ஜூன் 28, 2020

Trusting the Lord Amidst the Pestilence - வாதையின் மத்தியில் கர்த்தரை நம்புவது

எபேசியர்:3:16,17 - "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,..."

இந்த சூழ்நிலையில் (கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை) நம்மில் அநேகர் பயந்து போய், ஆத்துமாவில் சோர்ந்து போனவர்களாக, உற்சாகம் இல்லாதவர்களாக இருக்ககூடும். பலமில்லாதவர்களாக, நம்மை சுற்றி நடக்கும் காரியங்களை நினைத்து கலங்கி போய் விசுவாசத்தில் குறைந்து போயிருப்போம்.

அதை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டிய 2 காரியங்கள்:


  • ஆவியினாலே வல்லமையாய் பலப்பட வேண்டும்.
  • விசுவாசத்திலும் அன்பிலும் வேரூன்ற வேண்டும்.

இந்த நாட்களில் நாம் சபைக்கு போக முடியாமல் வீட்டிலிருந்தே ஆராதிப்பதினால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலும் வல்லமையிலும் அனலில்லாதவர்களாக வல்லமை இழந்து காணப்படுகிறோம்.

- இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறி சென்ற பிறகு, சீஷர்கள் பலமிழந்து, வல்லமையின்றி பயந்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் கூடி ஜெபித்த போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர்களை நிரப்பியது.

நம்மை சுற்றி நடக்கும் காரியங்களை கண்டோ, மாறி வரும் சூழ்நிலைகளை கண்டோ கலங்காமல், கர்த்தருடைய வல்லமையில் பலப்பட வேண்டும். நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படும் போது, நம்மில் இருக்கும் பயம், நம்பிக்கையற்ற தன்மை போன்ற பழைய காரியங்கள் மறைந்து தைரியம், விசுவாசம், நம்பிக்கை போன்ற புது காரியங்கள் வரும். இந்த புதிய காரியங்கள், நம்மை சுற்றியுள்ள உலகமே பயத்தில் மூழ்கும் போது, நாம் நேராக பலமுடன் நிற்க உதவுகிறது.

2கொரிந்தியர்:5:17 - "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."

1. வாதையை குறித்ததான பயத்தை மேற்கொள்வது எப்படி?

What we should do to overcome the fear of Epidemics?

நமக்கு வரும் வாதையை நினைத்து பயப்படும் பயத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை குறித்து பார்ப்போம்.


  • கர்த்தர் தந்த வாக்குத்தத்தங்களை நினைவுகூறு:  Remember the Promise of the Lord
சங்கீதம்:91:1-6 வரை வாசியுங்கள்.

வரலாறு முழுவதிலும், வேதாகம காலங்களிலிருந்து இன்று வரை நோய்கள் உள்ளன. கிறிஸ்து வரும் வரையிலும் நோய்கள் வந்து போகும். அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் நோய்கள் இருக்க தான் செய்யும். அதன் விளைவுகளும் பயங்கரமாக இருக்கும்.

ஆகவே அதை குறித்து பயப்படாமல், வேத வசனங்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டு ஜெபியுங்கள். தேவனே நமது அடைக்கலமாயிருக்கிறார். ஆகவே எதை குறித்தும் பயப்பட தேவையில்லை. 

நம் வாழ்க்கை கட்டுப்பாட்டை மீறி போகும் போது நாம் உணரும் ஒரு விரக்தியின் உணர்வை ஒரே ஒரு வார்த்தையால் மட்டுமே விவரிக்க முடியும். அது தான் "பயம்".

நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருந்தாலும் சில சமயம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் வரும் போது நாம் சோர்ந்து போகிறோம். காரணம், உள்ளான மனுஷனில் நாம் பலப்படாததினால் தான்.

ஆகவே கர்த்தரின் வாக்குத்தத்தங்களை நினைவுகூரும்போது, நாம் விசுவாசத்தில் பெலப்பட உதவியாக இருக்கும்.

சங்கீதம்:23:1 - "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்."

எந்த காரியங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி நடந்தாலும் பயப்படாதிருங்கள். ஏனென்றால், கர்த்தரே நமது மேய்ப்பர். அவர் நமக்கு புல்லுள்ள செழிப்பான இடத்திற்கு நேராக வழிநடத்துவார். ஆகவே வழியில் முட்களை கண்டாலும், கற்களை கண்டாலும் தாழ்ச்சியடையாமல், சோர்ந்து போகாமல் மேய்ப்பர் இருக்கிறார் என்று அவரையே பின்தொடருங்கள்.


தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை பிடித்து கொண்டு பயத்தை புறம்பே தள்ளி அவரை மட்டும் விசுவாசியுங்கள். நம் வாழ்வில் சோதனைகள் வரத்தான் செய்யும். ஆனால் நம்முடைய திராணிக்கு மேலாக சோதனை வருவதில்லை. நாம் செய்ய வேண்டியது கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பது தான்.

  • கர்த்தரை உறுதியாக பற்றிக்கொள்: Hold the Lord Firmly
கர்த்தரை நம்முடைய வாழ்வில் எந்த வித சூழ்நிலையிலும் உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். அவர் காரியத்தை வாய்க்க செய்வார்.

யோபு:13:15 - "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்."

தனக்கு சோதனை வந்தபோதிலும் யோபு கர்த்தரை விட்டு பிரியாமல், தூஷிக்காமல் அவர்மேல் இன்னும் அதிகமாக நம்பிக்கை வைத்து, கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டான்.

எபிரேயர்:4:14-16 - "வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்."

இயேசுவும் நம்மை போலவே சோதிக்கப்பட்டார். பாடுகளை அநுபவித்தார். ஆகவே, அப்படிப்பட்ட மகா பிரதான ஆசாரியர் நம்முடன் இருப்பதினால் நாம் உறுதியை கைவிடாமல் கர்த்தரை பற்றிக்கொள்வோம்.இயேசுவுக்கு நாம் சந்திக்கும் வலிகள், வேதனைகள் தெரியும். ஏனென்றால், இந்த உலகில் மனிதனாக வாழ்ந்த நாட்களில் அவரும் அதை அநுபவித்திருக்கிறார்.

மத்தேயு:4:4 - "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்."

நாம் விசுவாசத்தில் உறுதியாக இருக்க கர்த்தருடைய வார்த்தை உதவுகிறது. நாம் விசுவாசத்தில் குறைவுப்படும்போது, கர்த்தர் தமது வார்த்தையை கொண்டு தைரியப்படுத்துகிறார். 

2இராஜாக்கள்:18:5,6 - "அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்."

எசேக்கியா ராஜா கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். அவரை சார்ந்து கொண்டான். கர்த்தருடைய வார்த்தையை, கற்பனைகளைக் கைக்கொண்டான்.

2 இராஜாக்கள்:18:7 - "ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்."

கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்ட எசேக்கியா ராஜாவுக்கு கிடைத்த ஆசீர்வாதம் : அவன் செல்லுமிடமெல்லாம் அநுகூலம்

2. வேதாகமத்தில் வாதைகள்: Biblical Epidemics/ Plagues


பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்காததினால் கர்த்தர் 10 வாதைகளை எகிப்தியருக்கு அனுமதித்தார்.  இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் கற்பனைகளையும் நியமங்களையும் கொடுத்து பின்பற்றாமல் போனால் கொள்ளைநோய் வரும் என்று சொன்னார்.

உபாகமம்:28:15,21 - "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்....நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்."

தாவீது தன் ஜனங்களை எண்ணி தொகையிட நினைத்து, யோவாபை அனுப்பினான். அது தவறு என்று அவன் மனம் வாதித்ததினால் பாவத்தை அறிக்கை செய்தான். 

2சாமுவேல்:24:13 - 15 - "அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டு போக வேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்."

காத் தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் மூன்று வாய்ப்புகள் கொடுத்து தேர்ந்தெடுக்க சொன்னார். தாவீது கர்த்தர் கையிலே விழுவோம் என்று சொன்னதினால், கர்த்தர் கொள்ளைநோயை வரப்பண்ணினார். 70,000 பேர் செத்து போனார்கள்.
ஆனாலும் கர்த்தர் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார். தாவீது தேசத்துக்காக வேண்டுதல் செய்தான். வாதை நிறுத்தப்பட்டது. (2சாமுவேல்:24:25)

2 நாளாகமம்:7:14 - "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."

ஆகவே, தாவீதை போல நாம் தேவனுடைய சமூகத்தில் விழுந்து ஜெபிப்போம்! இந்த வாதை நிற்கும்படி வேண்டுதல் செய்வோம். கர்த்தர் நம் தேசத்துக்கு ஷேமத்தை கொடுப்பார்!

2 கொரிந்தியர்:4:17 - "மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."

ஆகவே, இக்காலத்தில் நமக்கு அனுப்பப்பட்ட இந்த உபத்திரவம் நமக்கு நித்திய கனமகிமைக்கேதுவானது. ஆகவே நாம் கவலைப்படாமல் வசனத்தை விசுவாசித்து, பலப்பட்டு, கர்த்தரை உறுதியாக பற்றி கொள்வோம்!

ஆமென்!