செப்டம்பர் 03, 2012

"பரிசேயர், சதுசேயருடைய இறையியல்"



"பரிசேயர், சதுசேயருடைய இறையியல்"

பரிசேயருடைய இறையியல், சதுசேயருடைய இறையியலைவிட சற்று மாறுபட்டது.

1. பரிசேயர், தேவனிடத்தில் இருந்து எல்லாம் வருகிறது என்றும், அவர் விசாரிப்பார் என்றும், எல்லாம் 'தேவச் செயல்' என்றும் நம்பினர். மனித சித்தத்திற்கு இது முரன்பாடு கொண்டு வராது என்றும் நம்பினர். எல்லாம் முன்பேயே குறிக்கப்பட்டது. எனவே, தெரிந்தெடுப்பின் சுதந்திரம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்பினர்.

ஆனால், சதுசேயர் தனிமனிதனுக்கு உள்ள சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, சரித்திரம் மனிதனால் கட்டுப்படுத்தப்படுகிறது என நம்பினர். சரித்திரம் தேவனால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை மறுத்தனர்.

2. மூதாதையர்களின் பாரம்பரியத்தை பரிசேயர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்த பாரம்பரியத்தின்படி மோசேயின் நியாயப்பிரமாணத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தசமபாகம், ஓய்வுநாள் ஆசரிப்பு, சுத்தமாக இருத்தல் போன்ற காரியங்களில் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் தந்தனர். ஆனால், அனுதின வாழ்வில் அவர்கள் தேவனை விட்டு தூரமாய் இருந்தனர்.

ஆனால், சதுசேயர் எழுதப்பட்ட (பாரம்பரியம்) வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வாய் மொழியால் வந்த வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பழைய ஏற்பாட்டில் வரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

3. பரிசேயர் ஆத்துமா அழியாது என்றும், சரீர உயிர்த்தெழுதல் உண்டு என்றும் நம்பினார்கள். எதிர்கால பிரதிபலனும் தண்டனையும் உண்டு என்று நம்பினர்.

ஆனால், சதுசேயர் இவைகளை நம்புவதில்லை. மறுத்தனர். இவ்வுலக வாழ்வோடு திருப்தியடைந்தனர்.

4. தேவதூதர்கள் உண்டு என்றும், பிசாசுகள் உண்டு என்றும் பரிசேயர்கள் நம்பினார்கள்.

ஆனால், சதுசேயர் இதை நம்புவதில்லை. மறுத்தனர்.


நியாயபிரமாணம் பரிசேயர்களுக்கு மிக முக்கியமாக இருந்தது. பழைய ஏற்பாட்டுகால ஆரம்பத்திலும், புதிய ஏற்பாட்டுகால ஆரம்பத்திலும் வேதபாரகர்கள், போதகர்கள் (Scribes, Rabbis)  நியாயப்பிரமாணத்திற்கு விளக்கம் தந்தனர்.

எபிரேய மொழியை ஆரம்ப காலத்தில் வாசிக்க இயலாது. எனவே, படிக்க முடியாத ஜனங்களுக்கு விளக்கம் தேவைப்ட்டது. எனவே, வேதபாரகர், பரிசேயர் விளக்கத்தைச் சொன்னார்கள். இதனால், மூதாதையரின் பாரம்பரியம் பெருக ஆரம்பித்தது. 

இந்த பாரம்பரியத்திற்கு பரிசேயர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். மேசியாவைக் குறித்த நல்ல எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருந்தது. தாவீது வழியில் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா வருவார் என்றும், எருசலேமை சுத்தம் செய்வார் என்றும், அரசியலில் சுதந்திரம் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பினர்.

ரோம ஆதிக்கத்தை எதிர்த்தனர். அப்படி எதிர்த்தாலும் , கலவரங்களில் ஈடுபடுவதை எதிர்த்தனர். ஏனெனில், தேவன் தம்முடைய நேரத்தில் அவர்களை விடுவிப்பார் என நம்பினர். 

பரிசேயர்கள் தங்களுக்கென்று ஒரு சமுதாயத்தையும் ஐக்கியத்தையும் நியமித்துக் கொண்டனர். நியாயப்பிரமாணத்தைப் படிப்பதற்கென்றும், ஐக்கியபோஜனம் உண்பதற்கென்றும், உபவாசம் செய்வதிலும் முந்தி இருந்தனர். ஆயக்காரர், பாவிகள், விபச்சாரிகள், சாதாரண மனிதர்கள் இவர்களிடம் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர். (லூக்கா: 7:39).

இயேசு பரிசேயரை பல இடங்களில் கண்டிதம் பண்ணுவதை காண்கிறோம். இயேசு அவர்களை "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை" என அழைக்கிறார். இயேசு கிறிஸ்து சில பரிசேயரோடு நட்பு வைத்திருந்தார். லூக்கா: 7:36 ல் சீமோனிடம், யோவான்: 3:1 ல் நிக்கொதேமுவிடமும் மறுபடி பிறத்தலைக் குறித்து விவாதிக்கிறார்.

யோவான்ஸ்நானகன் சதுசேயரையும், பரிசேயரையும் கண்டித்துப் பேசினார். பரிசேயர் இயேசுவை மூன்று காரியங்களில் குற்றம் கண்டுபிடித்தனர்.

1. பாவங்களை மன்னித்தல் (மாற்கு: 2:1-12)

2. ஆயக்காரரோடு, பாவிகளோடு இயேசு பந்தியிருத்தல் (மாற்கு: 2:15-17)

3. இயேசு ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை. (மாற்கு: 2:23-28;   3:1-6)

***