பிப்ரவரி 24, 2015

இஸ்ரவேலின் விளக்கு


Image result for 2samuel: 21:17

2 சாமுவேல்: 21:17 - "... அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்து போகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்"

விளக்கு:  இருளை அகற்றும். பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும். இருளைக் கண்டு பயப்படுகிற பயத்தை வெளிச்சம் நீக்கும். அதைரியத்தை போக்கி தைரியத்தை கொடுக்கும். நம்பிக்கை பிறக்கும்.

ஆதியில் இருந்து, இந்நாள் வரைக்கும் இருளை அகற்ற மனிதனுக்கு மிக உபயோகமாயிருப்பது விளக்கு. இது இல்லாவிட்டால்... இரவு நேர பயணங்களில் வழி தவறி விடும் வாய்ப்பும், கோரமான விபத்துக்கள் ஏற்படும் நிலையும், சொல்லி மாளாது. கடலில் பயணிக்கும் கப்பலுக்கு ஒரு கலங்கரை விளக்காய், ஆகாய விமானங்களுக்கு ஆகாய வெளிச்சமாய், வாகனங்களுக்கு வெளிச்சமாய் விளங்குவது விளக்கு.

இருளான வீட்டிற்கு வெளிச்சங் கொடுப்பது விளக்கே. இப்படி மனிதனுடைய வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் வழிகாட்டும் வெளிச்சமாய் இருப்பது விளக்கு. இந்த விளக்கு அணையா விளக்காய் ஒவ்வொரு வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிவீசி மக்களுக்கு அரும்சேவையாற்றுகிறது. இப்படிப்பட்ட விளக்கிற்கு ஒப்புமையாக... தாவீதின் மனுஷர் தாவீதை ...  'இஸ்ரவேலின் விளக்கு' என குறிப்பிடுகின்றனர். தாவீது அணைந்தால்... இஸ்ரவேல் இருளாகி விடும் என்ற கருத்தில் அவர்கள் இங்கு குறிப்பிடுகிறதை நாம் உணர முடிகிறது.

தாவீது என்கிற விளக்கு அணையாதபடி அவனைக் காப்பதில் தாவீதின் மனுஷர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வதை காண முடிகிறது. தாவீதின் விளக்கு இஸ்ரவேலின் ஜனத்திற்கு முன்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மங்கியெரியவில்லை. அதைக் காப்பதில் அவனது மனுஷர் சிரத்தையெடுப்பதைக் காணும்போது... இக்காலத்தில் இப்படிப்பட்ட விசுவாசமுள்ளவர்கள் உண்டா?! என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

மேய்ப்பனற்ற ஆடுகள் தொய்ந்து போகும்; மேய்ப்பனற்ற ஆடுகள் சிதறுண்டு போகும் என்பதால் (மத்தேயு: 9:36) ஜனங்களை வழிநடத்திச் செல்ல ... தேவன் தம்முடைய ஜனத்தை மேய்ப்பதற்கும், வழிநடத்துவதற்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்களை நியமித்தார். அவர்கள் முறையே... கோத்திரப்பிதாக்கள், மோசே, யோசுவா, நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், ஆசாரியர்கள். புதிய ஏற்பாட்டில் பார்ப்போமானால், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் (எபேசியர்: 4:13) என காண்கிறோம்.

ஜனங்களை வழிநடத்தக்கூடிய இப்படிப்பட்ட கர்த்தருடைய தாசர்களே தேவஜனத்தின் விளக்கைப் போன்றவர்கள். இந்திய தேசத்தின் இருளைப்போக்க இப்படிப்பட்ட தேவமனுஷர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா இருளாகி விடும். இஸ்ரவேலின் விளக்கு தாவீது என்றால், ஒவ்வொரு பட்டணத்திலும், கிராமங்களிலும் கர்த்தருக்காய் ஊழியம் செய்யும் ஒவ்வொரு ஊழியரும் ஒரு விளக்குதான் என்பதை நாம் அறியக்கடவோம். பாடுகள், உபத்திரவங்கள் வரும் காலங்களில் இவர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தேவபிள்ளைகளின் கடமையாகும்.

பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி காலம் சுமார் 400 ஆண்டுகள் என கணிக்கின்றனர் நம் வேத பண்டிதர்கள். அந்த இடைப்பட்ட இடைவெளிகாலங்களில் ஒரு கர்த்தருடைய தாசரும், தீர்க்கதரிசிகளும், கர்த்தருடைய வார்த்தையும் கிடைக்காத காலமாயிருந்தது அந்நாட்களில். அப்படிப்பட்ட ஒரு இருண்டகாலம் அது. அப்படிப்பட்ட ஒரு காலம் இனி ஒருநாளும், ஒருக்காலும், ஒரு இடத்திலும், எந்த ஒரு நாட்டிலும், தேசத்திலும் வரக்கூடாது. கர்த்தருடைய தாசர்கள், கர்த்தருடைய வார்த்தை அணைந்து போகாதபடிக்கு காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். 

2இராஜாக்கள்: 18:3,4 - "... அரமனை விசாரிப்புக்காரனாகிய ... ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான்" என வாசிக்கிறோம். 

நாம் வாழ்வது கடைசிக் காலம். இனி வரப்போகிற காலங்களோ கொடிய காலங்கள் (1தீமோத்தேயு: 3:1) என வேதம் கூறுகிறது. "அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு குறைந்துபோம்" என வேதம் கூறுகிறது. 

"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள் என்றார்" (யோவான்: 13:34,35).

"நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (கலாத்தியர்: 5:15).

இஸ்ரவேலைக் காக்கவும், வழிநடத்தவும் தேவன் தாவீதை அபிஷேகம் பண்ணினார். இஸ்ரவேலுக்கு விளக்காயிருந்தான். அது அணைந்து போகாதபடிக்கு அவன் மனுஷர் அவனைக் காத்தனர். தாவீதும் அவன் மனுஷரும் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதை எவ்வளவு அழகாக வேதம் எடுத்துக்காட்டுகிறது பாருங்கள்!!

தாவீது ஏன் ஒரு 'இஸ்ரவேலின் விளக்கு' என தாவீதின் மனுஷர் குறிப்பிட்டனர்? 

* தாவீதின் வாழ்க்கையில் ... ஆரம்ப நாட்களில் இருந்தே ஆடுகளுக்காக தன் ஜீவனைக்கொடுப்பதில், அதை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ளவனாக இருந்ததில் நல்ல மேய்ப்பனாக இருந்தான். (1சாமுவேல்: 17:34,35)

* இஸ்ரவேல் ஜனங்களை காப்பதிலும், இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தவனை நிக்கிரகம் செய்வதிலும், கர்த்தருடைய வல்லமை ஈட்டியிலும், பட்டயத்திலும் இல்லை; அவரை விசுவாசிக்கிறவர்களிடத்தில் உள்ளது என நிரூபிப்பதிலும், எதிர் வரும் சவாலை சந்திப்பதில் சுயபெலத்தால் நிற்காமல், கர்த்தருடைய நாமத்தினால் வருகிறேன் என்ற விசுவாச அறிக்கையிட்டு ஜனங்கள் நடுவே விசுவாசத்தை விதைப்பதிலும், இந்த யுத்தம் கர்த்தருடையது என கூறி இஸ்ரவேலின் படைகள் தேவன் பேரில் நம்பிக்கை வைக்கவும் தூண்டுகோலாய் இருப்பதில் தாவீது நல்ல தளகர்த்தனாய் விளங்கினான். (1சாமுவேல்: 17:46,47)

* அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை கனம் பண்ணுவதில் கவனமுள்ளவன் (1சாமுவேல்: 24:5,6; 26: 8-11) (2சாமுவேல்: 1:17)

* தாவீது 'கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவன்' இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர் (1சாமுவேல்: 25:28)

* எதிரிகளுக்கும், இஸ்ரவேலருக்கும் தாவீது தேவதூதனைப்போல காணப்பட்டான். (1சாமுவேல்: 29:9;  2சாமுவேல்: 14:17)

* பாடுகள் உபத்திரவங்கள் வரும்போதெல்லாம் தாவீது கர்த்தரையே சார்ந்து கொள்வான். (1சாமுவேல்: 30:6,7)

* தன்னுடைய இராஜமேன்மையை கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தாழ்த்தி, நடனம் பண்ணினான். (2சாமுவேல்: 6:14)

* தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருப்பதைக் கண்ட தாவீது, தனது அரமனையைவிட தேவனுடைய ஆலயம் சிறப்பாக, பெரிதாக இருக்க வேண்டுமென விரும்பினான். (2சாமுவேல்: 7:2,

* நன்றி மறவாத நட்புடையவன் தாவீது. "யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா?" (2சாமுவேல்: 9:1)

* தன்னிடம் உள்ள பாவம், தவறுகளுக்கு உடனடியாக மனந்திரும்புதல், பாவ அறிக்கையிட்டு காத்துக் கொள்ளுதல், ஊழியரை எதிர்த்து நில்லாமை இவையெல்லாம் தாவீதின் சிறப்பு வாய்ந்த நற்குணங்கள். (2சாமுவேல்: 12:13; சங்கீதம்: 51)

* கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணித் துதிக்க, புகழ, கீதவாத்தியங்களை வாசிக்க, கைத்தாளங்களைக் கொட்ட, புரிகைகளை ஊத ஆட்களை நியமித்தான். (2சாமுவேல்: 16:4-6)

இப்படி தன் வாழ்நாளெல்லாம் தன் தேவனாகிய கர்த்தருக்கும், தேவன் தந்த ஜனத்திற்கும் ஆசீர்வாதமாக இருந்தான். தன் வாழ்வில் எல்லா எல்லைகளிலும் இன்ப, துன்பங்களில் அனைத்திலும் சாட்சியுள்ளவனாக, ஜனத்தின் காவலனாக இருந்ததினால், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீதை - "இஸ்ரவேலின் விளக்கு" என அழைத்தனர்.

பெலிஸ்தருக்கு எதிரான யுத்தத்தில் தாவீது விடாய்த்துப் போனான். இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் விடாய்த்துப்போன நேரத்தில், தாவீதை வெட்ட வேண்டும் என இருந்தான். அச்சமயம், செருயாவின் குமாரனாகிய அபிசாய் தாவீதுக்கு உதவியாக வந்து பெலிஸ்தனைக் கொன்று போட்டான்.

இதனால், அதிர்ச்சியடைந்த தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள். (2சாமுவேல்: 21:16,17)


விடாய்த்துப்போன நேரத்தில்...

"... தாவீது விடாய்த்துப் போனான்... இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்ட வேண்டும் என்று இருந்தான்"

நாம் சோர்வடையும் நேரங்களில்தான் சாத்தான் நம்மை நெருங்கி வருவான். தேவபிள்ளைகள் சோர்வடையும் நேரங்களில் மிக விழிப்பாயிருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஜெபத்திலே ஒத்தாசை செய்ய வேண்டும்.

 "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் வந்து:" (மத்தேயு: 4:2,3) என வாசிக்கிறோம். நாம் எப்போது பெலவீனப்படுவோம், சோர்வடைவோம் என சோதனைக்காரன் காத்திருந்து நம்மை தாக்க வருவான். அவ்வேளைகளில் நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, நமக்காக ஜெபிக்கிறவர்களை கண்டுபிடித்து ஜெபிக்க சொல்ல வேண்டும். செருயாவின் குமாரனாகிய அபிசாய் போல நமக்காக ஒரு கூட்டம் ஜெபிக்கும் ஜெபப்பங்காளர்களை ஜெபவீரர்களை உருவாக்க வேண்டும். ஒருவரையொருவர் ஜெபத்திலே தாங்குகிறவர்களாய் மாற வேண்டும்.

தாவீது குறிப்பிட்ட விளக்குகள்

1. தேவனாகிய கர்த்தரே விளக்கு:

"கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்" (2சாமுவேல்: 22:29)

என்ன ஒரு விசுவாச நம்பிக்கையான அறிக்கை பாருங்கள்! தாவீதின் மனுஷர் 'தாவீதை இஸ்ரவேலின் விளக்கு' என்கின்றனர். ஆனால், தாவீதோ... "கர்த்தர் தான் என் விளக்கு" என்கிறான்.

தன் வாழ்வில் உள்ள இருளை வெளிச்சமாக்குபவர் தேவனாகிய கர்த்தர்தான் என அறிக்கையிடுகிறான். ஆம் பிரியமானவர்களே! நம் வாழ்வில் உள்ள இருளை வெளிச்சமாக்குபவர் நம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர்தான் என விசுவாச அறிக்கை செய்வோம். விசுவாசத்தில் பலமடைவோம்.

2. சந்ததியாகிய விளக்கு:

சங்கீதம்: 18:28 - " தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்" என தாவீது ஒரு விண்ணப்ப ஜெபத்தை ஏறெடுப்பதை வாசிக்கிறோம்.

தான் மட்டுமல்ல, தன் எதிர்கால சந்ததியே தேவனாகிய கர்த்தருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். வெளிச்சம் வீச வேண்டும். தன் பின்சந்ததிகள் இருளுக்குள் போய்விடக்கூடாது என்பதில் தாவீது கவனமாயிருந்து, தேவனிடம் மன்றாடி விண்ணப்பித்து ஜெபிப்பதை காண்கிறோம்.

1இராஜாக்கள்: 11:36 - "என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்து கொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்"

தாவீதின் விண்ணப்ப ஜெபம் கேட்கப்பட்டது.

ஏசாயா: 8:18 - "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்"