ஆகஸ்ட் 24, 2012

"எலித் தொல்லை"





                                                       ****** எலி தொல்லை ******

ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அந்த மனிதன் தான் மனம் திரும்பி இரட்சிக்கப்பட்டவுடன் தன்னுடைய சாட்சியை ஒரு சிறிய கைபிரதியாக 100 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தார். தமது ஊருக்கு யாராகிலும் புதிய பிரசங்கியார் வந்தால்,அவர்களை தம் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து பின்னர் தமது சாட்சி அச்சிட்ட கைபிரதியை கொடுப்பார். இவ்வாறாக பலமாதங்களில் 99 கைபிரதிகளையும் கொடுத்து விட்டு, ஒன்றை 

மட்டும் வைத்திருந்தார்.மீண்டும் அந்த கைபிரதிகளை அச்சடிக்க மனம் இல்லாமல், யாரையாகிலும் காண நேரிட்டால் அவர்களிடம் அந்த கைபிரதியை காட்டிவிட்டு,அந்த கைபிரதியை திரும்ப வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்வார்.


அந்த ஊருக்கு சில நாட்கள் யாருமே புதிய பிரசங்கியார் வரவில்லை.அநேக நாட்களுக்கு பின்னர் ஒரு புதிய பிரசங்கியார் வந்தார். அந்த மனிதன் அந்த பிரசங்கியாரை தமது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த பின்னர் 'நான், எனது சாட்சியை கைபிரதியாக போட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். பிரசங்கியார் இல்லை என்றதும்; அம் மனிதன் தம் மனைவியை அழைத்து 'மாடியில் உள்ள மேசையின் அறையில் தனது சாட்சி கைப்பிரதி உள்ளது அதை எடுத்து வா என்றார். அவர் மனைவி மேலே போய் மேசை அறையில் பார்த்தபோது, சாட்சி கைப்பிரதி காணப்படவில்லை.
 
அந்த அம்மா மாடியில் நின்ற வண்ணமே சத்தமாய், 'என்னங்க,உங்க சாட்சியை காணவில்லை' என்றார்கள். உடனே அந்த மனிதன், Table drayer முழுவதும் வெளியே இழுத்து பார், அதனுள் தான் இருக்கும் என்றார். அந்த அம்மாள் Table drayer ரை முழுவதும் வெளியில் இழுத்து பார்த்தபோது, Drayer இன் ஒரு மூலையில் சாட்சி கைபிரதியை எலி தூள் தூளாக கடித்து போட்டிருந்ததை கண்டார்கள். உடனே அந்த அம்மாள் அங்கிருந்தே 'என்னங்க, உங்களுடைய சாட்சியை எல்லாம் எலி கடித்து நாசப்படுத்தி விட்டது' என்று சத்தமாய் சொன்னார்கள். 

நண்பர்களே! இன்று நம்மில் சிலருடைய சாட்சியின் வாழ்கையையும் பொறாமை, அகந்தை, மேட்டிமை, திருட்டு, விபச்சாரம், வேசித்தனம், சண்டை, கோபம் என்ற எலிகள் கடித்து சாட்சிகளை பலனற்றதாக ஆக்கிவிட்டன.

ஆனால், நம்முடைய தவறை நாம் உணர்ந்து கர்த்தருடைய பாதத்தில் சென்று மன்னிக்கும் படி கதறும் போது, தூய ஆவியானவர் நமக்குள் வந்து நாம் முன் இருந்ததை விட நம்மை பலப்படுத்தி, ஆசீர்வதித்து உயர்த்துவார்.

"நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக." (வெளிப்படுத்தல் 2 : 4,5).

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்."(அப்போஸ்தலர் 1:8).
 
நன்றி: முகநூல்