பிப்ரவரி 19, 2015

தேவனுடைய இரகசியச் செயல்

Image result for job:29:4 - God's intimate

தேவனுடைய இரகசியச் செயல்

யோபு: 29:4 - "தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது"  என பக்தனாகிய யோபு கூறுகிறதை வாசிக்கிறோம். 

யோபு: 38 -41 ஆகிய அதிகாரங்களில் வாசிக்கும்போது... தேவன் இவ்வுலகத்தை சிருஷ்டித்த விவரத்தை கூறுகிறார். அந்நாட்களில் தான் இப்படித்தான் உலகை சிருஷ்டிக்கப்போகிறேன் என்றும், இவ்விதமான படைப்புகளைத்தான் உலகில் படைக்கப்போகிறேன் என்று எந்த தூதனிடமும், கேருபீன், சேராபீன்களிடமோ அவர் சொன்னதில்லை. உள்ளத்தில் உள்ளதை அவர் பகிர்ந்து கொள்ளவுமில்லை. 

ஆனால், உலகில் உள்ள அனைத்தையும் ஐந்து நாட்களில் படைத்த தேவன் ஆறாம்நாளில் மனிதனைப் படைத்தார். அதன் பின்பு, அவனோடேகூட அவர் தினமும் சாயங்கால வேளையில் குளிர்ச்சியான நேரத்தில் அவனோடே பேசி உலாவி  வருவார். மனிதனைப் படைத்த பின்பு அவனிடத்தில் ஒவ்வொன்றாக சொல்லி, விளங்க வைத்து, காண்பிக்கிறார்.

மனிதன் தேவவார்த்தையை மீறி பாவம் செய்தபோது, தன் வார்த்தைக்கு கீழ்ப்படிகிற குறிப்பிட்ட  தன்னுடையவர்களோடு மட்டும் தனது மனவெளிப்பாடுகளை பகிர்ந்து கொண்டார். நடப்பிக்க வேண்டிய கிரியைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

உதாரணம்:

* ஜலப்பிரளயத்தைக் குறித்து நோவாவிடம் பகிர்ந்து கொண்டார். (ஆதியாகமம்: 6:13-21) 

* சோதோம் கொமாராவின் அழிவைக் குறித்து ஆபிரகாமிடம் பகிர்ந்து கொண்டார் (ஆதியாகமம்: 18:18)

* வரப்போகும் ஏழு வருட பஞ்சத்தைக் குறித்து யோசேப்பிடம் பகிர்ந்து கொண்டார் (ஆதியாகமம்: 41:25)

* இஸ்ரவேலின் மீட்பைக் குறித்து மோசேயிடம் பகிர்ந்து கொண்டார் (யாத்திராகமம்: 3:16,17)

* ஏலியின் வீட்டைக் குறித்த நியாயத்தீர்ப்பை சாமுவேலிடம் பகிர்ந்து கொண்டார். (1சாமுவேல்: 3:11-14)

யோபுவின் சிநேகிதன், தேமானியனாகிய எலிப்பாஸின் எதிர் கேள்வி:

"நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக் கொண்டீரோ? நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதா?" (யோபு: 15:8,9)

யோபுவின் மூன்று நண்பர்களில் மூத்தவன் எலிப்பாஸ். இவன் உலக ஞானம் மிகுந்தவன். யோபு: 4,5,15,22 ஆகிய அதிகாரங்களில் இவன் பேசிய பேச்சுக்களை வாசித்தறியலாம் அனைத்தும் உலக லௌகீக ஞானம் மிகுந்ததாக காணப்படுமேயன்றி, தேவஞானம் இல்லாதிருப்பதை காணலாம். இவனது வம்ச அட்டவணையை ஆதியாகமம்: 36:4,11,40-42 ஆகிய வசனங்களில் பார்க்கலாம். இவன் ஒரு உலகப்பிரகாரமான மனிதன். ஆவிக்குரியவன் அல்ல. எனவே, ஆவிக்குரியவனின் வழிகளை இவனால் அறிந்து கொள்ள முடியாது. எனவே, யோபுவின் வழிகள் இவனுக்கு விளங்கிக் கொள்ள இயலாததினால், எதிர்கேள்வி கேட்பதை பார்க்கிறோம். 

"... தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."(1கொரிந்தியர்: 2:11)

  "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்;  அவைகள் அவனுக்கு பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதாணிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." (1கொரிந்தியர்: 2:14)

"ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும், அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்" (1கொரிந்தியர்: 2:15).

தேவனுடைய இரகசியத்தின் இருப்பிடம்:

* "...நீதிமான்களோடே  அவருடைய இரகசியம் இருக்கிறது (நீதிமொழிகள்:3:32).

* "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது..." (சங்கீதம்: 25:14).


யாருக்கு தேவனுடைய இரகசியச் செயலின் வெளிப்பாடுகள் கிடைக்கும்:


கர்த்தருடைய உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் இருப்பவர்களுக்கு தேவனுடைய இரகசியச் செயலின் வெளிப்பாடுகள் கிடைக்கும்


  • கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரிடத்தில் அன்பாயிருப்பவனுக்கு வெளிப்படுத்துவார் (யோவான்: 14:21)

  • தேவனுக்கு சிநேகிதராக இருப்பவர்களுக்கு வெளிப்படுத்துவார் (யோவான்: 15:15)

  • "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ்: 3:7).

  • தீர்க்கதரிசிகளிடத்தில் தன்னை வெளிப்படுத்தி பேசுவார் (எண்ணாகமம்: 12:6)

  • மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தை பேசும்படி - உண்மையுள்ள ஊழியர்களை உபயோகப்படுத்துகிறார். (1கொரிந்தியர்: 2:7) 

  • யோவானைப்போல இயேசுவோடு நெருங்கி ஜீவிக்கும் எவருக்கும் தேவஇரகசிய செயலை வெளிப்படுத்துவார். (யோவான்: 13:23-26)                 

கர்த்தருக்குப் பயப்படும் கர்த்தருடைய பிள்ளைகள் யாராயிருந்தாலும் தேவனுடைய இரகசிய செயலை அவர்களுக்கு தெரியப்படுத்துவார். சாமுவேலைப்போன்ற சிறு பிள்ளையாண்டானிடத்திலும் வெளிப்படுத்துவார். எண்பது வயது முதியவர் மோசேயினிடத்திலும் வெளிப்படுத்துவார். 

கர்த்தருடைய உயர்மட்ட ஆலோசனைக்குழு என்பது மேலே கண்ட தகுதியுடையவர்கள்தான். இப்படிப்பட்டவர்களுக்கு பரலோகத்தின் இரகசிய வெளிப்பாடுகள் மறைக்கப்படாமல், தேவனோடு உறவாடுகிறவர்களுக்கு உடனடியாக தேவனுடைய இரகசியச் செயலின் வெளிப்பாடுகள் கிடைக்கும்

"கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடப்பவன் எவனோ, அவன் பாக்கியவான்" (சங்கீதம்: 128:1).

உறுதியான தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் நிறைந்த உரையாடல்:

"பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க்கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீ வெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது" (எரேமியா:6:1)

"ஆகையால், நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றி விடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்" (எரேமியா: 6:11)

"கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?" (எரேமியா: 23:18)

"அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்" (எரேமியா: 23:22)

உறுதியான தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் எரேமியாவிற்கு உண்டாயிருப்பதை மேற்கண்ட வசனங்களில் வாசித்தறிகிறோம். கர்த்தர் பேசும்போது இங்கே இடிமுழக்கங்கள் இல்லை. பூமியதிர்ச்சிகளோ, அக்கினியோ, பெரும் இரைச்சலோ இல்லை. நீதிமான்களின் கூடாரத்தில் கர்த்தருடைய தேவசெயலின் இரகசியம் மட்டுமே உள்ளது.

 "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது..." (சங்கீதம்: 25:14).

எலிப்பாஸிற்கு விளங்காத விஷயம் என்ன?

"... நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதா?" (யோபு: 15:8,9)

"அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்" (1தீமோத்தேயு: 3:16)

யோபு: 19:25-27 - "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே காணும்..." என அறிக்கையிடுகிறார்.

இதுவே அந்த தேவ இரகசியம். இதுவே தேவனுடைய இரகசிய செயல். வாக்களிக்கப்பட்ட மீட்பரைக் குறித்து பழைய ஏற்பாட்டு காலங்களிலேயே யோபு அறிந்து கொண்ட தேவனுடைய இரகசியம் இதுவே. அவனது கூடாரங்களில் மீட்பருடைய மீட்பு இருந்ததை அறிந்தவன் யோபு.

வார்த்தையாகிய தேவன் மாம்சத்தில் வெளிப்பட போகிறார்.  நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழப் போகிறார். கடைசிநாளில் (அதாவது, இரண்டாம் வருகையில்) பூமியின்மேல் நிற்பார் என்பதை கர்த்தருக்கு பயந்து, அவரது கற்பனைகளை கைக்கொண்ட பக்தியுள்ள  யோபுவுக்கு தேவனுடைய இரகசியச் செயல் வெளிப்பட்டிருந்தது.
இந்த புதிய ஏற்பாட்டின் தேவஇரகசியத்தை யோபு அறிந்த அளவிற்கு... பழைய ஏற்பாட்டில் உள்ள பக்தியற்ற எலிப்பாஸ் அறிந்திருக்கவில்லை.  உலக மனிதனுக்கு தேவனுடைய வழிகள் விளங்காது. "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாய்த் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்" (1கொரிந்தியர்: 2:14)

"நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; ... " (1கொரிந்தியர்: 2:10)

யோபு மட்டும் இதை எப்படி அறிந்திருப்பார்?

யோபு ஏதோமியர் தேசத்தில் வாழ்ந்த ஒரு கோத்திரத் தலைவன். ஊத்ஸ் தேசம்தான் பின்னாட்களில் ஏதோம் தேசமாக மாறியது. இன்று இப்பகுதி வடக்கு அரேபியாவில் அமைந்துள்ளது.

யோபும், அவனது சிநேகிதரும் யூதர்கள் அல்ல. யோபு கோத்திரப்பிதாக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ( கி.மு.2000  ஆபிரகாம் காலத்தில்)  வாழ்ந்திருக்கலாம் என வேதபண்டிதர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆதாரம்:  1. யோபு: 1:5 - ம் வசனத்தில் யோபு, தன் குமாரர்களுக்காக சர்வாங்க தகனபலிகளை செலுத்துவான் என வாசிக்கிறோம். பிரதான ஆசாரியன் இல்லாத அந்நாட்களில் கோத்திரப் பிதாக்களே பலிகளை முன்னின்று செலுத்துவார்கள். எனவே, யோபு கோத்திரப்பிதாக்கள் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்தவன்; மட்டுமல்ல, இவனும் ஒரு கோத்திரப்பிதா ஊழியத்தைச் செய்தவன் என வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். (யோபு: 1:3/ 42:12).

ஆதாரம்: 2.  யோபுவின் புஸ்தகத்தில் இஸ்ரவேலரின் வரலாற்றைப் பற்றியோ, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, யோபுவின் வரலாறு கி.மு. 1500 க்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மோசேக்கு முன்பு கோத்திரப்பிதாக்களின் காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, " பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன்;" (எபிரெயர்: 1:1), யோபுவுக்கும் திருவுளம் பற்றியிருக்கலாம். எப்படி?

ஆபிரகாமின் நாட்களில் ... 

ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதராக இருந்தார். (ஆதியாகமம்: 18:18/ யோவான்: 15:15).

ஆபிரகாம் தன் கூடார வாசலில் இருக்கும்போது, தேவன் அவனுக்கு தரிசனமானார். (ஆதியாகமம்: 18:1)

கர்த்தரோடு வந்த இரண்டு புருஷர்கள் இறங்கிப்போனபோதும்... ஆபிரகாமோ... பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். (ஆதியாகமம்: 18:,22).

கர்த்தர் ஆபிரகாமின் கூடாரத்திற்கு முன்பாக நின்று, தம்முடைய இரகசியச் செயலை ஆபிரகாமுக்கு விவரித்துக் காண்பித்தார். ஏன் விவரிக்க வேண்டும்? தேவன் தன்னுடைய சிநேகிதருக்கு, தம்முடைய திட்டங்கள் எதையும் மறைக்க இயலாது (யோவான்: 15:15/ ஆதியாகமம்: 18:18/ ஆமோஸ்: 3:7) என்பது அவருடைய தேவநீதி.

தன் தாசனாகிய ஆபிரகாமின் கூடாரத்தில் தேவனுடைய இரகசியச்செயல் இருந்ததுபோல, கோத்திரப்பிதாக்களின் காலத்தில் வாழ்ந்த தன் தாசனாகிய யோபுவின் கூடாரத்திலும் தேவனுடைய இரகசியச் செயல் இருந்தது.

ஆபிரகாம், யோபு போல நாமும் தேவனுக்கு சிநேகிதராக மாற வேண்டும். அப்பொழுது தேவனுடைய இரகசியச்செயல் நம் கூடாரங்களிலும் காணப்படும். அப்பொழுது, தேவனது வெளிப்பாடுகள், வேதத்தின் மகத்துவங்கள், பரலோக ராஜ்யத்தின் மேன்மை, தேவனுக்காக நாம் செய்ய வேண்டிய காரியங்கள், தேவசித்தம் அனைத்தும் நமக்கும் வெளிப்படும்.

தேவனுடைய இரகசியச் செயல் இருக்கும்போது வரும் மேன்மை:



"நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது," (யோபு: 29:7)

"எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது. மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்" (யோபு: 29:21-23)

ஒரு தேவபிள்ளையிடம் கர்த்தருடைய இரகசியச் செயல் இருக்குமானால், ஒரு தேவ மனிதரிடம் தேவனுடைய இரகசியச் செயல் இருக்குமானால், கர்த்தருடைய வார்த்தையை இவர்களிடமிருந்து ஜனங்கள் கேட்பதற்கு மிகுந்த ஆவலுடன், தாகமாய் காத்திருப்பார்கள்.

எனவே, தேவனுடைய இரகசியச் செயல் நம்முடைய கூடாரங்களில் காணப்படும்படி, தேவனுக்கு பயந்து, அவரின் கற்பனைகளைக் கைக் கொண்டு, தேவனுக்கு சிநேகிதராக மாற அர்ப்பணிப்போமானால்... ஆபிரகாமின் கூடாரங்களிலும், யோபுவின் கூடாரங்களிலும் காணப்பட்ட தேவனுடைய இரகசியச் செயல் நம்முடைய கூடாரங்களிலும் காணப்படும். தேவனுடைய இரகசியம், வெளிப்பாடுகள் நம்மூலம் வெளிப்பட, நம்மிலே தேவனுடைய கிரியைகள் காணப்பட, நம்மூலமாய் அநேகர் தேவநாமத்தை அறிந்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த அர்ப்பணிப்போம். கர்த்தருடைய அதிசயங்களையும், அற்புதங்களையும் நாம் காண்போம். பிறரையும் காணச் செய்வோம். அவரது நாமத்தின் மகிமையை பிறருக்கு விவரிப்போம். கர்த்தருடைய நாமம் தேசத்தில், தேசத்தின் குடிகள் நடுவே உயர்த்தப்படட்டும். தேசம் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்பட தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துவோம். அல்லேலூயா! ஆமென்!