ஏப்ரல் 24, 2019

சிலுவையின் மேன்மை


சிலுவையின் மேன்மை


Image result for image of cross


“சிலுவை” என்பது …

-    மீட்பு கொடுக்கும் இடம் விசுவாசிகளின் பாவத்தின் கிரயத்தை இயேசு கொடுத்தார். (மாற்கு:10:45, 1 தீமோ:2:6)

-    குற்றங்களை மன்னித்துத் தேற்றும் இடம். இயேசுவின் பூரணபலியானது அவரை விசுவாசிப்பவர்களுக்கு பிதாவின் தண்டனையை அகற்றியது. (ரோமர் 3:25)                                                                                                                                                                                                                                        
-    வெற்றி பெற்றுக் கொள்ளும் இடமாகும். மனிதவர்க்கத்தின் மீது பிசாசு வைத்த பிடியை இயேசுவின் பலி தோற்கடித்தது (யோவான்: 12:31-32)

“சிலுவை” என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 83 தடவை எழுதப்பட்டிருக்கின்றன.

இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சிலுவையை குறித்து போதித்தார்.

மத்தேயு:16:24 – “அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

எபேசியர்: 2:16 – “பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.”

இயேசு கிறிஸ்து தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை கல்வாரி சிலுவையில் சிந்தி மனுக்குலத்துக்கு பாவமன்னிப்பாகிய நித்திய மீட்பை உண்டுபண்ணினார். பகையை சிலுவையினால் கொன்று, சமாதானத்தை உண்டாக்கி, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கினார்.

சிலுவையின் மேன்மையான காரியங்கள்


1.   கிழக்கு திசை

முந்தின ஆதாம் பின்பு வந்த கிறிஸ்துவுக்கு முன்னடையாளம். ஆதாம் நிமித்தம் மனுக்குலம் முழுவதும் பாவிகளானவர்கள். பிந்தின ஆதாமாகிய கிறிஸ்துவினால் பாவத்திற்கு பரிகாரம் உண்டாயிற்று.

முந்தின ஆதாமை தேவனாகிய கர்த்தர் “கிழக்கே” ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி அதிலே வைத்தார். எனவே பாவம் ஆரம்பித்த உற்பத்தியான இடம் கிழக்கு திசை தான்.

ஆதியாகமம்:2:8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.”
இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து, ஆதாமின் மீறுதலாகிய பாவத்தை போக்க கிழக்கிலே அவதரித்தார்.

மத்தேயு:2:2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.”

முதல் ஆதாமால் கிழக்கு திசையில் உண்டான பாவத்தைப் போக்க கிறிஸ்து கிழக்கு திசையிலே பிறந்தார். பாவ நிவாரணம் உண்டான திசையும் கிழக்கு. இது தேவனின் பரம ஞானம் !!!

2.   மரம்

பாவமானது நன்மை தீமை அறியதக்க ஒரு மரத்தினால் வந்தது. (ஆதியாகமம்:3:6,7)          
இயேசுவை ‘மரத்திலே’ தூக்கிக் கொலை செய்தார்கள். (அப்போஸ்தலர்:10:39)

மரத்தினால் உண்டான பாவத்தை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தினால் போக்க வேண்டுமென்பது தேவனுடைய அனந்த ஞானம் !!!

கலாத்தியர் :3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.”

3.       நடுமரம்

ஆதியாகமம்:3:3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.”

தோட்டத்திலிருந்த நடுமரத்தினால் உலகத்திற்கு பாவம் வந்தது. ஆகவே பாவத்தை போக்க இயேசு கிறிஸ்து இரண்டு கள்ளர்கள் நடுவே சிலுவையில் அறையப்பட்டார்.

யோவான்:19:18 – “அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.”

4.       தொங்கினது

ஆதியாகமம்:2:17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”      
   
பாவத்திற்கு காரணமாயிருந்த விருட்கத்தின் கனி வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தது. இயேசுவும் பாவநிவாரணபலியாக, வானத்துக்கும் பூமிக்கும் நடுவில், சிலுவையில் தொங்கினார். தொங்கின கனியால் வந்த பாவத்தை ஜீவ விருட்சத்தின் கனியாகிய இயேசு போக்கினார்.

5.   புசிப்பு

ஆதியாகமம்: 3:6 – “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.”

ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்ததினால் பாவிகளானார்கள். ஒரு கனியை புசித்ததினால் வந்த பாவத்தை போக்க இயேசு கிறிஸ்து தன் மாம்சத்தை புசிக்கும்படி செய்தார்.

யோவான்:6:53 – “அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

மத்தேயு:26:26-28 அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.”

மரத்தில் தொங்கின கனியில் இயற்கையாகவே சதை – சாறு என இரண்டு வஸ்துக்கள் உண்டு. சதை – சாறு ஆகிய இரண்டு வஸ்துக்களுமே மனிதனை பாவத்திற்குள்ளாக்கியது. இயேசு கிறிஸ்துவின் மாம்சம் – இரத்தம் மூலம் பாவம் நீங்கியது. பாவமன்னிப்பு உண்டானது.

பாவம் எந்த வழியில் எந்தெந்த முறையில் வந்ததோ, அதே அடையாளப்படி பாவநிவாரணம் உண்டாக வேண்டுமென்பது தேவனுடைய அநாதி தீர்மானமாயிருக்கிறது.

-    பாவம் ஸ்திரீயின் மீறுதலின் மூலமாக உலகத்தில் வந்தது. இயேசு கிறிஸ்து ஒரு ஸ்திரீயின் மூலமாக பிறந்து, பாவத்தை போக்கினார். (ஆதியாகமம்:3:15)

-    முந்தின ஆதாம் தேவ கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அதை மீறினதினால் தேவ மகிமை இழந்து பாவத்துக்குள்ளானான். இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய எல்லா கட்டளைகளையும் நிறைவேற்றி சிலுவையிலே வெற்றி சிறந்தார். (கொலோ:2:13-15)

இயேசு கிறிஸ்து தமது சிலுவை மரணத்தினாலே சாத்தானின் தலையை நசுக்கி வெற்றி சிறந்தார்.

எபிரேயர்:2:14,15 ஆதலால், பிள்ளைகள்  மாம்சத்தையும்  இரத்தத்தையும்  உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய  பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.”

1கொரிந்தியர்:1:18 சிலுவையைப்பற்றிய  உபதேசம்  கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,  இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.”


சிலுவையில் பூத்த 7 மலர்கள்

உலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்து மனுக்குலத்துக்கும்  தேவனுக்கும் இடையே இருந்த திரை சீலையை இரண்டாக கிழித்த நம் இயேசு,  கொல்கதா மலையில் மூன்று ஆணிகளில் தொங்கினவராய் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காய் சிந்தி கல்வாரி சிலுவையில் ஏழு பூக்களை உதிர்த்தார்.

1)       மன்னிப்பு:  "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே"            லூக்கா: 23 : 34

2)       இரட்சிப்பு: "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்"            லூக்கா 23 : 43 

3)       அரவணைப்பு: தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்.      யோவான் 19 : 26-27

4)       தத்தளிப்பு:  ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். “      மத்தேயு 27 : 46  

5)       தவிப்பு: எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்."            யோவான் 19:28

6)       அர்ப்பணிப்பு: இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.                 யோவான் 19 : 30

7)       ஒப்புவிப்பு:  இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார்.       லூக்கா 23:46



ஏப்ரல் 10, 2019

காரியம் மாறுதலாய் முடிந்தது


காரியம் மாறுதலாய் முடிந்தது

Image result for bible mordechai image

தி.கோ.வசனம்: எஸ்: 9:1 “… யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே 
யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்கு காரியம் மாறுதலாய் முடிந்தது”

சிலசமயங்களில் நம் வாழ்வில் இது ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இதை தேவன் அனுமதித்தார் என அநேக வேளைகளில் நமக்கு விளங்குவதில்லை. ஆனால், ஏதோ ஓரு நோக்கத்திற்காக தேவன் நமக்கு அதை அனுமதித்திருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். 

கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையில் எதுவும் 

யதார்த்தமாய் நடப்பதில்லை.

எதிர்காலத்தில் வரும் இக்கட்டுகளுக்கு, பிரச்சினைகளுக்கு தீர்வாக, முடிவை தருவதாகவும், நன்மையில் முடிக்கப்பட உதவியாகவும் இருக்கும்படியாகவே அனுதின வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவங்களும் தேவனால் தீர்மானிக்கப்பட்டவைகளாக நடந்தேறுகிறது. நிகழ்கால வெற்றி மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அஸ்திபாரமாக அவர் முன்னமே பல காரியங்களை நம் வாழ்வில் அடித்தளமாக பல நபர்களை அனுப்பியும், பல சம்பவங்களை நடப்பித்தும் இருக்கிறார் என்பதை நம் அறிவினால் அறிய முடிவதில்லை. நம் கண்களுக்கு சிலசமயம் தெரிவதும் இல்லை.

தற்சமயம் நமக்கு கிடைத்த வெற்றி மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், தேவனாகிய கர்த்தர் அந்த வெற்றியை நமக்கு தருவதற்கும் பெறுவதற்கும் முன்னமே பல சம்பவங்களை, பல காரியங்களை, பல நபர்களை நம் வாழ்வில் நுழைத்து, நமக்கெதிரான சத்துருக்களின் சகல தந்திரங்கள், சூழ்ச்சிகளை முறியடிக்க அனுமதித்துள்ளார் என்பதை நாம் அறிய வேண்டும். ஆனால், அதை நம்மால் அறியமுடியாதபடி ஏதோ ஒன்று தடுக்கிறது. அத்தடைகளை நீக்கி, நம் கண்கள் வசனத்தின் இரகசியத்தை அறிய கண்கள் திறக்கப்பட ஜெபிப்போம். ஜெபத்துடன் வசனத்திற்குள் நுழைந்து தியானிப்போம்.

அகாஸ்வேரு ராஜாவின் நாட்களில் யூதருக்கு விரோதமாக வந்த அழிவின் சட்டம் மாறுதலாய் முடிந்தது என எஸ்தர்: 9:1 ல் வாசிக்கிறோம். இக்காரியம் மாறுதலாய் முடிவதற்கு தேவன் கடந்தகாலத்தில் என்னவெல்லாம் செய்து முடித்திருக்கிறார் என ஒரு ஆய்வு செய்வோம்.

1.   முதல் மாறுதல்:

 வஸ்தியின் ஸ்தானத்திற்கு எஸ்தரை கொண்டு வந்தது - (எஸ்தர்: 2:16;2:7)

தேவனுடைய திட்டம் நிறைவேறுவதற்கு இராஜாத்தியாகிய வஸ்தி 
அகன்று, எஸ்தர் அவ்விடத்திற்கு வரவேண்டியது அவசியமானது. இது மனிதனுடைய பார்வைக்கு யதார்த்தமாய் நடப்பதுபோல தோன்றலாம். ஆனால், இச்சம்பவம் யதார்த்தமாய் நடந்ததல்ல. தேவஜனங்களை காக்கும்படி முன்பே ஏற்படுத்தப்பட்ட தேவனுடைய திட்டம்.

அகாஸ்வேரு அரசாளுகிற 7 ஆம் வருஷம் 10 ஆம் மாதம் 
அரண்மனைக்குள் எஸ்தர் நுழைகிறாள். அகாஸ்வேரு அரசாளுகிற 12 ஆம் வருஷம் 1 ஆம் மாதம் அரண்மனைக்குள் ஆமான் நுழைகிறான். எஸ்தர் அரமனைக்குள் வந்து 5 ஆண்டுகளுக்கு பின்புதான், ஆமான் அரமனைக்குள் வருகிறான். எதிர்காலத்தில் தம் ஜனத்திற்கு வரும் அழிவை முன்னறிகிற தேவனாகிய கர்த்தர், அதை தடுக்கும்படி வரலாற்றில் தலையிடுகிறார் என்பதை நாம் அறிய வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கர்த்தர் ஒருவரே அறிவார். ஆனால், சாத்தானால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய இயலாது.

ஆமானால் அழிவு வரும் என்பதை முன்னறிந்த தேவன், அதற்கு 
முன்னமே எஸ்தரை அரண்மனைக்குள் ராஜாத்தியாக மாற்றி உட்கார வைத்து விட்டார்.

எஸ்தர்: 2:17 – “ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தரின்மேல் அன்பு வைத்தான்; சகல கன்னிகைகளைப் பார்க்கிலும் அவளுக்கு அவன் சமூகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது” அது இறுதிவரை கிடைத்தது. தேவனால் கிடைத்த இந்த கிருபையை எஸ்தர் தன் வாழ்நாளில் இறுதிவரை தக்கவைத்துக் கொண்டாள்.

2.   இரண்டாம் மாறுதல்:

மொர்தெகாயின் உயர்வுக்கு விதை ஊன்றியது: (எஸ்தர்: 2:21-23)

அகாஸ்வேரு ராஜாவுக்கு விரோதமாய் செயல்பட்டவர்களை மொர்தெகாய் பிடித்துக் கொடுத்தான். ராஜாவின் விரோதிகள் தூக்கிலிடப்பட்டனர். இச்சம்பவம் ராஜாவின் நாளாகமம் புத்தகத்தில் குறித்து வைக்கப்பட்டது. இதற்கு இன்னும் பிரதியுபகாரம் செய்யப்படவில்லை. காத்திருப்பில் வைக்கப்பட தேவன் உதவி செய்தார். தேவனுடைய காத்திருப்பில் பிரதியுபகாரம் ஏற்றவேளைக்காக கிடப்பில் போடப்பட்டது.

நாம் செய்த நன்மைக்கு பதில் கிடைக்கவில்லையே என வருத்தப்பட 
வேண்டாம். பிரதிபலன் எதிர்பார்த்தும் எந்த நன்மையும் செய்யவும் வேண்டாம். ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் உடனே எவ்விதமான விளைவும், நன்மையும் கிடைக்காவிடினும், நாம் செய்த நன்மையினால் பிறருக்கு ஆசீர்வாதமுண்டானால் நாம் மெய்யாகவே பாக்கியசாலிகளாயிருப்போம். நம்முடைய நீதியையும், நன்மையையும் மறுந்து விடுவதற்கு தேவன் மனிதனல்லவே. சில பிரதியுபகார நன்மைகள் காலம் தாழ்த்தி வருவது நமக்கு பெருத்த ஆசீர்வாத நன்மையையே கொண்டு வரும்.

3.   மூன்றாம் மாறுதல்:

மொர்தெகாயை ஆமான் கனம் பண்ணும்படி காரியம் மாறுலாயிருந்தது: (எஸ்தர்: 6:10)

ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூர்ணமாய் இருக்கும் என 
வேதம் கூறுகிறது (யோபு: 8:7). அது தேவ பிள்ளைகளுக்கு மட்டுமே. சாத்தானுக்கும் சத்துருவுக்கும் – ஆரம்பம் அமர்க்களமாய் இருக்கும் முடிவு மட்டும் அவன் எதிர்பார்த்திராத வகையில் அமைந்திருக்கும்.

மொர்தெகாயை தூக்கு மரத்திலே உயர்த்த நினைத்தவனுக்கு, 
பட்டணமெங்கும் தாரை ஊதுவித்த தேவன் நம் தேவனல்லவா? (எஸ்தர்:6:11)

தூக்கு மரத்தை ஆயத்தம் செய்துவிட்டு சென்றவன் – சஞ்சலப்பட்டு 
முக்காடிட்டுக் கொண்டு வீட்டுக்குப் போகும்படி செய்தார் தேவன். (எஸ்தர்:6:12)

4.   நான்காம் மாறுதல்:

மொர்தெகாய்க்கு செய்த தூக்கு மரம் ஆமானுக்கே ஆனது: (எஸ்தர்: 5:14)

சாத்தான் எக்காலத்திலும் தேவ ஜனங்களை கொல்லவும் 
அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரலாற்றில் வர மாட்டான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். (யோவான்: 8:44)

யாத்: 1:22 – யூதர்களை அழிக்க “பார்வோன்: பிறக்கும் 
ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டு விடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோட வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்”. சாத்தானால் ஏவப்பட்ட அம்பாகிய பார்வோன் தேவஜனங்களை நைல் நதியாகிய நல்ல தண்ணீரில் கொல்லப் பார்த்தான். தேவனோ, பார்வோனையும், அவன் படைகளையும் சிவந்த சமுத்திரமாகிய உப்புத்தண்ணீரிலே கொன்று போட்டார்.

பார்வோனும் ஆமானும் சாத்தானால் ஏவப்பட்ட அம்புகள் மட்டுமே. 
இப்படித்தான் நடக்கும் என்பது சாத்தானுக்கும் தெரியாது. அவனது அம்புகளாகிய பார்வோனுக்கும் ஆமானுக்கும் தெரியாது. இப்படித்தான் முடிவு இருக்கும் என்று ஒருவரும் அறிய முடியாதபடி தேவனாகிய கர்த்தர் அவைகளை இரகசியமாக வைத்துள்ளார்.

மொர்தெகாயை அழிக்க 50 முழ உயர தூக்கு மரத்தை செய்வித்தான் 
ஆமான். அந்தோ பரிதாபம்! அதிலே அவனே சாகும்படி தேவன் காரியத்தை மாறுதலாக செய்தார். (எஸ்தர்: 7:9,10).

5.   ஐந்தாம் மாறுதல்:

யூதர்கள் தங்கள் சத்துருக்குளை மேற்கொள்ளும்படி காரியம் மாறுதலாயிருந்தது: (எஸ்தர்: 9:1)

காரியம் ஜெயமாக மாற – நம்மேல் வருகிற உபத்திரவங்களுக்காக 
தேவனிடத்தில் துக்கத்தின் கண்ணீரை சிந்தி கதறியழுது உபவாசித்து ஜெபிப்போமானால் – தேவனாகிய கர்த்தர் காரியங்களை மாறுதலாக மாற்றுவார். காரியம் மாறும் என்று நாம் சும்மாயிருந்து விடக்கூடாது. காரியம் மாறுதலாகும்படிக்கு நாம் தேவசமூகத்தில் உபவாசிக்க வேண்டும். அப்பொழுது சத்துருக்கள் வெட்கப்படும்படி, நாம் அவர்களை மேற்கொள்ளும்படி தேவன் அற்புதமான கிரியைகளை செய்வார்.

சாத்தான் என்னதான் தேவ ஜனங்களை அழிக்க, ஆசீர்வாதங்களைக் கெடுக்க 
பல திட்டங்கள் போடலாம். ஆனால், நம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரோ... தம் ஜனத்தைக் காக்கும்படிக்கும், எதிர்காலங்களை அறிந்திருக்கிற தேவன், தம் ஜனத்திற்கு எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நேரிடும் என்பதை முன்னறிகிற கர்த்தர்,  தீமைகள் நம் வாழ்வில்  வருமுன்னே... அதற்கான முன் ஆயத்த காரியங்களை செய்து முடித்திருப்பார். அது நம் கண்களுக்கும், சத்துருவின் கண்களுக்கும் மறைக்கப்பட்டிருக்கும். அப்படி மறைக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் நம் வாழ்வில் செயலாற்ற - நாம் உபவாசித்து தேவ சமூகத்தில் கண்ணீரோடு எஸ்தரைப்போல் மன்றாடும்போது சத்துருவை மேற்கொள்ளும் அதிகாரத்தையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.



கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்