நவம்பர் 08, 2019

வேதத்தில் உள்ள வாலிபர்கள்

இந்த காலத்தில் வாலிபர்கள் தேவனுக்காக செயல்படுவதைக் காட்டிலும் உலகத்தின் அதிபதிக்காக செயல்படுவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். தங்கள் நேரத்தை செல்போனிலும், சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் தான் அதிகம் செலவழிக்கிறார்கள். வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் நேரத்தை செலவழிப்பதை வீண் என கருதுகிறார்கள். சாத்தான் தன்னுடைய வலையில் வாலிபர்களையும் வாலிப பிள்ளைகளையும் சிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறான். இளைய குமாரனை போல வழி தப்ப செய்து மேலான ஆசீர்வாதங்களை பிடுங்கிக் கொண்டு கீழானவைகளை கொடுத்து பரம தகப்பனின் அன்பை விட்டு விலக்கி விடுகிறான். அதை அறியாத வாலிபர்கள் அவன் தந்திர வலையில் சிக்குண்டு பாடுகளை அநுபவித்த பின்னர் தான் "ஐயோ! நான் பரத்துக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் என் தந்தையின் வீட்டில் ஒரு வேலைக்காரனை போலாகிலும் வேலை செய்ய போகிறேன்." என்று இளையகுமாரனை போல மனந்திரும்பி வருகின்றனர். ஆகவே வாலிபர்களே! வாலிப பிள்ளைகளே! மாயையான இந்த உலகத்தின் காரியங்களில் சிக்குண்டு போகாமல், நல் நேசராகிய இயேசு கிறிஸ்துவை பிடித்து கொள்ளுங்கள்.

வேதத்தின் வாயிலாக சில வாலிபர்களை குறித்தும் அவர்களின் ஜீவியத்தை குறித்தும் அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தை குறித்தும் இந்த செய்தியில் பார்ப்போம்.

1. இயேசு கிறிஸ்து


இயேசு இந்த பூமியில் நம் பாவங்களை நீக்க மனிதனாக வந்துதித்தார். அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் திவ்விய சுபாவங்களை வெளிப்படுத்தி பரிசுத்தமாக, தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார். அவர் வாலிபனாக இருந்த காலங்களில் வெளிப்படுத்தின குணாதிசயங்களை பார்ப்போம்.


  • கீழ்ப்படிதல்


 லூக்கா:2:51- "பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்."

-    இயேசு தான் வாலிபனாக இருந்த நாட்களில் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிதலுள்ள மகனாக இருந்தார்.தன் ஊழியத்திற்கான நேரம் வரும் வரை காத்திருந்து தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து வந்தார். தான் தேவகுமாரன் என்று அவர் மேன்மைபாராட்டாமல் தாழ்மையுள்ளவராக இருந்து எல்லா காரியங்களிலும் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்திருந்தார்.

  • வேத அறிவு பெற்றவர்
லூக்கா:2:46 - "மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்."

- தன்னுடைய 12 வது வயதிலேயே போதகர்கள் நடுவில் சந்தேகங்களை தீர்க்கவும் தியானிக்கவும் பேசவும் வேத அறிவு பெற்றவராக விளங்கினார்.


  • கடமையை நிறைவேற்றுதல்


யோவான்:19:25-27 - "இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்."

- தான் மரிக்க வேண்டிய நேரம் வரும்போது தன் தாயை கண்ட இயேசு தனிமையாக இருப்பதை பார்த்து தன் தாயை கடைசி காலத்தில் கவனித்து கொள்ளும்படியாக தன் சீஷனாகிய யோவானை ஏற்படுத்தினார். ஒரு மகனாக தன் பூமிக்குரிய கடமையை நிறைவேற்றினார்.


இயேசு தன் வாலிப நாட்களில் பரிசுத்தமாக தன்னைக் காத்துக்கொண்டு தேவனுக்கு பிரியமாக பெற்றோருக்கு நல்ல மகனாக இருந்ததினால் அவருக்கு தேவன் சில காரியங்களில் வளர்ச்சியை தந்தார்.

லூக்கா:2:52 - " இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்."

1. ஞானம் 

ஞானம் - தேவனிடத்திலிருந்து வருவது

யாக்கோபு:1:5 - "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்."

யாக்கோபு:3:17 - "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது."

தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஞானம் குறைவற்றது. சாலொமோனை போல ஞானவான் அவனுக்கு முன்னிருந்ததுமில்லை. அவனுக்கு பின் எழும்பினதுமில்லை. ஏனென்றால் அவன் தேவனிடத்திலிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டான். கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஞானம் கொடுக்கப்படும். (நீதி:1:7) கர்த்தரிடத்தில் சாலொமோன் ஞானத்தை விரும்பி கேட்டான். அவனுக்கு கொடுக்கப்பட்டது. 

நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாக இருந்தால் கர்த்தரிடத்தில் கேளுங்கள். பரத்திலிருந்து வருகிற ஞானத்தை பெற்று கொண்டால் உலகத்தின் காரியங்களை எளிதில் எதிர்கொள்ளலாம். 
-  இயேசு ஞானத்தை பெற்றுக்கொண்டு தேவாலயத்திலுள்ள அறிவுசார் பெரியோர்களான பரிசேயர்களையும் வேத பாரகரையும் எதிர்கொள்ள முடிந்தது. அவர்கள் தங்களது பேச்சு சாதுர்யத்தினால் ஜனங்கள் மத்தியில் இயேசுவை வீழ்த்த வேண்டுமென்று பல முறை முயன்றும் தோற்று போனார்கள். காரணம், இயேசு பரத்திலிருந்து ஜோதிகளின் பிதாவினிடத்தில் ஞானத்தை பெற்று கொண்டு விருத்தியடைந்தார். 

மத்தேயு:22:17-21 - "ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்."

இயேசுவை ரோமர்களிடம் மாட்டிக்கொள்ள வைக்கும்படியாக அவரிடம் வரிகொடுத்தலை பற்றி பரிசேயர்கள் கேட்டனர். அவர்களின் திட்டத்தை அறிந்த இயேசு ஞானத்தை வெளிப்படுத்தினார்.

மத்தேயு:22:23-32 - "உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்து போனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்."

சதுசேயர் இயேசுவை குற்றங்கண்டுபிடிக்கும்படியாக அவரை சோதிக்கும்படிக்கு உயிர்த்தெழுதலை குறித்து அவரை கேள்வி கேட்டனர். பழைய ஏற்பாட்டில் பிதாவினால் நியாயப்பிரமாணம் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆகவே அந்த நியாயப்பிரமாணத்திலிருந்து இயேசுவிடம் இந்த கேள்வியை கேட்டால், அவர் பழைய ஏற்பாட்டு சட்டத்தை மீறி சொன்ன குற்றத்திற்காக  தண்டிக்க முடியும் என்ற நோக்கத்தில் அவரிடம் கேட்டனர். ஆனால் இயேசு அவர்களை தன்னுடைய ஞானத்தினால் வென்றார்.

2. வளர்ச்சி  

வளர்ச்சி என்பது சரீரத்திலும் ஆவிக்குரிய காரியங்களிலும் வளர்வது.

இயேசு தன்னுடைய சரீரத்திலும் ஆவிக்குரிய திவ்விய சுபாவங்களிலும் வரங்களிலும் கனிகளிலும் வளர்ந்தார். 

வளர்ச்சி என்பது அத்தியவாசியமானது. ஒரு செடி வளர்ந்தால் தான் கனி கொடுக்க முடியும். அந்த செடி வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்து வேண்டும். அதே போல் தான் ஒரு மனிதன் வளர்ந்து கனி கொடுக்க தேவையான  ஊட்டச்சத்து - ஜெபமும் வேதவாசிப்பும் மட்டுமே. இவையிரண்டும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி பூரணமாகும். ஊட்டச்சத்தின் அளவு குறைந்தால் வளர்ச்சியும் குறைவுபடும். கனி கொடுப்பது தடைப்படும். 

1சாமுவேல்:2:26 - "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்."

சாமுவேல் தன்னுடைய சிறு பிராயத்திலேயே கர்த்தருடைய சந்நிதியில் வளர்க்கப்பட்டான். கர்த்தருக்கு பிரியமான பிள்ளையாக வளர்ந்ததினால், தீர்க்கதரிசியாக மாறினான்.  தாண் முதல் பெயர்செபா மட்டும் அவன் பெயர் விளங்கினது. தேவ சமூகத்தில் வளர்க்கப்பட்ட பிள்ளை ஒரு குறைவில்லாமல் பூரண வளர்ச்சியடையும்.

தேவ ஊழியக்காரனான ஏலியின் குமாரர்களும் கர்த்தருடைய சந்நிதியில் தான் வளர்க்கப்பட்டார்கள்.ஆனால் அவர்கள் கர்த்தருக்கு பிரியமாக நடந்துகொள்ளாதபடியால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

எரேமியா:18:4 - "குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்."

ஒரே குயவனின் கையில் தான் இருவரும் வனையப்பட்டார்கள். ஆனால் ஒருவன் கெட்டுப்போன மண்பாண்டம் (ஓப்னி, பினேகாஸ்); இன்னொருவன் விட்டுக்கொடுக்கும் மண்பாண்டம்(சாமுவேல்). கெட்டுப்போன மண்பாண்டம் என்று குயவன் தூக்கி எறியாமல் மீண்டும் தமக்கு ஏற்றபடி வனைய முயன்றும் திரும்ப திரும்ப கெட்டுபோன காரியங்களை செய்ததால், குயவனால் தமக்கேற்றபடி வனைய முடியவில்லை. ஆனால் விட்டுக்கொடுக்கும் மண்பாண்டத்தை தமக்கு ஏற்றபடி அழகாக வனைந்தார்.

"கெட்டுபோன மண்பாண்டமாக இருக்காதே ! விட்டுக்கொடுக்கும் மண்பாண்டமாக இரு! கர்த்தர் உன்னை உருவாக்குவார்."

1சாமுவேல்:16:7 - "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்."

இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படும்படிக்கு சாமுவேல் ஈசாயின் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொருவனையும் பார்த்தார். எலியாபை பார்த்த சாமுவேல் அவனின் சரீர வளர்ச்சியை மட்டுமே பார்த்தார். ஆனால் அவன் இருதயம் சுத்தமில்லாமலிருக்கிறதை கவனிக்கவில்லை. கர்த்தரோ ஒரு மனிதனின் சரீர வளர்ச்சியை மட்டுமல்ல ஆவிக்குரிய வளர்ச்சியையும் பார்ப்பார்.

யோசுவா ஆசரிப்பு கூடாரத்தை விட்டு பிரியாமல் ஆண்டவரோடு நெருங்கி வாழ்ந்தான். அவருடைய சமூகத்தில் வளர்ந்தான். பின்னாட்களில் அவன் மோசேக்கு அடுத்த பெரிய பொறுப்பில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி கானான் தேசத்தை சுதந்தரித்தான். கர்த்தருடைய சமூகத்தில் அவரால் வளர்க்கப்பட்டவர்கள் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றார்கள்.

3. தேவகிருபை 

கிருபை - தகுதியில்லாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் பரிசு (அ) விலைமதிப்பற்ற அன்பு

கிருபையானது மனிதனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக பரிசாக கொடுக்கப்பட்டது.  தேவ கிருபை இல்லாவிட்டால் நாம் என்றைக்கோ மரித்திருப்போம்.

தீத்து:2:11 - "ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி"

அவர் நம்மேல் வைத்த கிருபையினால், நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் நமக்காக பலியானார். விலைமதிப்பில்லாத அவருடைய பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். அவர் தேவகிருபையில் விருத்தியடைந்ததினால் நமக்கும் அந்த கிருபையை ஈவாக தந்தருளினார்.

இளைய குமாரன் மனந்திரும்பி தன் தகப்பனிடத்தில் வந்த போது அவர் அவன்மேல் கிருபையை காண்பித்தார்.(லூக்கா:15:20 - 24)

1. மனதுருகி கட்டிக்கொண்டு முத்தமிட்டார்
2. உயர்ந்த வஸ்திரத்தை உடுத்துவித்தார்
3. மோதிரத்தையும் பாதரட்சைகளையும் அணிவித்தார்
4. கொழுத்த கன்றை அடிப்பித்து விருந்து வைத்தார்
5. கீத வாத்தியம் முழங்கி சந்தோஷப்படுத்தினார்

தன் தகப்பனுடைய கிருபையை விட்டு விலகின இளைய குமாரனுக்கு கிடைத்தது பன்றியின் உணவு மட்டுமே. கர்த்தருடைய கிருபையை விட்டு விலகும் போது மேலான ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். நாம் எப்போதும் அவருடைய கிருபையின் நிழலிலே இருக்கும்போது சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. தன்னுடைய தகுதியை இளைய குமாரன் இழந்துபோனான். ஆனால் அவன் மனந்திரும்பி வந்த போதோ, தகுதியில்லாத அவனுக்கு அளவில்லா அன்பு காட்டப்பட்டது. இதுதான் கிருபை!

இயேசுவானவர் கிருபையில் விருத்தியடைந்து நமக்கும் அந்த கிருபையை தந்துள்ளார். தன்னுடைய சிலுவை மரணத்தினால் நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்து, தகுதியில்லாத நம்மேல் அளவில்லா விலையேற பெற்ற அன்பை பொழிந்து, தகுதியுள்ளவனாகவும் தகுதியுள்ளவளாகவும் மாற்றினார். இதற்கு காரணம் அவர் நம்மேல் வைத்த கிருபை!


4. மனுஷர் தயவு  

தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது

எபேசியர்:2:27 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."

கர்த்தரின் தயவு புறஜாதிகளாக இருந்த நம்மை மீட்டெடுத்து நீதிமானாக்கி ஆபிரகாமின் பிள்ளைகளாக மாற்றி உன்னத பரலோகத்தை பெறும்படி செய்ததது.

மனுஷர் தயவும் நமக்கு தேவை. காரணம் - மனுஷருடைய தயவு அந்தந்த இடத்தில் கிடைக்கும்போது நாம் காத்திருக்க தேவையில்லாமல் நாம் நினைத்த காரியம் எளிதில் முடியும்.கர்த்தருடைய தயவினால் அந்தந்த மனிதர்கள் கண்களில் தயை கிடைத்து நாம் நினைத்த காரியம் நடைபெறும்.

மனுஷர் தயவு என்பது சுற்றுபுறத்தில் சமாதானமாக இருத்தலையும் குறிக்கும். நம்மை சுற்றியுள்ள இடங்களில் நாம் சமாதானத்தோடு இருக்கவேண்டும். நாம் படிக்கும் இடங்களில், வேலை செய்யும் ஸ்தலங்களில் எங்கும் சமாதானம் இருக்க வேண்டும். நம்மை குறித்து நல்ல சாட்சி கொடுக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் கண்களில் நமக்கு தயை கிடைக்க வேண்டும். எந்தவொரு பிரச்சினையிலும் அகப்பட்டு பெயரை கெடுத்து கொள்ளாமல் சமாதானத்துடன் இருக்க வேண்டும்.

யோசேப்பு போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருந்த போது அவனுக்கு போத்திபாரின் கண்களில் தயை கிடைத்ததினால் அவன் அடிமைபோல் நடத்தப்படாமல், கனத்திற்குரியவனாக நடத்தப்பட்டான். அவனோடு கர்த்தர் இருக்கிறார் என்றும் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்றும் போத்திபார் அறிந்து கொண்டான். அவன் மேல் தயவு வைத்து அவனை வீட்டு விசாரணைக்காரனாக்கினான்.

ஆதியாகமம்:39:2-4 - "கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்."

ஆகவே மனுஷர் தயவிலும் அதிகமதிகம் விருத்தியடைய வேண்டும்.

இயேசு வாலிபனாக இருந்த நாட்களில் இந்த எல்லா காரியங்களிலும் விருத்தியடைந்தார். தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார்.

வேதாகமத்திலுள்ள இன்னும் சில வாலிபர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பரிசுத்த ஜீவியத்தின் காரியங்களோடு மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....

அதுவரை கர்த்தர் உங்களோடு இருப்பாராக!

                                                                                                                          தொடரும்.....