பட்டு, சாத்தானுக்கு எதிராக ஜெபசேனையை உருவாக்கி சாத்தானை ஓடஓட துரத்த வேண்டும். ஜெபக்குழு தலைவர்கள், ஜெப சேனைகள் எழும்ப ஜெபிப்போம். யோவான்: 10:9 – “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்”. சாத்தான் ஒருவனுக்குள் பிரவேசித்தால்… யோவான்: 10:10 – “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான்…”. அவனது தலையாய அலுவலே அதுதான். பிசாசின் அலுவல் என்னஎன்பதை வேதம் முழுக்க அவனது கிரியைகளை வாசிக்கிறோமே! அவனால் மனுக்குலத்திற்கு ஒரு பயனுமில்லை. பயனற்ற கிரியைகள் மட்டுமே அவனில் காணப்படுகிறது. எலியாவிற்கு முன் வந்து நின்று அடிபடுவதைவிட, உலகில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஆத்துமாவை நஷ்டப்படுத்துவது மேல் என்று கருதி ஓடிவிட்டான் போலும்.

4.   பிரயாணமாயிருப்பான்: சிலபேருடைய பிரயாணம் நன்மை தரும். சிலபேருடைய பிரயாணம் தீமை தரும். சாத்தானுடைய பிரயாணம் ஒருபோதும் மனுக்குலத்திற்கோ, தேவபிள்ளைக்கோ நன்மையை கொண்டு வராது என அறிந்திருக்கிறோம். அழைக்கும் பக்தர்களின் குரல் கேட்டு இங்கு வராமல் வேறு எங்கோ பிரயாணம் பண்ணுகிறான் என்று சொன்னால் … இவர்கள் மேல் அக்கறையில்லை என்றாகிறது. அவன் வராவிட்டால் இந்த பக்தர்களின் கதி அதோகதிதான். இந்த பக்தர்களை கைவிட்டுவிட்டான். இனி புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறான். அந்த பிரயாணமும் இப்படிபட்டவர்களுடைய அழிவைபோலதான் இருக்கப்போகிறது. வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு பிரயாணமாய் போயிருப்பான். காது கேட்க நியாயமில்லை. பிரயாண தூரம் வெகுதூரமாயிருப்பதினால் உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள் என்று வேறு எலியா ஏளனம் செய்கிறார். யோவான்: 3:13 – “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை”. தேவனாகிய கர்த்தர் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தில் பரலோகத்திலும் இருப்பார்; பூமியிலும் இருப்பார். ஏனெனில் அவர் சர்வ வியாபிகர்.
ஏசாயா: 66:1 – “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதப்படி…” என்று. எவ்வளவு பெரிய தேவன்?! ஒருதேவதூதன் இவ்வளவு பெரியவன் அல்ல. மிஞ்சிப்போனால் ஒரு எட்டடி உயரம் இருக்கலாம்.

 5.   தூங்கினாலும் தூங்குவான்: “இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதும் இல்லை; தூங்குவதும் இல்லை” (சங்கீதம்: 121:4). நாம் ஆராதிக்கும் தேவன் நம்மைக் காக்குபடிக்கு தூங்காமலும் உறங்காமலும் இருக்கின்ற அக்கறையுள்ள தேவன். அக்கறையில்லாதவனுக்கு உறக்கமும் வரும்; தூக்கமும் வரும். யார் மேலும் கரிசனையோ, அக்கறையோ இல்லதவன் பொறுப்பற்றவன் என எலியா தீர்க்கன் சொல்ல வருகிறார் என்பதை நாம் அறிவோமாக.
எலியா தீர்க்கன் சொல்வதைக்கூட விடுங்கள். பாவம் … பாகாலின் பிள்ளைகளுடைய உரத்த குரலுக்குக்கூட செவிமடுக்காதது கொடுமையிலும் கொடுமையல்லவா?
1இராஜாக்கள்: 18:28,29 – “அவர்கள் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை”.

தங்களின் வழக்கத்தின்படியே …

உலகம் முழுக்க பாகாலின் வழிபாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இப்படித்தான் இருக்கிறது. தங்கள் சரீரங்களை கீறிக்கொண்டு, சன்னதம் சொல்லி (அருள் வாக்கு // குறி சொல்லுதல்) மனுக்குலத்தை வஞ்சிப்பதுதான் பாகாலின் திட்டம். இதில் விழுந்துபோன மக்கள் தாங்கள் மரிக்கும்வரை மீண்டுவர பலநேரங்களில் முடிவதில்லை. பாகாலின் திட்டத்தில் விழுந்தவர்களின் ஒருமனப்பட்ட ஒருங்கிணைப்பைப் பாருங்கள் – சன்னதம் சொல்கிறவன், நாள் நட்சத்திரம் பார்க்கிறவன், கிளி ஜோசியம் சொல்கிறவன், சகுனம் பார்க்கிறவன், நியுமரலாஜி பார்க்கிறவன், ஜாதகம் பார்க்கிறவன் முடிவிலே எங்கு நடத்தகிறான்? பரிகாரம் என்ற பெயரிலே பாகால் விக்கிரகங்களுக்கேதுவாக வழிநடத்துகிறானல்லவா? முக்கடலும் சங்கமிக்கிற இடம், முக்கூடலும் (மூன்று ஆறுகள்) சங்கமிக்கும் இடங்கள், புண்ணியஸ்தலங்கள், மலைக்கோவில்கள், குறிப்பிட்ட காரியங்களுக்கு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி பாகாலிடம் அல்லவா வழிநடத்துகிறார்கள்.

ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இவ்வளவும் செய்தும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை. மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. கவனிப்பாரும் இல்லை. அப்படியானால், பாகாலின் தீர்க்கதரிசிகள் எப்படி சாயங்கால மட்டும் சன்னதம், அருள் வாக்கு, குறிசொல்லிக் கொண்டு வந்தார்கள். பொய்யின் ஆவிதானே. பாகால் தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்தத்திலிருந்து குறிசொல்லியிருக்கிறார்கள். அதாவது பொய் சொல்லியிருக்கிறார்கள் என இதன் மூலம் விளங்குகிறதல்லவா?! யோவான்: 8:44 – “… அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்”. நம் தேசத்தில் இருக்கும் பக்தகோடிகள், பக்த சிரோன்மணிகள் ஒவ்வொருவரும் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அறிந்தபின் ஆண்டவர் இயேசுவிடம் இரட்சிப்பை பெற முன்வரவேண்டும்.

இதுவரை சாத்தானின் சாத்தியமற்ற குணப்பண்புகளை எலியா தீர்க்கனின் பரியாசத்திலிருந்து விவரமாக கண்டறிந்தோம். சாத்தானால் சாத்தியமற்ற விஷயங்கள் சிலசமயங்களில் சாத்தியப்படுவதற்கான காரணம் இதுதான். நமது வாயின் வார்த்தைகளினால் அவிசுவாச வார்த்தைகளை பேசும்போது நம்மில் சாத்தான் கிரியை நடப்பிக்கும்படி திறந்த வாசலை நாமே அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுவதினால்தான். எனவே, இவ்விஷயத்தில் சற்று கவனமாயிருந்தால் நம்வாழ்வில் சாத்தானுக்கு இனிமேல் இடமே இராதபடி செய்து வெற்றிமேல் வெற்றி பெற்று, நீடித்த நாட்களாய் நன்மையையும் கிருபையையும் பெற்று வளமாய் வாழ்ந்திருப்போம். ஜீவனுக்கேதுவான வாழ்விற்கேதுவான வார்த்தைகளையே பேசுங்கள். அதற்கான கிருபையை தேவனிடம் ஜெபத்திலே கேட்டுப் பெற்றிடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!
  


  


செப்டம்பர் 02, 2016

வல்லவனும் வனசஞ்சாரியும் குணசாலியும் கூடாரவாசியும் (பகுதி: 1)

Image result for Genesis: 25:27

வல்லவனும் வனசஞ்சாரியும் – குணசாலியும் கூடாரவாசியும்

(பகுதி: 1)

திறவுகோல் வசனம்: ஆதியாகமம்: 25:27 – “… ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்”

ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு; ஈசாக்கின் குமாரர் ஏசா, யாக்கோபு. இருவரும் ஒரே வயிற்றில் பிறந்திருப்பினும், வெவ்வேறு வகையான சுபாவமுள்ளவர்களாயிருந்தனர். ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான். அவர்கள் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய பாடங்கள் அநேகம் உண்டு. 

இருப்பினும், முதலாவதாக “வல்லவனும் வனசஞ்சாரியுமாயிருக்கிற ஏசா” வைக் குறித்து தியானிப்போம். ஏனென்றால், ஆவிக்குரிய வாழ்வில் நாம் செய்யத்தக்கவைகள் எது? செய்யத்தகாதவைகள் எது? என்கிற ஆரம்பப்பாடத்தை கற்றுத்தருவதே இந்த ஏசாதான்.


1.   கர்த்தர் தரும் முதன்மையானவைகளை அலட்சியம் பண்ணக்கூடாது: (ஆதியாகமம்: 25:29-34)


பழைய ஏற்பாட்டுக்காலங்களில் பிறப்பிலேயே கர்த்தரால் கொடுக்கப்படுகிற முதன்மையான ஆசீர்வாதம் “சேஷ்டபுத்திர பாகம்”. ஒருவன் எதை இழந்தாலும் இதை இழக்க சம்மதிக்க மாட்டான். அது நமக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம்தான் பின்னர் பிறந்தவர்களுக்கு இருக்கும்.

அப்போஸ்தலர்: 22:27,28 – “அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன் நான் ரோமன்தான் என்றான். சேனாபதி பிரதியுத்திரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்”.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ரோமனல்லாத ஒருவன் ரோம குடியுரிமைப் பெற மிகுந்த திரவியத்தைச் செலுத்தி பெற வேண்டியதாயிருந்தது. ஆனால், பவுலின் பெற்றோர்களோ ரோமர்களாக இல்லாதிருந்தும் ரோமாபுரியில் வியாபார விஷயமாக சென்றிருந்தபோது, ரோமாபுரியில் வைத்து பவுலை பெற்றெடுத்தபடியால், பவுல் ரோமனாகும் சிலாக்கியத்தைப் பெற்றார். இதனால், பவுலுக்கு ரோமாபுரியிலும், அதன் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகள், தேசங்களிலும் “ரோம குடியுரிமை” என்கிற சிலாக்கியம் கிடைத்தது. அது அந்நாட்களில் ரோமாபுரியின் ஆளுகைக்குட்பட்ட தேசங்களில் அதிகாரிகள் நடுவிலே குடிமக்கள் நடுவிலே கனத்திற்குரியதாகப்பட்டது. தனி அந்தஸ்து கிடைத்தது என்பதை வேதத்தின் வாயிலாக அறிகிறோம். சில குடியுரிமை பிறப்பினால் வரும்; சில குடியுரிமை பணத்தினால் வரும். எப்படி பெற்றிருந்தாலும் அது ரோமர்கள் நடுவிலே அரசியல் உரிமை, தனி அந்தஸ்தையும், சிறப்புரிமையையும் கொடுத்தது.

அதுபோல, சேஷ்டபுத்திர பாகம் என்பது கர்த்தரால், கர்ப்பந்திறந்து பிறக்கும் முதற்பேறானவனுக்கு கிடைக்கும் தனி பிறப்புரிமை – சிறப்பான அந்தஸ்து – சிறப்பான ஆசீர்வாதம் – தகப்பனுடையதெல்லாம் மூத்தவனுக்கே.

லூக்கா: 15:31 – “அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது” என்று மூத்த குமாரனைப் பார்த்து தகப்பன் சொல்வதை வாசிக்கிறோம்.

சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதம் என்னென்ன?

அ) கர்த்தருடைய முதல் சிறப்பான பங்கு கிடைக்கும் – கர்த்தரின் ஆசீர்வாதம்

ஆ) வம்சத்திற்குரிய ஆசீர்வாதம் அவன் மூலமாகவே கடந்து செல்லும் – வம்சத்தின் ஆசீர்வாதம்

இ) தகப்பனுடைய ஆஸ்தியில் பங்கு கிடைக்கும் – பெற்றோரின் ஆசீர்வாதம்

மூத்தபிள்ளைக்கு கர்த்தர் தரும் சிறப்புகள் – முதன்மையானவைகள் இவைகளே.

தேவனாகிய கர்த்தர் தரும் எவைகளையும் புறக்கணியாமல் இருப்பதே கீழ்படிதல். அதுவே அவனுக்கு ஆசீர்வாதம் கொண்டு வரும்.

ஏசாவின் வாழ்வில் என்ன நடக்கிறது?  

 ஒருவேளை போஜனத்திற்காக தன் சேஷ்டபுத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப்போடுகிறான். பரலோக குடியுரிமையை விற்றுப்போடுகிறான். தன் பிறப்பிலேயே கிடைத்த சிறப்பான அந்தஸ்தை இழந்து விட்டான். குடியுரிமையை விற்றவன் தேசத்தில் குடியிருக்க முடியாது. உடனடியாக கைது செய்து வெளியேற்றி விடுவார்கள். நாடு கடத்துவார்கள். வீசா காலம் முடிந்து விட்டால் அந்நாட்டிலிருப்பது தேசிய குற்றமாகும். விசா காலாவதியாகுமுன்னே நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஏசா, கர்த்தரிடத்தில்  குடியுரிமையை இழந்தவன் போலிருந்தான்.

நம் வாழ்வில் கர்த்தர் தரும் முதண்மையானவைகளை எக்காரணங்கொண்டும் உதறித் தள்ளிவிடக் கூடாது. அதை அலட்சியம் பண்ணக்கூடாது. அல்லத்தட்டவும் கூடாது. நம் பார்வைக்கு அது சிலவேளை அற்பமாய் தோன்றலாம். காரணம்? அதைக்குறித்த ஆவிக்குரிய அறிவு இல்லாதிருப்பதே.

ஒன்றை வேண்டாம் என்று ஒதுக்க நினைக்கும்போது, அதைப்பற்றி அறிந்தவர்களிடம் அதன் சிறப்பு என்ன? அதன் மேன்மை என்ன? அதை புறக்கணிக்கவா? வேண்டாமா? அதனால் பின்விளைவுகள் ஏற்படுமா? நல்லதா? கெட்டதா? என்பதை நன்கு அறிந்த பின் முடிவெடுப்பது நல்லது. முன்பின் யோசியாமல், முடிவெடுத்து  செயல்பட்டால், பெரிய இழப்புகளை நம் வாழ்வில் சந்திக்க நேரிடலாம். பொருளிழப்பு என்றால் பொறுத்துக்கொள்ளலாம். ஆவிக்குரிய இழப்பென்றால் ஆயுள் சக்கரத்திற்கே ஆபத்தை விளவித்திடுமே. எனவே, ஆவிக்குரிய வாழ்வில் விழித்திருத்தல், ஜாக்கிரதையாயிருத்தல் அவசியம்.

கர்த்தர், நமக்கு தந்திருக்கிற முதண்மையானவைகள் என்னென்ன?

தாலந்துகள், வரங்கள், அழைப்பு, பொறுப்பு

இவ்வுலகில் நாம் எவ்வளவு பெரிய வல்லவர்களாயிருந்தாலென்ன? உலகில் நம் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொடுக்கப்படும் எண்ணற்ற விருதுகள், பட்டங்கள், மெடல்கள், நற்பெயர்கள், கொடைகள், கேடயங்கள், பாராட்டுக்கள் நம்மேல் விழும் மாலைகள் மலைபோல் குவிந்தாலென்ன? பரலோகம் நம்மை பாராட்டுமா? மெச்சிக் கொள்ளுமா? மேற்கண்ட விருதுகள் பெற்றவர்கள் அநேகர் இவ்வுலகில் வல்லவர்களாயிருந்தாலும், ஆவிக்குரிய வாழ்வில் அநேகர் வல்லவர்களில்லை என்பது பரிதாபகரமானது.

உலகில் நாம் எவ்வளவு மெத்தப்படித்தவர்களாயிருந்தாலும், வியாபாரத்தில் விருத்தியாகி கொடி கட்டிப்பறந்தாலும், அரசியலில் சாணக்கியனாக இருந்தாலும், உயர்ந்த அந்தஸ்தான பதவிகளில் வகித்தாலும், தத்துவஞானியாக, விஞ்ஞானியாக, அறிவாளியாக இருந்தாலும், செல்வச் செழிப்பில் சீமானாக இருந்தாலும், கண்டம் விட்டு கண்டம் பறந்து பறந்து உயரே உயரே போனாலும் … கர்த்தருக்குரிய முதண்மையானவைகளை நீ அலட்சியம் பண்ணக்கூடாது.

தாலந்துகள் அல்லது திறமைகள்: (மத்தேயு: 25:15-18, 25-30)

மத்தேயு: 25:15-18 – “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்”.

கணக்கு கேட்கும் நாளில்,… ஒருவன் ஐந்தை பத்தாக்கினான்; ஒருவன் இரண்டை நான்காக்கினான்; இவர்கள் இருவருக்கும் – அநேகத்தின்மேல் அதிகாரி பதவியும், சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கும் தகுதியையும் பெற்றனர். ஒரு தாலந்தை பெற்றவன் புதைத்து வைத்த தாலந்தை துருப்பிடித்த நிலையில் திருப்பி தருகிறான். அவனுக்கு கிடைத்தது: புறம்பான இருள், அழுகையும் பற்கடிப்புமே.

இன்றைய நாட்களில் விசுவாசிகள் அனைவரும் உலகில் தலைசிறந்து காணப்படுகிறார்கள். வரவேற்கப்பட வேண்டிய விஷயம். காரணம்… அந்த உச்சத்தைத் தொடுவதற்கு அவர்களுக்கு தேவனிடத்திலிருந்து தாலந்துகளும், திறமைகளும் அந்தளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திட வேண்டும். கனமும், மகிமையும், புகழ்ச்சியும் ஒருவருக்கு தேவனால் மட்டுமே கொடுத்திட இயலும். 

உலகப்பிரகாரமான அனைத்து நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் தேவச்செயலின்றி எவரொருவரும் பெற்றிட முடியாது. அவைகளைப் பெற்றிட தாலந்துகள், திறமைகள் தேவனால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. நானே படித்தேன்; நானே உயர்ந்தேன்; நானே சம்பாதித்தேன்; நானே பாடுபட்டேன்; இரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்தேன்; என் அறிவினால் மேன்மையடைந்தேன்; ஒருவருடைய தயவுமின்றி மேலுக்கு வந்தேன் – என்று சொல்பவர்கள் ஒன்றை அறிந்து உணர வேண்டும். தேவன் உங்களுக்கு தாலந்தோ, திறமையோ, அறிவோ தராமல் போயிருந்தால் உங்கள் நிலைமை என்னவென்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது உங்களை நீங்களே மேட்டிமையாக கருதமாட்டீர்கள்.

நமக்குக்கொடுக்கப்பட்ட அத்தனை உயர்வுகளும், மேன்மையும், கனமும், புகழும் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், சாட்சியாக வாழவும், அதன் மூலம் அநேகரை நீதிக்குட்படுத்தவும் தான் என்பதை அறிவீர்களா?

 உங்களுக்கு கிடைத்த தாலந்து திறமைகள் மூலம் எவ்வளவாக உயர்வடைந்திருக்கிறீர்கள்? கனம் பெற்றிருக்கிறீர்கள்? பொருளீட்டியிருக்கிறீர்கள்? அந்த தாலந்து திறமையை கொண்டு எவ்வளவு ஆத்துமாக்களை இரட்சித்திருக்கிறீர்கள்? தாலந்து, திறமைகளெல்லாம் நமக்கும், நம் பிழைப்புக்கும், நாம் வேலை பார்க்கும் நிர்வாகத்திற்கு மட்டுந்தானா?! அடக் கடவுளே!

நம்மை மீட்ட இரட்சகருக்கில்லையா? பலபேருடைய மீட்பிற்கில்லையா? பரலோகத்திற்கு செல்லும்போது … எத்தனை விருது, மெடல், பட்டம், வாங்கினாய்? என்று தேவனாகிய கர்த்தர் கேட்க மாட்டார் என்பதை உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்?!

வரங்கள்: (1கொரிந்தியர்: 12:1, 8-11)

1கொரிந்தியர்: 12:1 – “அன்றியும் சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை” என்று அப்.பவுல் கூறுகிறார்.

ஆவிக்குரிய வரங்கள்: ஒன்பது. அவை: 1. ஞானத்தை போதிக்கும் வசனம் 2. அறிவை உணர்த்தும் வசனம் 3. விசுவாசம் 4. குணமாக்கும் வரம் 5. அற்புதங்களைச் செய்யும் சக்தி 6. தீர்க்கத்தரிசனம் உரைத்தல் 7. ஆவிகளைப் பகுத்தறிதல் 8. பற்பல பாஷைகளைப் பேசுதல் 9. பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் என்பவைகளே.

வரங்களை அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அவைகளை பெற வேண்டும். பெற்றதை சபையில், ஊழியங்களில், ஊழிய பாதைகளில் உபயோகப்படுத்த வேண்டும். வரமில்லாத விசுவாசியும் இல்லை; தாலந்தில்லாத மனிதருமில்லை. உங்களிடம் இருக்கும் வரம் என்ன என்பதை கண்டுபிடித்து பயன்படுத்துங்கள்.

அழைப்பு: (லூக்கா: 14:14-24)

கர்த்தருடைய அழைப்பு உன்னதமானது. அழைப்பைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஒரு மனிதனுக்கு கீழ் வேலை செய்ய அல்ல; தேவனுக்கு கீழ் வேலை செய்ய அழைக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரையும் தேவன் ஒவ்வொருவிதமாக அழைக்கிறார். எரேமியாவை தாயின் கருவிலேயே தெரிந்து கொண்டார். 

அத்திப்பழக்கூடையை சுமந்து கொண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆமோசை கர்த்தர் அழைத்தார். ஆளை விடுங்கப்பா சாமி என்று சொல்லி ஓடிப்போய் ஆடு மேய்த்த மோசே, மற்றும் தாவீதை அழைத்தார். கழுதை மேய்த்த சவுலை அழைத்தார். சிறு பிள்ளையாண்டானாம் சாமுவேலை அழைத்தார். வித்தியாசமான நிலைமைகளிலே இருந்த நியாயாதிபதிகளை அழைத்தார். படிப்பறியா பாமர மீனவர்களை சீஷர்களாக அழைத்தார். தீர்க்கதரிசிகளை அழைத்தார். ராஜாக்களை அழைத்தார்.

அதேபோன்று இன்று உங்களையும் தமது இராஜ்யத்தைக் கட்ட உங்களையும் அவர் அன்போடு அழைக்கிறார். வருவீர்களா? அல்லது அல்லத்தட்டி அலட்சியம் பண்ணுவீர்களா? கர்த்தர் அழைத்த அழைப்பை அநேகர் அல்லத்தட்டினார்கள். பிற்பாடு அல்லல்பட்டனர். 

பவுலை பாருங்கள். “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” என்று அடுத்த கட்ட வேலைக்கு ஆயத்தமாகி விட்டான். மாம்சத்தோடும், இரத்தத்தோடும் யோசனை பண்ணாமல் புறப்பட்டுப் போனான் என்று வேதம் கூறுகிறது.

ஐசுவரியமான வாலிபனை அழைத்தார் – அவன் அல்லத்தட்டி அலட்சியம் பண்ணினான்; வயல் கொண்ட ஒருவனை அழைத்தார் – அகத்தியமாய் போய்ப் பார்க்க வேண்டும் என்று அல்லத்தட்டி அலட்சியம் பண்ணினான்; ஐந்தேர் மாடு கொண்ட ஒருவனை அழைத்தார் – அதை சோதித்துப் பார்க்க வெண்டுமென்று அல்லத்தட்டி அலட்சியம் பண்ணினான்; பெண்ணை விவாகம் பண்ணினவனைக் கூப்பிட்டார் – நான் வரக்கூடாது என்று அல்லத்தட்டி அலட்சியம் பண்ணினான். கர்த்தர் சொன்னார்: அழைப்பை அல்லத்தட்டி அலட்சியப்படுத்திய எந்தவொரு மனுஷனும் என் விருந்தில் ருசி பார்ப்பதில்லை (லூக்கா: 14:14-24).

 எவ்வளவு பெரிய தண்டனை?! தேவ அழைப்பானது  எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது பார்த்தீர்களா? உலகவேலையைவிட கர்த்தருடைய வேலை எவ்வளவு மேன்மையானது?! யாரோ ஒருவர் உலகவேலையை விரும்பாமல், உங்களுக்காக சுவிசேஷத்தை நேரம் ஒதுக்கிச் சொன்னதினால்தானே நீங்கள் இன்று இரட்சிக்கப்பட்டு இந்த செய்தியை வாசிக்க முடிந்தது?! என்னவொரு சுவிசேஷத்தின் மகிமை!! விந்தை?!!

கர்த்தர் அழைத்தால் தாமதிக்க வேண்டாம். சூழ்நிலையை பார்க்க வேண்டாம். எதிர்பார்ப்புகள், கமிட்மெண்ட் ஏராளம் ஏராளம் உங்களுக்கு இருக்கலாம். அவைகளையெல்லாம் பேதுருபோல உதறித்தள்ளுங்கள். படகையும், பிடித்த மீனையும் விட்டுவிட்டு ஓடி வந்தவனல்லவா?! கர்த்தர் பின்னே ஓடிவந்த யாரை தேவனாகிய கர்த்தர் வெறுமனே விட்டிருக்கிறார்?! அழைப்பை அலட்சியப்படுத்த வேண்டாம். அழைப்பை கேட்டு ஓடி வாருங்கள். அகிலமெல்லாம் பயன்படுத்துவார். அவரது அழைப்பை இன்னும் எவ்வளவு காலம்தான் சாக்குபோக்கு சொல்லி தள்ளி தள்ளி வைப்பீர்கள்? அழைக்கும்போது வராவிட்டால்… நீங்கள் வர நினைக்கும்போது அவர் அழைக்க மாட்டார்.

கர்த்தர் தமது வேலைக்கு நீங்கள் உண்மையுள்ளவனென்று நம்பி தெரிந்தெடுத்து அழைத்திருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்?! மேன்மை?! யாருக்கு கிடைக்கும் இந்த மகிமை! புகழ்! கனம்!

பொறுப்பு:

சபையில் கொடுக்கப்பட்டுள்ள சிறுசிறு பொறுப்புகளைகூட கனமாக எண்ணி கருத்தாய் வேலை செய்ய வேண்டும். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாக இருந்தான் (எபிரேயர்: 3:2) என்று வாசிக்கிறோம். கர்த்தர் மலையிலே காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி (யாத்திராகமம்: 27:8) உள்ளதை உள்ளபடி கண்ணில் கண்டதை கண்டபடியே நேர்த்தியாக உண்மையாக அதை செய்து முடித்தான். உடன் வேலையாட்களும் அவனது தரிசனத்திற்கு ஒத்துப்போயினர். அதனால்தான் ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் மகிமை இறங்கியது தங்கியது.

நீதிமொழிகள்: 22:29 – “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனைக் நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்”.

சபையில் எந்தவொரு பொறுப்பு வகித்தாலும் வேதம் அவர்களை உக்கிராணக்காரர்கள் என்று அழைக்கிறது. நமக்கு கொடுக்கப்படுகிற பொறுப்புகள் அனைத்தும் தேவனால் ஏற்படுத்தப்பட்டதென்று விசுவாசியுங்கள். இல்லாவிட்டால் அதை தேவனாகிய கர்த்தர் வேதத்தில் முக்கியபடுத்தி குறிப்பிட்டிருக்கமாட்டார்.

 ரோமர்: 16:23 – “என்னையும் சபையனைத்தையும் உபசரித்து வருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய எரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்”.

1கொரிந்தியர்: 4:1,2 – “இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம்”.

1கொரிந்தியர்: 9:16,17 – “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்கு பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே”

தீத்து: 1:7 – “ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், …” இருக்க வேண்டும்.

1பேதுரு: 4:10 – “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்

லூக்கா: 16:2 – “… உன் உக்கிராணக் கணக்கையொப்புவி…”

கடைசி நாட்களில் சபையில் இருக்கும் அனைவரிடமும் தேவனாகிய கர்த்தர் கணக்கையொப்புவிக்க சொல்வார். ஆம் சபையிலிருக்கும் நாமனைவரும் உக்கிராணத்துவ பொறுப்பு வகிக்கும் உரிமையுள்ளவர்கள். இந்நாட்களில் சபைகளில் இருக்கும் அநேக தேவபிள்ளைகள் சபையில் யாதொரு பொறுப்பும் இன்றி, ஆராதனைக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்களேயன்றி மற்றேதும் செயலாற்றாமல் முடங்கி போயிருக்கிறார்கள். 

அப்படிப்பட்டவர்களை சபை மேய்ப்பர் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறிந்து ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் மீண்டும் அவர்கள் உக்கிராணத்துவ பொறுப்பு வகிக்கிறவர்களாக மாற்ற பிரயாசப்படுவது சபைக்கும், விசுவாசிக்கும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.

உக்கிராணத்துவ பொறுப்புகள்


  • v  சபைக்கு வராதவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துதல்
  • v  ஞாயிறு ஆராதனைக்கு வராதவர்களை வரும்படி உற்சாகப்படுத்துதல்
  • v  புதிய ஆத்துமாக்களை ஆராதனைக்கு அழைத்து வருதல்
  • v  நடக்க இயலாதவர்கள், வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வையிழந்தோர் போன்றோரை ஆராதனைக்கு தங்கள் சுய வாகனத்தில் அழைத்து வருதல்
  • v  சபைக்கு வந்திருக்கிற புது ஆத்துமாக்களை நலம் விசாரித்து ஐக்கியப்படுதல், தொடர்ந்து வர உற்சாகப்படுத்துதல்
  • v  புது விசுவாசிகளின் முகவரிகளை சேகரித்தல், ஜெப விண்ணப்பங்களை கேட்டு வாங்குதல்
  • v  புதியவர்களை போதகரிடம் அறிமுகப்படுத்தும்படி வழிநடத்துதல்
  • v  சபை நிகழ்ச்சி நிரல்களை அறிவித்தல்
  • v  சபை தோட்டத்தை பராமரித்தல்;  வாகனங்களை ஒழுங்குபடுத்துதல்
  • v  காலணிகளை சீரமைத்தல்; குடிநீர் பராமரிப்பு
  • v  மின் விளக்கு மற்றும் மின் விசிறி பராமரிப்பு
  • v  அலுவலக பராமரிப்பு; அலுவலக வேலைகள்
  • v  மேடை, புல்பீட் மற்றும் ஆலய சுத்திகரிப்பும் அலங்கரிப்பும்
  • v  PA System, மைக், கீ போர்டு பராமரித்தல்
  • v  இசை வாசித்தல், டிரம்ஸ், கிட்டார் வாசித்தல் மற்றும் பாடகர் குழு தலைவர், பாடகர், பாடகி
  • v  பாய் விரித்தல், சேர்ஸ் போடுதல்
  • v  வீட்டுக்கூட்டங்கள், கேர் செல், கிளை சபைகள், சண்டே ஸ்கூல் நடத்துதல்
  • v  ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், வாலிபர் ஐக்கியம், மூப்பர் ஐக்கியம் நடத்துதல், பங்கெடுத்தல்
  • v  கிராம ஊழியம் செய்தல், மிஷினரி ஊழியம் செய்தல், கைப்பிரதி ஊழியம், தெருப்பிரசங்கம் செய்தல்
  • v  பிரசங்க நேரத்தில் போதகருக்கு உதவியாக வசனம் வாசித்தல்
  • v  விசேஷித்த கூட்டங்களுக்கு உதவி செய்தல்: நோட்டீஸ் விநியோகம், போஸ்டர் ஒட்டுதல், ஆட்டோ விளம்பரம்
  • v  பிரசங்கியாரை அழைத்து வருதல், வழியனுப்புதல், பராமரித்தல், உபசரித்தல்
  • v  சுவிசேஷ கூட்டங்களில் குறுநாடகம் போடுதல்
  • v  ஆறுதல்படுத்துதல், வியாதியில் விசாரிப்பு, துக்க வீட்டில் பங்கெடுப்பு,
  • v  ஏழை எளியோருக்கு உதவுதல், பரிசுத்தவான்களின் குறைச்சலில் உதவுதல்
  • v  மிஷினரிகளை தாங்குதல், நிலம் வாங்கி, சபை கட்டிக் கொடுத்தல்
  • v  ஆலயத்திற்கு வேண்டிய உபகரணங்களை வாங்கிக் கொடுப்பதில் முன்வருதல்
  • v  புதிய ஏற்பாடு, கைப்பிரதிகள் அச்சடித்து கொடுத்தல் – சவதரித்தல்
  • v  முகாம்கள் நடத்தப்படும்போது தங்களால் இயன்ற வேலைகளை முழுவீச்சோடு செய்தல்
  • v  சபையில் நடக்கும் ஜெபங்களில் பங்குபெறுதல், ஜெபத்தை நடத்துதல்

மேற்கண்டவைகளில் உங்களால் எதை உற்சாகமாக செய்ய முடியுமோ அதில் முழு உத்வேகத்தோடு ஈடுபடுங்கள். அதுதான் உங்கள் உக்கிராண பொறுப்பு. உக்கிராண உத்தியோகம். கர்த்தர் அதைக்கண்டு உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் என்ன செய்ய விரும்பகிறீர்கள் என்பதை சபை போதகரிடம் கலந்துபேசி முடிவெடுங்கள். அழைத்தனுப்பி செய்வதல்ல உக்கிராணத்துவம். பிடித்துத் தள்ளியோ, இழுத்தோ செய்யப்படாமல்… தன்னார்வத்தோடு செய்வதே உக்கிராண உத்தியோகம் ஆகும்.

ஏசா – வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தானே தவிர, தன் சொந்த குடும்பத்திற்கும், தேவனுடைய வீட்டிற்கும் அவன் உண்மையாயிருக்கவில்லை. இன்றைக்கு உலகில் அநேகர் வல்லவர்களாயிருக்கின்றனர். ஆனால், தங்களின் வீட்டிலும் தங்காமல், தேவனுடைய வீடும் தங்காமல் வன சஞ்சாரிகளாக ஊர் சுற்றிகளாக, வீதிகளிலும், முச்சந்தி, நாற்சந்திகளிலும் உலா வருகிறதை அனுதினமும் நாம் காண்கிறோம். உலகில் வாழும் அநேக வல்லவர்கள் வனசஞ்சாரிகள்தான்

1தீமோத்தேயு: 5:8 –“ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” என்ற வசனத்தின்படி, ஏசா – தன் சொந்த தாய் தகப்பன் வீட்டையும் நேசித்து பராமரிக்கவில்லை. மனநோவாகவே இருந்தான்.  தேவனுக்கும் பிரியமாக இருந்ததில்லை. தன் சொந்த தகப்பனையும் தாயையும் அலட்சியம் பண்ணுகிறவனாய் இருந்தான். தேவனது முதண்மையானவைகளையும் அலட்சியம் பண்ணுகிறவனாய் இருந்தான்.

யோபு: 39:5-7 – “காட்டுக்கழுதையை தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர் நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன். அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம் பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை”.

அநேகமாக இது ஏசாவைப்பற்றிய தீர்க்கதரிசனமாகத்தான் இருக்க வேண்டும் என கருதுகிறேன். ஏசா ஒரு காட்டுக்கழுதை என்பது நிச்சயமாக தெரிகிறதல்லவா?!

நாமோ… நம் சொந்த வீட்டையும், வீட்டாரையும் பராமரிப்பதுமன்றி, தேவனுடைய வீட்டையும் பராமரிப்பவர்களாய் இருப்போம். அதுவே தேவன் விரும்பும் கிறிஸ்தவ உக்கிராணத்துவ உத்தியோக ஜீவியமாகும்.

2.   ஆவிக்குரிய விவாகஞ் செய்வதில் அலட்சியமாய் இருக்கக்கூடாது: (ஆதியாகமம்: 26:34,35)


திருமணம் இரண்டு வகைப்படும்: அவை: 1. ஆவிக்குரிய விவாகம் 2. அந்நிய விவா(நு)கம்

ஏசா செய்த திருமணம் எப்படிப்பட்டது?

ஆதியாகமம்: 26:34 – “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய  யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான்”.  அது மட்டுமா?

ஆதியாகமம்: 28:9 – “ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபோயாத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான்”.

சங்கீதம்: 118:15 - “நீதிமான்களின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு” என்று வேதம் கூறுகிறது. 

ஆனால், ஏசாவின் கூடாரத்தில் என்ன தொனி கேட்கிறது?!

    ஏத்தியரில் இரண்டு மனைவிகளும், இஸ்மவேலில் இரண்டு மனைவிகளும் ஆக மொத்தம் நான்கு மனைவிகளை புறஜாதி வம்சத்தில் மணமுடிக்கிறான். ஏசா ஒரு பின்மாற்றக்காரன். முதலிரண்டு மனைவிகள் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் அரோகரா போடுகிறது. இஸ்மவேலின் குமாரத்திகளுக்கு பிறந்த பிள்ளைகள் அல்லாகூ என கூப்பாடு போடுகிறது. ஆக மொத்தத்தில் அந்த வட்டாரமே கர்த்தருடைய நாமத்தை மறுதலிக்க செய்து விட்டான் ஏசா. இப்படிப்பட்டவனிடத்தில் தேவனாகிய கர்த்தர் எப்படி பிரியமாய் இருப்பார்? இரட்சிப்பின் அனுபவத்தில் உள்ள ஈசாக்கும் ரெபேக்காளும் தினந்தோறும் இக்காட்சியையும் கூப்பாடுகளையும் எப்படி சகித்துக் கொண்டிருப்பார்கள்?

                    எனவேதான் ரெபேக்காள் தன் புருசனாகிய ஈசாக்கினிடத்தில் சொல்கிறாள்: 

ஆதியாகமம்: 27:46 – “… ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணை கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்”.

 2 கொரிந்தியர்: 6:14 – “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?”
உபாகமம்: 22:10 – “மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக”
எண்ணாகமம்: 23:9 – “… அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்”

அந்நியநுகத்திலே ஏசா தன்னை இணைத்துக் கொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அது …

ஏறுக்கு மாறு செய்தல், இடக்கு மடக்கு செய்தல் என்று சொல்வதுபோல…
தன் சகோதரனாகிய யாக்கோபின்மேல் இருந்த கோபம், இயலாமையின் வெளிப்பாடு மற்றும் தன் தாய் தந்தையின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக, அவர்களை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே தீமையை வருவித்துக் கொண்டவன்தான் இந்த ஏசா.
ஆவிக்குரிய பிள்ளைகள் ஆவிக்குரிய திருமணம்தான் செய்திட வேண்டும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
நாம் வாழும் இவ்வுலகில் நம்மை வழுவிபோகச் செய்யும் பல யுக்திகளை மாற்று மதத்தினர் செய்து வருகின்றனர். இரட்சிப்பின் அனுபவத்தில் உள்ள வாலிபர்கள் மற்றும் வாலிப சகோதரிகள் இவ்விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும்.
லவ் ஜிகாத்:
“காதல்” – “லவ் ஜிகாத்” - என்ற பெயரில், இரட்சிப்பில் உள்ள வாலிபனை, வாலிபியை மயக்கி அவர்கள் பக்கமாய் மனதை திருப்பி பின்மாற்றத்திற்குள் வழி நடத்த சாத்தான் முயற்சிக்கிறான். இதில் விழாதபடி பரிசுத்த அலங்காரத்துடன் தேவனை தொழுது கொண்டு, ஜெபத்தோடு வாழ பிரயாசமெடுங்கள். உங்கள் ஆவிக்குரிய வாழ்வை பரிசுத்தத்தினாலும், ஜெபத்தினாலும், வேதவாசிப்பினாலும் காத்துக் கொள்ளுங்கள்.
காந்தர்வ திருமணம்:
இது தாய் தகப்பனுக்கு தெரியாமல் செய்திடும் காதல் திருமணம். அதாவது திடீரென மாம்ச இச்சையினால் தோன்றும் கள்ளக் காதலுக்கு இந்துக்கள் வைத்த பெயர் காந்தர்வ திருமணம். இதெல்லாம் இதிகாசமென்னும் கட்டுகதை புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அநேக இதிகாச தெய்வங்கள் காந்தர்வ முறைப்படி திடீரென திருமணம் செய்து அடுத்த நொடியிலேயே ஒரு குழந்தையை கொடுத்து விட்டு ஓடிப்போவார்கள். அதுதான் இதிகாச கதைகளில் காதல் இரசம் சொட்டச்சொட்ட எழுதப்பட்டிருக்கிறது. இது ஒருவகை பிசாசின் தந்திரம். இதில் வாலிப சகோதர சகோதரிகள் விழாதபடி எச்சரிக்கையாயிருங்கள். இச்சையடக்கமுள்ளவர்களாயிருங்கள். வேலை பார்க்கும் இடங்களில், பள்ளி கல்லூரிகளில் வலைவீசும் துன்மார்க்கர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் எதற்கும் இடங்கொடாதீர்கள்.
எபிரெயர்: 13:4 – “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்”.

3.   நமக்குள் இருக்கும் தேவபயத்தை நாம் அலட்சியபடுத்தக்கூடாது: (ஆதியாகமம்: 27:41)


“யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும். அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்” என்று வாசிக்கிறோம்.

ஏசா தன் இருதயத்திலே ஆவிக்குரிய எண்ணங் கொண்டவனாக, ஆவிக்குரியவனாக இருந்திருக்க வேண்டும். மாறாக, அவன், தன் இருதயத்திலே, யாக்கோபைப் பற்றிய பகை, கசப்பு, கொலைவெறி உடையவனாக இருப்பதை காண்கிறோம். பகை, கசப்பு, கொலைவெறி நமக்குள் இருந்தால் நம்மில் இருக்கும் தேவனைப்பற்றிய பயம் அகன்று விடும் என்பதை அறிந்திருந்தும் அவைகளை அடைகாத்து வைத்து தன்னை மாம்சத்திற்குரியவனாக காண்பிக்கிறான்.

ஆவிக்குரிய மனிதனின் அடையாளங்களைப்பற்றி நமதாண்டவர் இயேசுகிறிஸ்து தன் மலைப்பிரசங்கத்தில் சொல்லும்போது …
1.   ஆவியில் எளிமை,
2.   சாந்த குணம்,
3.   நீதியின்மேல் பசிதாகம்,
4.   இரக்கம்,
5.   இருதயசுத்தம்,
6.   சமாதானம்,
7.   நீதியினிமித்தம் துன்பம் அனுபவித்தல் - போன்ற சுபாவமுள்ளவர்களாய் காணப்பட வேண்டும் என விரும்பினார் (மத்தேயு: 5:3-11).

மேலும், பேதுரு ஆவிக்குரிய திவ்விய சுபாவங்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறதையும் 2பேதுரு: 1:3-7 விவரிப்பதை வாசிக்கிறோம். அவை:
1.   அதிக ஜாக்கிரதை (விழிப்புணர்வு),
2.   விசுவாசம்,
3.   தைரியம்,
4.   ஞானம்,
5.   இச்சையடக்கம்,
6.   பொறுமை,
7.   தேவபக்தி,
8.   சகோதர சிநேகம்,
9.   அன்பு என்னும் இவைகளே! 

இவைகளெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. கூடுமானவரை இவைகளை நம் அனுதின வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய குணநலன்களாகும். அப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நற்கிரியைகளை நடப்பிக்கிறவர்களாகவும், செய்கிறவர்களாகவும் காணப்படுவோம் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.
இவைகளை தவிர்த்தால், நேரெதிராக இருப்பது மாம்ச சுபாவந்தானே! தேவபயத்துடன் காணப்படுகிற எவரும் ஆவிக்குரிய திவ்விய சுபாவங்களில் வளரும்படி பிரயாசப்படுவார்கள். ஆர்வமெடுப்பார்கள். அது இல்லாதவர்கள், தங்கள் சுய இச்சைகளின்படி வாழவும், திரியவும், மாம்சத்தைப் பிரியப்படுத்தவும், மாம்சத்தின் கிரியைகளில் தீவிரமாக செயல்படும்படி ஆர்வப்படுவார்கள். அவர்களுடைய எல்லாவித நடக்கைகளிலும், செயல்களிலும் மாம்சத்தின் கிரியைகள் பளிச்சென அனைவருக்கும் தெரியும்படி இருக்கும். தேவபயம் என்பது இப்படிப்பட்டவர்களுடைய மனதில் சிறிதளவுகூட இருக்காது.
தேவபயம் என்பது இவர்களது மனதில் இல்லாதபடியினால், எவ்வித துணிகரமான செயலையும் தயக்கமின்றி செய்யத்துணிவர். சண்டாளத்தனங்களையும், சமுதாயசீர்கேடுகளையும், பாவத்தின் கடைசி எல்லையையும் ஈவு இரக்கமின்றி செய்ய கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களால் சமுதாயமும், இவ்வுலகமும் தாங்கவொண்ணா துயரங்களை அனுபவிக்கும். அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நிம்மதியிருக்காது. நற்பெயரும் இருக்காது. அதைப்பற்றிய கவலை, உணர்வு, பயம் ஏதுமின்றி திரிவர். அவர்களால் செய்யத்தக்க நல்ல காரியங்கள் இவ்வுலகில் எதுவுமிராது. இப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய மனிதனுக்கு இருக்க வேண்டிய அடையாளங்களையும், திவ்விய சுபாவங்களையும் அலட்சியப்படுத்தி விடுவார்கள். தேவபயமிராது. தங்களுக்குள் இருக்க வேண்டிய தேவபயத்தை உதாசீனப்படுத்தி அலட்சியம் பண்ணுவார்கள்.
சீர்கேடுகளின் மொத்த உருவம் ஏசா
எபிரெயர்: 12:15,16 – “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலகமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்”.
1.   தேவனுடைய கிருபையை இழந்து போனவன்
2.   கசப்பின் ஆணிவேரை தனக்குள் கொண்டவன்
3.   கலகமுண்டாக்குகிறவன்
4.   வேசிக்கள்ளன்
5.   போஜனத்துக்காக தேவனுக்குரிய முதண்மையானவைகளை விற்க துணிபவன்; விற்றவன்
6.   சீர்கெட்டவன்
ஒரு மனிதனுக்கு எது இருக்கக்கூடாதென்று தேவன் விரும்பினாரோ … அவையனைத்தும் ஏசாவில் காணப்பட்டது. பிறகு, எப்படி தேவன் இவனில் பிரியமாயிருப்பார்??? மேற்கண்ட சுபாவங்கள் அனைத்தும் சாத்தானிடத்தில் காணப்பட்டவை. அது தனக்குள் வர, ஏசா அனுமதித்து விட்டானே. அதன் விளைவு? எதை பெற விரும்பினானோ … அதை அவன் வாழ்நாளில் ஒருநாளும் ஒன்றையும் பெறவில்லை என்பதுதான் பரிதாபகரமானது. சீர்கேடுகள் ஒருபோதும் நமக்கு நன்மையைக் கொண்டு வராது என்பதை அறிவோமாக.
எபிரெயர்: 12:17 – “ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்”.

“பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்”         இதன் பொருள் என்னவென்று அறிவீர்களா?

ஆதியாகமம்: 27:38-40 - “ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான். அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்”.
ஈசாக்கினிடத்தில் ஆசீர்வாதத்தை பெறும்படி யாக்கோபு முந்திக்கொண்டு விட்டான். பிற்பாடு வந்த ஏசா, தான் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, யாக்கோபின்மேல் உள்ள கோபத்தை நேரடியாக அவன்மேல் காண்பிக்க இயலவில்லை. காரணம்? யாக்கோபு தன் மாமனார் லாபான் வீட்டிற்கு போனதினாலும், தன் தகப்பன் முற்பிதாக்களில் ஒருவர். எனவே, அவரிடமும் நேரடியாக காண்பிக்க இயலவில்லை. சபித்து விட்டால் என்ன செய்வது? வயதான தம்பதியரை எப்படி பழி தீர்ப்பது? என யோசித்து, பெற்றோர்களுக்கு மனநோவு மனவலியை எப்படி தருவது என நன்கு யோசித்து… அவர்களுக்கு பிடிக்காத காரியத்தை செய்தால் …. நொந்துபொய் உயிரோடே செத்தவர்களாக தினம் தினம் வலியை அனுபவிப்பார்களே! அந்த தண்டனை கொடுக்க வேண்டும் என கருதி அந்நிய ஜாதி பெண்களை மணமுடித்து அவர்களிருவருக்கும் மனநோவு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டான். 
அதன் விளைவு?
தகப்பனையும், தாயையும் கனம் பண்ணி பெற வேண்டிய ஆசீர்வாதங்கள் – தகப்பனிடத்தில் கேட்டுப் பெற்ற ஆசீர்வாதங்கள் ஆகியவை பெற்றவர்களின் மனவேதனையின் நிமித்தம் ஈசாக்கிடம் பெற்ற ஆசீர்வாதமும் செயலிழந்து போனது. 

முற்பிதாக்கள், கோத்திரப்பிதாக்கள் வாயிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வாக்கும் வார்த்தையும் தேவனாகிய கர்த்தர் அப்படியே எழுத்தும் சொல்லும் மாறாமல் நிறைவேற்றுகிற தேவன்… இப்பொழுது முற்பிதாக்களில் ஒருவராகிய ஈசாக்கு கொடுத்த வாக்குத்தத்த ஆசீர்வாதம் ஏசாவுக்கு பலித்திருக்க வேண்டும். பலிக்கவில்லை. அதை மீண்டும் பெற விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளிவிடப்படுகிறான். அதற்கு காரணம் – அவனது சீர்கேடான எண்ணங்களும், மாம்ச இச்சைகளும், கசப்பான சுபாவங்களும்தான்.
பிற்பாடு தன் தவறுகளுக்கு மனவருந்தி – இழந்தவைகளை மீட்டுக்கொள்ளலாம், ஆசீர்வாதங்களை பெறலாம் என நினைத்தால்கூட முடியாமற் போகக் காரணம்?

 இருதயக்கடினத்தினால், கசப்பினால் ஆரம்பத்திலேயே அதை அவனால் செய்ய இயலவில்லை. கொடுக்கப்பட்ட கிருபையின் காலம் முடிந்த பின் – பெறலாமென நினைத்தால் … தாயும் தகப்பனும் உயிரோடு இல்லை. தான் அவர்களோடு ஒப்புரவாக, மன்னிப்புக் கோர தற்போது அவர்கள் யாரும் உயிரோடு இல்லை. 

தான் முன் செய்த கிரியைகளினிமித்தம் (தேவனுக்கு விரோதமாக, பெற்றவர்களுக்கு விரோதமாக) மனசாட்சி பயங்கரமாய் வாதிக்கிறது. சுடுகிறது. மனதில் ஆறுதலில்லை. படுத்தால் உறக்கமில்லை. தான் செய்த தவறுகள் கண்முன் நிழலாடுகிறது. மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் ஆளில்லை. 

எனவே, மனதிலே இளைப்பாறுதல் பெற வழியுமில்லாமற்போனது. இந்நிலை நம்மில் ஒருவருக்கும் வராதபடி, குற்றமற்ற மனசாட்சியோடு, கசப்பின்றி வாழ, அனைவரோடும் சமாதானத்துடன் வாழ பழக வேண்டும். நம்மை பெற்றவர்களோ, வளர்த்தவர்களோ … மனம் குளிர்ந்தால்தான் அவர்கள் தந்த ஆசீர்வாதமும் பலிக்கும்.
லௌகீக, ஜென்ம, பேய்த்தனத்திற்குரிய ஞானம்:
யாக்கோபு: 3:14-16 – “உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகீக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியம் விரோதமும் எங்கோ உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு” என்று வேதம் கூறுகிறது.
என்றோ நமக்கு நேரிட்ட நிந்தை அவமானத்தை மனதிற்கொண்டு கசப்பை பல வருடங்கள் வரை நீடிக்கும்படி வளர விடக்கூடாது. மறப்போம் மன்னிப்போம் – ஒப்புரவாவோம் என்ற மனநிலைக்குள் கடந்து வரவேண்டும். அதுவே ஆவிக்குரிய தன்மையாகும்.
கசப்பு கொள்வோமானால் … அது பரத்திலிருந்து வருகிற ஞானமல்ல. 1. உலகபிரகாரமானது 2. ஜென்மசுபாவத்திற்குரியது 3. பேய்த்தனத்திற்குரியது என வேதம் சொல்கிறதை வாசிக்கிறோம். இவைகள் நம் வாழ்விற்கு நன்மையை அல்ல; தீமையே வருவிக்கிறது. அப்படியிருக்க, அதை நாம் விரும்புவானேன்?!
மாறாக, எபேசியர்: 4:31 – “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” என்ற வேத வார்த்தையின்படி இவைகளை நம்மை விட்டு விலக்குவோமாக!
பரத்திற்குரிய ஞானம்:
1.   சுத்தமானது
2.   சமாதானம், சாந்தம், இணக்கமுள்ளது
3.   இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தது
4.   பட்சபாதமில்லாதது
5.   மாயமற்றது
6.   சமாதானத்திலே விதைக்கப்படுகிறது
யாக்கோபு: 3:17,18 – “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது”.
தேவனுக்கு பிடித்தமில்லாத மாம்ச சுபாவங்கள், மாம்சத்தின் கிரியைகளை இருதயத்தில் துணிகரமாய் வைத்திராமலும், வாழ்வில் அனுமதியாமலும் தேவபயத்துடன் வாழ வேண்டும். என்னிஷ்டப்படி நான் நடப்பேன், வாழ்வேன். யார் என்னை என்ன செய்ய இயலும் என்ற மனப்போக்கு நம் மனதில் உள்ள தேவபயத்தை நீக்கி துணிகரத்தைக் கொண்டு வந்துவிடும். கர்த்தருக்குப் பயப்படுகிற பயம், வசனத்திற்கு நடுங்குகிற இருதயம், கர்த்தரின் எச்சரிப்புக்கும், ஊழியரின் கண்டிதத்திற்கும் கீழ்படிகிற சுபாவம் உங்களை நல்வழிப்படுத்தும். இவைகளை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. இவைகள் அலட்சியப்படுத்தக்கூடியவைகளுமல்ல என்பதை உணருங்கள். உயர்த்தப்படுவீர்கள்.

4.   தேவபலத்தை அலட்சியப்படுத்தக் கூடாது: (ஆதியாகமம்: 32:6)


ஆதியாகமம்: 32:6 - “அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பி வந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறுபேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்”.
ஆதியாகமம்: 31:24 – “அன்று ராத்திரியிலே தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்”.
ஏசா, லாபான் இவர்கள் இருவரும் யாக்கோபுக்கு தீமை செய்யும் பொருட்டு மாம்சபலத்தில் புறப்பட்டு வருகிறார்கள். அதனால்தான் தேவ எச்சரிப்பு பெறுகிறார்கள். இவர்கள் இருவரும் தனக்கு தீமை செய்ய வருகிறார்கள் என யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் செய்தது என்ன? இதற்கான பதில் கிடைக்கும்வரை இரவெல்லாம் தேவனோடு போராடி ஜெபிப்பதுதான். ஏசா, லாபான் மாம்ச பெலத்தோடு மோத வருகிறார்கள். யாக்கோபோ – தேவபெலத்துக்காக காத்திருக்கிறான். இதுதான் மாம்சத்திற்குரியவர்களுக்கும் ஆவிக்குரியவர்களுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.
மாம்ச பெலனா? தேவபெலனா?
2கொரிந்தியர்: 10:3,4 – “நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது”.
உலகப்பிரகாரமான ஒரு மனிதனுக்கு பிரச்சினை வந்தால் …
1.   ஆள் சேர்ப்பான் – உறவினர், பெரிய மனிதர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அடியாட்கள்
2.   பணம் சேகரிப்பான் – பணபலத்தை காண்பிப்பான்
3.   பொய்சாட்சிகளை ஏற்படுத்துவான்
4.   மாம்ச பலத்தை காண்பிப்பான் – மிரட்டல், வன்முறை
5.   அதிகார பலத்தை காண்பிப்பான் – பதவி, பவிசு, அந்தஸ்து, வம்சாவழிகள்
6.   பேச்சில் வலிமையை காண்பிப்பான் – சுயபலத்தை சார்ந்திருப்பான்
மாம்சமான மனிதனின் மாம்ச பெலன் கண்ணுக்குத் தெரியும். அதைக் கண்டு நாம் மிரண்டு போய்விடக்கூடாது. தேவபெலன் மாம்ச கண்களுக்கு முன்பாகத் தெரியாது. நம் கண்களுக்கு தெரியாததனால் அது வலிமையற்றுப் போகாது.
2ராஜாக்கள்: 6:15-17 – “தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் அண்டவனே, என்ன செய்வோம் என்றான். அவதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”.
யோபு: 1:10 – “நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?...” என்று சாத்தான் யோபுவைக்குறித்து நம் தேவனிடம் கூறுகிறதை கவனியுங்கள்.
நம் கண்களுக்கு நம் சத்துருக்கள் நமக்கெதிராக பின்னுகின்ற வலைகளும், சதிகளும், கூடுகிற கூட்டமும்தான் தெரியும். அதைக்கண்டு திகைக்க வேண்டாம். கண்களுக்கு தெரியா வண்ணம் நம் தேவனாகிய கர்த்தர் சேதம் ஏதுமின்றி நம்மை காத்திட நம்மைச் சுற்றிலும் வேலியடைத்து வைத்திருக்கிறார் என்பதை அறியாதிருக்க வேண்டாம்.
இந்நாட்டை ஆளுகை செய்யும் அரசியல் தலைவர்களுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பை இந்திய அரசு தருகின்றது. ஒன்று தரைவழி பாதுகாப்பு மற்றொன்று வான் வழி பாதுகாப்பு. 

ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தேவன் தரும் பாதுகாப்பு எப்படிப்பட்டதென்று தெரியுமா? மூன்று அடுக்கு பாதுகாப்பு. மனித பாதுகாப்போ, இராணுவ பாதுகாப்போ அல்ல.
1.   யோபு: 1:10 – “அவனையும்” – யோபுவை சுற்றி - முதல் அடுக்கு பாதுகாப்பு
2.   யோபு: 1:10 – “அவன் வீட்டையும்” – யோபுவின் வீட்டைச்சுற்றி – இரண்டு அடுக்கு பாதுகாப்பு
3.   யோபு: 1:10 – “அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி” – யோபுவின் அனைத்து உடமைகளையும் சுற்றி – மூன்று அடுக்கு பாதுகாப்பு
தேவனாகிய கர்த்தர் தம் ஜனத்தைச் சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பினால் வேலியடைத்து பாதுகாத்து வருகிறார். நாம் கர்த்தருடைய பார்வையில் எவ்வளவு விலையேறப்பெற்றவர்களாயிருந்தால் நம்மை இவ்வித விஐபி பாதுகாப்பைவிட அதிக பலமிக்க பாதுகாப்பைக் கொடுத்து நம்மை பாதுகாப்பார் என சிந்தித்துப்பாருங்கள். ஆம் பிரியமானவர்களே!. நாம் தேவனுக்கு மிகவும் முக்கியமானவர்கள். சிலாக்கியம் பெற்றவர்கள்.
உன்னதப்பாட்டு: 4:12 – “என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்”.
அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு இரண்டடுக்கு மனுஷீக பாதுகாப்பு. எந்தவிதத்திலும் முழுமையான பாதுகாப்பை அளிக்கும் என்பது நிச்சயமற்ற ஒன்று. ஆனால், தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் பாதுகாப்போ … “வசனமென்னும் பாதுகாப்பு, தூதர்களுடைய பாதுகாப்பு, பரிசுத்தாவியின் முத்திரை என்னும் பாதுகாப்பு” என்று ஆவிக்குரிய பாதுகாப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பாகும்.
ஆவிக்குரிய மனிதனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் …
1.   கர்த்தருடைய பாதத்தில் விழுவான்
2.   உபவாசம் பண்ணுவான்
3.   கண்விழித்து இரவெல்லாம் தேவ இரக்கத்திற்காக ஜெபிப்பான்
4.   கர்த்தருடைய இரட்சிப்பிற்காக காத்திருப்பான்
5.   தனக்காக ஜெபிப்போரை நாடுவான்
6.   தன்னைத்தான் ஆராய்ந்து பார்ப்பான் – வேதனை உண்டாக்கும் வழியுண்டோ என பார்த்து சரிபடுத்திக்கொள்வான்
7.   ஒப்புரவாகுதல், மன்னிப்பு கேட்குதல், சமாதானம் பண்ணுதலில் ஆர்வமெடுப்பான்
8.   பாடுகளை சகிப்பான், நீடிய பொறுமையுள்ளவனாயிருப்பான்
9.   மாம்ச பலத்தை சாராமல், தேவபலத்தை சார்ந்திருப்பான்
10.  அவதூறு, தூஷணம், வாக்குவாதம், பொறாமை, கசப்பு, வெறுப்பு, பகையை வளர்க்க மாட்டான்
11.  பரிசுத்தவான்களின் ஆலோசனையை நாடுவான். கர்த்தருடைய வழிகளை நோக்குவான்
12.  பணிவும், கனிவும், அன்பும், பரிசுத்தமும் நிறைந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவான்
ஆவிக்குரியவன் எவனும் ஒருபோதும் மாம்ச பலத்தையோ, மாம்சமான மனிதருடைய உதவியையோ நாடமாட்டான். தேவபலத்தை மட்டுமே சார்ந்திருப்பான்.
தீமையோடு எதிர்த்து நிற்கமாட்டான். தீமைக்கு தீமை செய்யமாட்டான். தீமைக்கு தீமை செய்யாமல், தீமைக்கு நன்மை செய்வான். சத்துருக்களை சபிக்க மாட்டான், சத்துருக்களுக்காக ஜெபிப்பான். சத்துருக்களை சிநேகிப்பான். சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு போஜனங் கொடுப்பான். தாகமாயிருந்தால் பானங் கொடுப்பான். இப்படிப்பட்ட சுபாவங்களை தன் வாழ்வில் கொண்டவர்கள்தான் ஆவிக்குரிய தேவனுடைய பிள்ளைகள். இவர்களுக்காக கர்த்தரே யுத்தம் பண்ணுவார். இவர்களோ சும்மாயிருப்பார்கள். மாம்சத்திலே போராட விரும்பாதவர்கள் ஆவிக்குரியவர்கள். முற்றிலும் ஆவிக்குரிய தேவபலத்தை மட்டுமே சார்ந்திருப்பர்.
மாம்ச பலம் – தேவ பலத்தின் முன் தோற்றுப்போகும். எவ்வளவுபேரை திரளாக கூட்டி வந்தாலும் மாம்ச பெலன் கர்த்தருக்கு முன்பு ஒடுங்கி நடுங்கி ஓடிப்போகும். மாம்ச பெலனால் ஆவது என்று ஒன்றும் இல்லை. ஆவியின் பெலனோ சகலத்தையும் மேற்கொள்ளும்.
இதுவரை … நாம் “வல்லவனும் வனசஞ்சாரியுமான ஏசா”வின் வாழ்வின் மூலம் - ஆவிக்குரிய வாழ்வில் நாம் செய்யத்தக்கவைகள் எது? செய்யத்தகாதவைகள் எது? என்பதை விளக்கமாக தியானித்தோம். கற்றுக்கொண்டவைகளில் நிலைத்திருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

God Bless You