செப்டம்பர் 23, 2014

ஓட... ஓட... துரத்த வேண்டியவைகள்

மனிதனுடைய வாழ்வில் ஆவிக்குரிய முன்னேற்றம் வராதபடி தடை செய்பவன் பிசாசு. தேவனோடு உறவாடாதபடி தடுப்பதும், தேவசாயலாக மாற வேண்டியவனை மாறவிடாதபடி தடுப்பதுமே அவனது பிரதானமான வேலை. நித்தியத்தை அடையவிடாமல் தடுப்பவன் அவனே. இரட்சிப்பை ஜனங்கள் சுதந்தரிக்காதபடி, சுவிசேஷத்தை கேளாதபடி செவியை அடைக்கச் செய்பவன் ஈனச்சாத்தானும், அவனது சேனையுமே. எனவே, அவனை நித்தமும் துரத்த வேண்டியது நம் கடமை.

தென்கொரிய எழுப்புதல் போதகர்.பால்யாங்கி சோ அவர்கள் தன் ஜெபக்குழுவினரை மலைக்கு அழைத்துச் சென்று தென் கொரியா தேசத்தின் மேலும், சீயோல் பட்டணத்தின்மேலும் வானமண்டலத்தில் உலாவிக்கொண்டிருக்கும் பொல்லாத ஆவிகளின் சேனைகளை துரத்துவார்களாம். அதற்கு பின்புதான் தேசத்தில் எழுப்புதல், ஆத்தும அறுவடை பலமாய் வந்தது என அவர் கூறுகிறார். நான் நினைக்கிறேன்.... அவர்கள் துரத்திய அசுத்த அவிகளெல்லாம் நம் தேசத்திற்கு தஞ்சமடைய வந்து விட்டதோ என?! நாமும் அதை இங்கு அண்ட விடாமல் துரத்த வேண்டும். வெறும் நம்முடைய ஆசீர்வாதத்திற்கு மட்டும் நாம் ஜெபித்துக் கொண்டிராமல் தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபிக்க முன் வர வேண்டும்.

தென் கொரியாவில் ஏற்பட்ட அதே போன்றதொரு எழுப்புதல் நம் தேசத்திற்கு வர வேண்டுமானால் நாமும், நம் தேசத்தின் மேல் உலாவிக்கொண்டிருக்கும் அந்தாகார வல்லமைகளை, வான மண்டல லோகாதிபதிகளை, அசுத்த வல்லமைகளை விரட்டியடிக்க வேண்டும். தேவஜனங்கள் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது இந்திய தேசத்தின்மேல் உள்ள அவனது ஆதிக்கம் ஒழிந்துபோகும். தேசத்தின்மேல் ஆவியானவர் அசைவாடும்படி ஒன்று கூடி துரத்துவோம்..