ஏப்ரல் 14, 2017

ஒரு குற்றமும் இல்லாதவரும் – ஒரு குற்றத்தையும் காணாதவனும்

Image result for john:19:4

“ஒரு குற்றமும் இல்லாதவரும் – ஒரு குற்றத்தையும் காணாதவனும்”

திறவுகோல்வசனம்: யோவான்: 19:4 – “பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்”.

இயேசு குற்றமற்றவர் என்பதற்கு சாட்சிகள்:

1.   மாற்கு: 14:55,56 - பிரதான ஆசாரியர், ஆலோசனை சங்கத்தாரின் பொய் சாட்சி
2.   மாற்கு: 14:58,59 - அநேகரின் பொய் சாட்சிகள்
3.   மத்தேயு: 27:19 - பிலாத்துவின் மனைவி – “நீதிமான்”
4.   மத்தேயு: 27:4 – யூதாஸ்காரியோத்து – குற்றமில்லாத இரத்தம்
5.   லூக்கா: 23:41 – குற்றவாளிகளிலொருவன் – “தகாததொன்றும் நடப்பிக்காதவர்”
6.   லூக்கா: 23:47 – நூற்றுக்கதிபதி – “நீதிபரர்”

பிலாத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆறு காரியங்கள் மூலமாய் பரிசோதித்து பார்த்து, அவரிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை என கண்டறிந்தான்.

யோபு: 23:10 – “… அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்”.

எபிரெயர்: 4:15 – “…எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்”.

எபிரெயர்: 2:17,18 – “அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்”.

மாற்கு: 1:13 – “அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் சாத்தானால் சோதிக்கப்பட்டு, …”

1பேதுரு :1:7 – “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்”.

பிலாத்து ஒரு ரோம ஆளுநர். யூதர்கள் ரோம ஆளுகைக்குட்பட்டவர்கள். எனவே, நியாப்பிரமாணத்தின்படி ஒருவனை தண்டிக்க வேண்டியதாயிருந்தாலும், அதை ரோம சட்டப்படிதான் தண்டிக்கப்பட வேண்டியதேயல்லாமல் யூதர்கள் இஷ்டத்திற்திற்கு தண்டித்துவிட முடியாது (யோவான்: 18:31). எனவே, யூதர்கள் இயேசுகிறிஸ்துவை எப்படியாகிலும் கொலை செய்து விட வேண்டும் என முடிவெடுத்தபின், அதை ரோம சட்டத்தின் வாயிலாகவே செய்துவிட பிலாத்துவுக்கு முன்பாக  நீதி விசாரணைக்கு கொண்டு செல்கிறார்கள்.

மாற்கு: 15:9 – “பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக் கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து…” என்று வேதம் சொல்கிறது.
பிலாத்துவும் இயேசுவை ஆறு முறை நீதி விசாரணை செய்து பார்க்கிறான். இந்த ஆறுமுறைகளும் ரோம அரசின் விதிகளுக்குட்பட்டு விசாரணை, புலன் விசாரணை செய்து, முடிவில் அவர் குற்றமற்றவர் என கண்டறிந்தான். எந்தெந்த வகையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்? என்பதையும் பார்ப்போம்.

யோவான்: 8:46 – “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?...” என்றார்.

விசாரித்த முறைகளும், விசாரணையில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும்: (யோவான்: 19:1-10)

1.   யோவான்: 19:1 – “அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்”.

வார் – மிருகத்தின் தோலினால் செய்யப்பட்டவை. ஆதியாகமம்: 3:21 – “தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்”. மனிதனுடைய நிர்வாணத்தை மூட உதவிய மிருகத்தின் தோல், இப்போது மனிதனுடைய மீட்பின் திட்டத்திற்காக இரட்சகர் இயேசுவின் முதுகில் ஒன்றுகுறைய 39 அடிகள் வாரினால் அடிகள்பட நேர்ந்தது. நமது நிமித்தம் அவர் அடிக்கப்பட்டார்.

2.   யோவான்: 19:2 – “போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து,…”

முள் – ஆதியாகமம்: 3:18 – “அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்;…”. மனிதனுடைய பாவத்தின் விளைவினால் பூமியில் முளைத்தது முள். பாவமுள். அது இரட்சகர் இயேசுவின் தலையை பதம் பார்த்தது.

3.   யோவான்: 19:2 – “… சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:”

சிவப்பங்கி – சிவப்பான நூலால் தயாரிக்கப்பட்டது. சிவப்பு நிறம் – பலியையும், தியாகத்தையும் குறிக்கிறது. சிவப்பான நூல் அதிகமாக ஆசரிப்புக்கூடாரத்திலும், அதன் வாசஸ்தலத்திலும், ஆரோனின் உடுப்பிலும், சிரசிலும் உபயோகப்படுத்தப்பட்டது. ஆசரிப்புக்கூடாரத்தில் மூடுதிரை மற்றும் தொங்கு திரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

யாத்திராகமம்: 26:31; 35:6,23,25,35; 36:8,35,37. ஆசாரியனின் உடுப்பில், சிரசில் பயன்படுத்தப்பட்டது. யாத்திராகமம்: 28:5,6,8,15,33; 39:1-3,5,8,24,29. ஆசரிப்புக் கூடாரத்திற்கு வரும்போதெல்லாம் மனிதனுடைய பாவத்தின் மீட்பிற்கு ஒரு பரிகாரம் உண்டு என்பதையும், ஆரோனுடைய சிரசிலும், உடுப்பிலும் காணும்போதெல்லாம் பாவபரிகாரம் செய்ய ஒரு மீட்பர் வருவாரென்பதையும் நினைவுபடுத்தும்.

4.   யோவான்: 19:3 – “யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்”.

புகழ்வதைப்போல இகழுதல் - பரியாசம் - கேலியும், அடிகளும் – ஆதியாகமம்: 3:5 – “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்… என்றது” சாத்தானுடைய பொய்யான வாக்குறுதி நிறைவேறியதா? இல்லையே?! 

ஆதியாகமம்: 3:7 – “அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து,…” என்று வேதம் கூறுகிறது. நிர்வாணி என்று யார் இவர்களுக்கு சொல்லியிருப்பார்கள்? ஆதாமும், ஏவாளும் மனதளவில் குழந்தைகளாகவும், சரீர அளவில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கிறவர்கள். உலகிலே பேசும் மொழியை தினந்தோறும் கற்றுத்தருகிற ஆசான் தேவனாகிய கர்த்தர் ஒருவரே. அப்படியிருக்க, சொல்லித்தராத புது வார்த்தை “நிர்வாணி” என்ற சொல். 

ஆதியாகமம்: 3:11 – “அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?...” என தேவன் கேட்டார். தேவன் சொல்லித்தரவில்லையென்றால்…. இந்த புது சொல்லை அவ்விருவருக்கும் யார் கற்றுத்தந்திருக்ககூடும். சாத்தானைத் தவிர வேறு யார்? 

தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்று ஆரம்பத்தில் தூண்டி விட்டவன், கட்டளையை மீறின பின்பு கண்கள் திறக்கப்பட்டப் பின்பு “நிர்வாணி” என்று கேலியும் பரியாசமும் செய்கிறான் சாத்தான். பாவத்தையும் செய்ய வைத்து, பரியாசமும் செய்து தண்டனையும் வாங்கித் தருபவனே சாத்தான். நமது அக்கிரமங்களினிமித்தம் அவர் அடிக்கப்பட்டார்.

5.   யோவான்: 19:7-9 – “யூதர்கள் அவனுக்குப் பிரதியத்திரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாக வேண்டும் என்றார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய் பயந்து, மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை”.

பிலாத்துவின் பயம் கலந்த விசாரணை – பிலாத்துவுக்கு இரண்டுவித பயங்கள் வந்திருக்க வாய்ப்புள்ளது. 1. யூதரைக்குறித்த பயம் 2. இயேசுவைக் குறித்த பயம். யூதருடைய ஆதரவின்றி தேசத்தில் அமைதி இராது. அமைதி நிலவாவிட்டால் தன் பதவிக்கு பங்கம் ஏற்படும். இயேசு தேவகுமாரனென்றால் தேவனுடைய தண்டனைக்கு ஆளாவோம். முதல் நான்கு தடவை விசாரணை முறைப்படி செய்தபோது யாதொரு குற்றமும் இவரிடம் இல்லை என்பது தெளிவுபட அறிந்து கொண்டான். அப்படியிருக்க, இப்போது மனிதாபிமான முறையில் விசாரிக்க முயலுகிறான்.

6.   யோவான்: 19:10 – “அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலை பண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்”.

ரோம ஆளுநர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி பிலாத்து அதிகாரத்துடன் விசாரணை செய்கிறான்.

பிலாத்துவின் விசாரணை முறை:

1.   குற்றம் சுமத்தப்பட்ட நபரை ரோம அரசு சட்டப்படி விசாரிக்கிறான் – வசனம் 1
2.   இழிவுபடுத்தி விசாரிக்கிறான் – வசனம் 2
3.   போர்ச்சேவகர் வசம் ஒப்புவித்து விசாரிக்கிறான் – வசனம் 3
4.   அடித்து விசாரிக்கிறான் - வசனம் 3
5.   மனிதாபிமான அடிப்படையில் விசாரிக்கிறான் – வசனம் 9
6.   தன் ஆளுநர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரிக்கிறான் – வசனம் 10

இவையெல்லாவற்றிலும் அவர் குற்றமற்றவர் என் கண்டறிந்து மக்களின் முன் கொண்டு வருகிறான். எதற்காக? இயேசு குற்றமற்றவர் என்பதை அவர்களும் அறிந்து கொள்வதற்காக. இவ்வுலகம் குற்றமற்றவர் என்பதை இப்படித்தான் சோதித்தறியும் போல.

சோதிக்கப்பட்டு வெளிவரும்போது …

யோவான்: 19:4 – “… நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்”.

அவர் நீதிபரர் என்றும், குற்றமற்றவர் என்றும் நிரூபிக்கப்படும்போது, சோதிக்கப்பட்டு வெளிவரும்போது அவரது நிலை, “அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் இல்லாதிருந்தது” என்பதே. (ஏசாயா:53:2).

சகேயுவின் நிலை:

“… என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குச் கொடுக்கிறேன்; எவனிடத்திலாகிலும் அநிநியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாக திரும்பச் செலுத்துகிறேன் என்றான்” (லூக்கா: 19:8). 

உலகில் சம்பாதித்த அனைத்தையும் ஒன்றுவிடாமல், மிச்சம்மீதி இல்லாமல் இழந்து விட்டான். உலகப்பிரகாரமாக, சரீரப்பிரகாரமாக அவன் வெற்று ஆள். ஆனால், இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” (லூக்கா: 19:9) என்றார்.

பிலிப்பியர்: 2:15 – “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,…”

1பேதுரு: 1:19 – “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே”.

சோதிக்கப்பட்டு வெளிவரும்போது – உலகிற்கு முன்பு நாம் ஒன்றுமற்றவர்கள். ஆனால், கனமும் மகிமையும், புகழ்ச்சியும் கர்த்தரால் வரும். ஆபிரகாமுக்குப் பிள்ளைகளாயிருப்போம்.

யூதா:1:24,25 – “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக ஆமென்”. 

ஏப்ரல் 04, 2017

“ஈஸ்டர்” (EASTER) - ஒரு தெளிவான விளக்கம்


“ஈஸ்டர்” (EASTER) 
                                                                     
“ஈஸ்டர்” (EASTER) என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் ஒரே ஒரு இடத்தில் அதாவது, அப்போஸ்தலர்: 12:4 – ல் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் ஆங்கில வேதாகமத்தில் மட்டுமே காணப்படுகிறது. அதற்கு தமிழ் வேதாகமத்தில் “பஸ்கா” என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

“ஈஸ்டர்” என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு சரியானதல்ல. இதில் ஈஸ்டர் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காமல், மற்ற வேதாகம பகுதிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது போலவே “Passover – பாஸோவர்” அதாவது “பஸ்கா” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் வேதாகமத்தில் பாஸோவர் என்ற ஆங்கில வார்த்தைக்கு பஸ்கா என்ற வார்த்தையையே பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் வேதாகமத்தையும் ஆங்கில வேதாகமத்தையும் யோவான்: 13:1 ஐ ஒப்பிட்டுப் பார்க்கும்போது … “பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு …” ; “Now before the feast of the passover, when Jesus”  - என்று உள்ளதின்படி, தமிழ் வேதாகமம் அதனை பஸ்கா என்றே மொழிபெயர்த்திருக்கிறது.

“ஈஸ்டர்” (EASTER) என்ற சொல் புறமதத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். “ச-க்‌ஷன்” (SAXON) காலத்திய சொல்லாகும். அது சக்‌ஷன் மக்களின் தேவதையைப் பற்றியதாகும். அதாவது, “ஈஸ்ட் ஈஸ்ட்ரா” (EAST EASTERA) என்ற தேவதையைப் பற்றியதாகும். அதன் பண்டிகை வசந்த காலத்தில் பஸ்கா காலத்தையொட்டி வந்தது. அதனால், ஈஸ்டர் என்ற பெயரை இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல், பரத்துக்கேறுதல், பெந்தெகொஸ்தே ஆகியவைகளைக் கொண்ட காலப்பகுதிக்கு பயன்படுத்தும்படி முதலில் பேர் கிறிஸ்தவ மண்டல ஆதிக்கத்தால் செய்யப்பட்டது. அது கிறிஸ்தவ ஸ்தாபனங்களால் எளிதில் புறமதத்தோடு கலந்து கொள்ளும்படி எடுத்த ஒரு பிரயத்தனமாகும்.

கிறிஸ்தவ முறைகளில் காணப்படும் அநேக தளர்த்துதலைப்போல (CONCESSIONS), இந்தக் காரியத்திலும் இது தளர்த்தப்பட்டு கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் நுழைந்தது. ஆனால், இப்பொழுது இந்த வார்த்தை ஒருபோதும் ஈஸ்டர் தேவதையைக் கொண்டாட கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை. புராட்டஸ்டன்ட் (PROTESTANTS) மத்தியில் அந்த பெயரை ஒரு காலத்திற்கு குறிப்பிட்டு பயன்படுத்தியதுபோல பயன்படுத்தாது, குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள்.

 ரோமன் கத்தோலிக்கர்களும் இப்பொழுது அப்படியே உபயோகிக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட நாள்தான் நமது கர்த்தரின் உயிர்த்தெழுதலை எடுத்துக்காட்டும் ஈஸ்டர் ஞாயிறாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு பெரிய கண்ணோட்டத்தில் கத்தோலிக்கர்கள் (CATHOLICS) ஈஸ்டர் என்ற சொல்லை பெரிய வெள்ளிக்கிழமையையும்   (GOOD FRIDAY), உயிர்த்தெழுந்த பண்டிகையையும் சேர்ந்த காலத்திற்கு உபயோகிக்கிறார்கள். அது பஸ்கா காலத்திற்கு ஒரு மறு பெயராக அல்லது இணையான பெயராக வழங்கப்பட்டு வந்தது. கத்தோலிக்கர்கள் திருப்பலி பூசையை நுழைத்து அதனை அடிக்கடி அனுசரித்தல், நமது கர்த்தரின் மரணத்தை வருடந்தோறும் மட்டும் அனுசரிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை முழுவதுமாய் வெறுமையாக்கிவிடும் என்ற நோக்கத்தோடு எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அது அப்படி நடக்கவில்லை. 

குறிப்பிட்ட காலத்தில் கொண்டாடப்படும் பஸ்காவின் ஞாபகார்த்தம் அதன் அர்த்தத்தை இழந்த போதிலும், அந்த ஞாபகார்த்தம் தொடர்ந்து மெய்யான தேவஜனத்தால் அனுசரிக்கப்பட்டு வந்தது. சபை (THE CHURCH) நிலைத்திருப்பதற்கான அடிப்படை அஸ்திபாரமும் உன்னதமுமான மையப்பொருளுமான சத்தியமுமான பஸ்காவை அதாவது திருவிருந்து ஆராதனை மற்றும் கர்த்தருடைய பந்தி  அல்லது நற்கருணையை சரியான காலத்தில் அனுசரிக்கும் ஆதிசபையின் முறைமை சத்தியத்திற்கு பிரதிஷ்டை செய்திருப்பவர்களின் மத்தியில் அதாவது ஆவிக்குரிய     கிறிஸ்தவ சபைகளில் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

அநேக நூற்றாண்டுகளாக யூதகாலண்டர் முறைமையின்படி நமது கர்த்தரின் மரணத்தின் தேதியைக் கணிப்பது வழக்கம். ஆனால், கிறிஸ்தவ மண்டலத்தால் அந்த யூதமுறைமையிலிருந்து விலகி, தற்போது கணிக்கும் முறைமைக்கு ஒரு மாறுதல் கொண்டு வரப்பட்டது.

நிசேயாவில் (NICE) கி.பி.325 ல் கூடிய எக்குமெனிக்கல் கவுன்சில் (ECUMENICAL COUNCIL - கிறிஸ்தவ ஆலோசனை சங்கம்) வசந்த காலத்து சமராத்திரிக்குப் பின்வரும் (SPRING EQUALNOX) முதல் பெளர்ணமியைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை ஈஸ்டராகக் கொண்டாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

அது நமது கர்த்தரின் மரணத்தை பெரிய வெள்ளிக்கிழமை என்று உலகம் முழுவதும் ஆசரிக்கும் அனுசரிப்பை நிறுவியதுமல்லாமல், பரிசுத்த வேதாகம சத்திய வசனத்தின்படி நமது அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து, நமக்காக பஸ்கா பலியாக சிலுவையில் மரித்ததினிமித்தம் யூதமுறைமையின்படி பஸ்கா ஆசரிப்பு அனுசரிப்பதை புறக்கணித்தது. 

யூதமுறைமையின்படி பஸ்கா பலியாக ஆண்டவர் இயேசுவே நம் பாவங்களுக்கு பலியானதினிமித்தம், இனி நாம் பலி செலுத்த வேண்டியதாயிராமல், குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்காகவும் பலியானதினிமித்தம், நாம் இப்போது அவரது மரணத்தை நினைவு கூறும் பொருட்டு “திருவிருந்து” என்றும் “நற்கருணை” என்றும், “கர்த்தருடைய பந்தி” என்றும் சொற்களால் அழைக்கப்படுகின்ற ஆசரிப்பை அனுசரிக்க ஆணை பிறப்பித்தது.

நாளடைவில் இந்த பெளர்ணமியைத் தொடரும் ஞாயிறு ஈஸ்டராகவும், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை “பெரிய வெள்ளி” அல்லது “நல்ல வெள்ளி” என்றும் கொண்டாடப்படலாயிற்று.

வெகு நாட்களாக தொடர்ந்து பஸ்கா என்ற வார்த்தையே உபயோகிக்கிப்பட்டது. போப்பின் மதம் (PAPACY) அரசியல் செல்வாக்குடன் ஸ்தாபிக்கப்பட்டபின், இந்த மதம் அரசாங்கத்தின் தயவைப் பெற்றிருக்கிறது என்று அறிந்த புறமதத்தினர், இம்மதத்தில் மந்தை மந்தையாக சேர ஆரம்பித்தனர். இச்சமயத்தில்தான் பஸ்காவுக்குப் பதில் ஈஸ்டர் என்ற பெயர் இடம் பெற்றது.

ஏனென்றால், அதே சமயத்தையொட்டி புறமதத்தினர் தங்களுடைய ஈஸ்டர் தேவதையின் பண்டிகையை கொண்டாடினர். அப்பழக்கத்தினையுடைய புறமதத்தினருடைய செல்வாக்கையும் பெரும் கூட்டத்தையும் சம்பாதிக்க பேரவா திட்டங்களையுடைய கிறிஸ்தவ மத குருக்கள் கையாண்ட அநேக முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது புறமதத்தினரை வசீகரித்து கிறிஸ்துவினுடையவர்களாக்க மத குருக்கள் கையாண்ட வழிகளில் ஒன்று. அவர்களது பண்டிகையை கிறிஸ்தவ மயமாக்குதலாகும்.

யூதர்கள் இன்னும் வசந்த காலத்து சமராத்திரிக்காகக் காத்திருந்து அமாவாசை நாளில் தங்கள் முதல் மாதத்தின் முதல் தேதியை உறுதிப்படுத்தி, அதிலிருந்து 14 நாட்கள் கழித்து பெளர்ணமி அன்று பஸ்காவை அனுசரித்து வருகிறார்கள். அவர்கள் அதை செய்து கொள்ளட்டும். அவர்களுக்கு அதில் முழு உரிமை உண்டு. அதனால் நமக்கென்ன வந்தது? நாம் கிறிஸ்தவர்கள். பஸ்காவை ஆசரிக்க நாம் ஒன்றும் யூதர்கள் அல்ல. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள்

எனவே, கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும்படி திருவிருந்து என்கிற கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க (அப்பமும் இரசமும் புசிக்க பானம் பண்ண) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளோம். 

இந்த யூத முறைமைக்கும் கிறிஸ்தவ முறைமைக்கும் கணிப்புகளில் சில சந்தர்ப்பங்களில் சுமாராக ஒரு மாத கால அளவு வித்தியாசம் வருகிறது. அதனால் ஒரு கேடும் வரப்போவதில்லை. பாதகமில்லை. நாள் நட்சத்திரம், அமாவாசை பெளர்ணமி, ராகு, கேது, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து அனுசரிக்கவோ, ஆசரிக்கவோ நாம் புற மதத்தினர் அல்ல. யூதரும் நாம் அல்ல. நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டவர்களும் அல்ல. நமக்காக பஸ்கா பலியான இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள். விஷயம் இதுதான். கர்த்தர் வருமளவும் நாம் அவர் மரணத்தை தெரிவிக்கிறோம். நினைவு கூருகிறோம். திருவிருந்து என்கிற நற்கருணையை தவறாது ஆசரிக்க வேண்டும் அவ்வளவுதான்.

நமது கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எடுத்துக் காட்டும் எந்த ஒரு ஞாபகார்த்தமும் அவருடைய ஜனங்களுக்கு மிகவும் மதிப்பிற்குரியதாயிருக்கிறது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்பவர்களுக்கும், மரணத்தை தெரிவிப்பவர்களுக்கும் ஈஸ்டர் ஞாயிறு மட்டுமல்ல,  ஒவ்வொரு ஞாயிறும் உயிர்த்தெழுதல் ஞாயிறுதான். வாருங்கள்! நமது இரட்சகரும் மீட்பருமாகிய உலகின் பாவம் சுமந்து தீர்த்த பஸ்கா பலியான தேவாட்டுக்குட்டியுமான கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை தொழுது கொள்ளுவோம். ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையிலும் தவறாது தொழுவோம் வாருங்கள்.