டிசம்பர் 17, 2012

பாவ நிவாரணப் பண்டிகை

 
லேவியராகமம்: 23:29-32

ஏழாம் மாதம் 10 ம் தேதியில் பாவ நிவாரண நாள் வருகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் இந்த நாள் மிகவும் பயபக்திக்குரிய நாளாகும்.

முழு வருடத்திலும் இந்த ஒரே ஒரு தினத்தில் மட்டுமே பிரதான ஆசாரியன் தேவாலயத்தின் திரைச்சீலையின் வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்துக்கடந்து, நடந்து முடிந்த ஆண்டு முழுவதும் எல்லா மக்களும் செய்த பாவங்களுக்காக முழு பாவ நிவாரணம் செய்வான். 

பாவ நிவாரணநாள் "பாவத்தை அகற்றும் நாள்". ஒரு நிறைவு பெற்ற பாவ நிவாரணமாக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் நமக்காக ஜீவனை ஈந்தார். ஆனால், திருச்சபையோ பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலையாகி இந்த அனுபவத்தில் தொடர்ந்து நடக்கக் காணோம்.

பாவ நிவாரண நாளில் சிந்தப்படும் இரத்தத்துக்கும்  இரட்சிப்புக்கும் சம்பந்தமில்லை. பஸ்கா அவர்களுடைய பாவத்தோடு இடைபடாமல் பாவத்தை இரத்தத்தால் அப்படியே மூடிப்போட்டது. ஆனால், பாவ நிவாரணத்தில் சிந்தப்பட்ட இரத்தமோ இஸ்ரவேலரின் பாவங்களை முற்றிலும் கழுவி சுத்தப்படுத்தினது.

கூடாரப்பண்டிகைக்கு முன்பாக ஆசரிக்கப்படும் பண்டிகையே பாவ நிவாரணப் பண்டிகை. தேவனுடைய சரீரமாகிய சபை எப்படி கழுவப்பட்டு  பூரணத்தை நோக்கி கடந்து செல்ல வேண்டும் என்பதை இந்த பண்டிகை தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறது.

நீதிமொழிகள்: 4:18 - "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்"

பாவ நிவாரண நாளில் ஆசரிப்பு:  (லேவியராகமம்: 16:4)

1. பிரதான ஆசாரியனுடைய வஸ்திரங்கள்: (லேவி: 16:4)

பாவ நிவாரண தினத்தன்று பிரதான ஆசாரியன் தன் மகிமையும், அலங்காரமுமான வஸ்திரங்களை களைந்துவிட்டு, அதற்குப் பதிலாக பரிசுத்தமான சணல் நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்கு  சணல் நூல் சல்லடையைப் போட்டு, சணல் நூல் இடைக் கச்சையைக் கட்டி, சணல் நூல் பாகையைக் காத்துக் கொள்ள வேண்டும்.

சணல் - நீதியைக் குறிக்கும்.

2. திரைச் சீலைக்குள்ளே :  (லேவி: 16:2) 

திரைச்சீலையானது பரிசுத்தஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கிறது. வருடத்தில் வரும் ஒரே ஒரு நாள் இந்த பாவ நிவாரண தினத்தில் மட்டுமே பிரதான ஆசாரியன், திரைச்சீலையின் வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செக்கின்னா மகிமைக்குள் நிறைந்திருக்கும் தேவ பிரசன்னத்தில் பிரவேசிப்பான். (எபிரேயர்: 9:7-9; 10:19,20; 6:19,20) கர்த்தரின் கிருபாசனத்தண்டையிலே 2 கேரூபீன்கள் மத்தியில் ஒரு மேகத்தில் தோன்றுவார்.

எந்த இஸ்ரவேலனாவது, எந்த நேரத்திலாவது அங்கு பிரவேசித்து விட்டால் அவன் அங்கு தானே மரித்து விடுவான்.

3. பலியின் காளை:  (லேவி: 16:6,11-14)

 பிரதான ஆசாரியனாகிய ஆரோன் சகல ஜனங்களின் பாவ நிவாரணத்துக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் முன்பு, தன்னுடைய சொந்த பாவங்களுக்காக முதலில் பரிகாரம் தேட வேண்டும்.  தனது பாவங்களுக்காக முதலில் ஒரு காளையை பலி செலுத்துவான். பின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து அடிக்கப்பட்ட அந்த காளையின் இரத்தத்தை உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக திரையிலும் கிருபாசனத்திலும் தெளிப்பான். 

4. இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள்: (லேவியராகமம்: 16:5-10,20-22)

ஜனங்களால் கொண்டு வரப்பட்ட இரண்டு ஆடுகள் மேல் பிரதான ஆசாரியன் சீட்டுப் போடுவான். ஒன்று கர்த்தருக்கென்று தெரிந்து கொள்ளப்படும். மற்றது போக்காடாக விடப்படும்.

கர்த்தருடைய ஆடு:

கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை பாவ நிவாரண பலியாக சேரப் பண்ணுவார்கள். அந்த இரத்தம் திரைச் சீலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, கிருபாசனத்திற்கு முன்பு ஒருமுறை தெளிக்கப்படும். இப்படியாக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பாவப் பரிகாரம் செய்யப்படும்.

போக்காடு:

பிரதான ஆசாரியன் தன் கைகளை ஆட்டின் மீது வைத்து, இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை அதன் மீது சுமத்துவான். அப்பொழுது அந்தப் பாவங்கள் ஆட்டின் மீது இறங்கும்.

(கவனியுங்கள்: உங்கள் தலையின் மீது கைவைத்து ஜெபிக்கிறவர்கள் எப்படிப்படட்டவர்கள் என்பதைக் குறித்து மிக கவனமாயிருக்க வேண்டும்.)

ஜீவனுள்ள அந்த ஆடு வனாந்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அது போக்காடாக விடப்படும். மக்களுடைய பாவங்களை சுமப்பதற்கு இது அடையாளம். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறார்கள். 

குறிப்பு: இரட்சிப்புக்காக கிறிஸ்துவண்டை வரும் பாவிக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு அல்லது பாவ நிவாரண தினத்தன்று கர்த்தர் தமது ஜனத்தின் பாவத்தோடே இடைப்பட்டு பாவங்களை கழுவி சுத்திகரிக்கிறார்.

5. தாழ்மைப்படுத்தும் நாள்:  லேவியராகமம்: 16:31,23,27)

ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் இந்தப் பரிகாரம் செய்யப்படும். 10 என்பது சோதனை, பாடுகள், துயரங்களைக் குறிக்கும். (தானியேல்: 1:12; வெளிப்படுத்தல்: 2:10)  இஸ்ரவேல் ஜனங்கள் 10 விதமான சோதனைகளுக்குள்ளாய் வனாந்திரத்தில் கடந்து சென்றார்கள். பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் சீஷர்கள் 10 நாட்கள் சோதிக்கப்பட்டார்கள்.

கர்த்தர் நம்மைச் சுத்திகரிக்கவும், பூரணப்படுத்தவும் அநேகப் பாடுகள், சோதனைக்கூடாய் நடத்துகிறார். ஒவ்வொரு சோதனையும் இன்னும் பெரிய சோதனைகளுக்குள்ளும், பாடுகளுக்குள்ளும் கொண்டு செல்கிறது. (எரேமியா: 2:6). பாடுகளின் வழியாகக் கடந்து பரிசுத்தத்தில் முன்னேறக்கூடிய காட்சி இது. இப்படிப்பட்ட அனுபவங்கள் வழியாக சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கைக்குள் கடந்து செல்லுகிறோம்.

பாவ நிவாரண நாள் சபைக்கு பாடுகளும் சோதனைகளும் நிறைந்த நாள். கர்த்தர் சபையினரை  பூரணத்துடன் வழிநடத்தும் நாள். சங்கீதம்: 119:67,71 - "நான் உபத்திரவப்படுமுன் வழி தப்பி நடந்தேன்", "நான் உபத்திரவப்பட்டது நல்லது; அதனால், உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்."

பாவ நிவாரணத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி உபவாசத்திலிருந்து தங்கள் ஆத்துமாக்களை பாடுகளுக்குட்படுத்தினார்கள். அப்போஸ்தலர்: 27:9- ல் கூறப்பட்டுள்ள உபவாசம் பாவ நிவாரண தினத்தில் குறிப்பிடப்படுகிறது.

6. ஒரு ஓய்வு நாள்: (லேவியராகமம்: 16:31)

தொடரும்...