டிசம்பர் 08, 2012

பஸ்கா பண்டிகை

 
(லேவியராகமம்: 23:4,5; யாத்திராகமம்: 12:1-23; உபாகமம்: 16:1-3)

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான அந்த நாளில்தானே இஸ்ரவேலரால் எகிப்து தேசத்தில் ஆசரிக்கப்பட்டது. இது முதலாம் மாதம் 14 ம் தேதி (யாத்திராகமம்: 12:6). கர்த்தர் ஒரு இரட்சகனை எழும்பப் பண்ணினார். அவர் பெயர் மோசே. எகிப்தின் மேல் கர்த்தருடைய  நியாயத்தீர்ப்பாக ஒன்பது வாதைகள் வந்து இறங்கின. (யாத்திராகமம்: 7 -11 அதிகாரங்கள்). பஸ்கா பண்டிகையானது, கடைசி வாதையாகிய எகிப்தில் தலைப்பிள்ளை சங்காரத்திற்கு முன்பு இஸ்ரவேலர் ஆசரித்தார்கள்.

1. புதிய ஆரம்பம்: (யாத்திராகமம்: 12:2)
 

இஸ்ரவேலருக்கு ஒரு புதிய நாள்காட்டி, காலண்டர் ஆரம்பமானது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். அப்படியே நாம் மறுபடியும் பிறக்கும்போது எல்லாம் புதிதாகிறது. புதிய ஆரம்பத்தை மேற்கொள்கிறோம். (2கொரிந்தியர்: 5:17).

2. வீட்டுக்கொரு ஆட்டுக்குட்டி: (யாத்திராகமம்: 12:3)
 

இந்த ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. 1கொரிந்தியர்: 5:7 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறார். வீட்டிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினர்களுக்கும் ஆட்டுக்குட்டியோடு நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.

3. ஆட்டுக்குட்டியைப் பற்றிய தன்மைகள்: (யாத்திராகமம்: 12:5)

 அ) அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும்:

1பேதுரு: 1:18,19 - "நீங்கள் ஆசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே"
 

கிறிஸ்து தூய்மையானவர், கறைதிரையற்றவர், குற்றமற்றவர், பழுதற்ற ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானவருக்கு நிழலாட்டமாய் இருக்கிறது. (யோவான்: 1:29)
 

ஆ) ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி: (யாத்திராகமம்: 12:5)
 

இளமையான ஆட்டுக்குட்டி குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. நாமும் தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

இ) நான்கு நாட்கள் அதை பரிசோதிக்க வேண்டும்: (யாத்திராகமம்: 12:2,6)
 

அது குற்றமில்லாத பழுதற்றதுதானா? என்பதைப் பரிசோதிக்க நான்கு நாட்கள் வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குருடானதாகவோ, காயம் பட்டதாகவோ காணப்பட்டால் அதை உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல கிறிஸ்து, பிதாவினாலும், பிலாத்துவினாலும், பிரதான ஆசாரியனாலும், சாத்தானாலும் சோதிக்கப்பட்டு களங்கமற்றவராக காணப்பட்டார்.
 

ஆட்டுக்குட்டியை பரிசோதிப்பதற்காக அதன் ரோமத்தை இழுத்துப்பார்ப்பார்கள். தேவபிள்ளையே! அப்படியே உன்னையும், உலகமும், சபையும், பின் மாற்றக்காரரும் சோதித்துப் பார்க்கக் கூடும்.

4. ஆட்டுக்குட்டி கொல்லப்பட வேண்டும்; அதின் இரத்தம்  பூசப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:5,7)

இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம் சிந்தப்படாவிட்டால் எந்த மனுஷனும் தேவனுக்கு முன்பாக அங்கீகரிப்பட முடியாது. 

எபிரேயர்: 9:22 - "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை."  அந்த இரத்தம் பூசப்படவேண்டும். அந்த ஆட்டுக் குட்டியின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து ஒரு ஈசோப்புத் தண்டில் வீட்டின் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற் சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (யாத்திராகமம்: 12:6,7,21,22).

 

பாத்திரத்திலுள்ள அந்த இரத்தம் யாரையும் பாதுகாக்கக் கூடியது அல்ல. ஆனால், சிலுவையில் நிறைவேற்றப்பட்ட கிரியையை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கிறது. (ரோமர்: 3:25,26).

 5. எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படக் கூடாது: (யாத்திராகமம்: 12:46)

ஒரு ஆடு கட்டுப்படாமல் அலைந்த திரிகிறதாய் இருந்தால், அதை அடங்கியிருக்கும் பொருட்டு மேய்ப்பன் எலும்புகளில் ஒன்றை முறிப்பதுண்டு. இது இஸ்ரவேல் மேய்ப்பர்களின் வழக்கம்.

கால் - நமது நடக்கைக்கு அடையாளம் (யோவான்: 19:33,36) (சங்கீதம்: 34:20)

6. அதின் மாமிசம் தீவிரமாய் புசிக்கப்பட வேண்டும்: (யாத்திராகமம்: 12:8,11)
 
யோவான்: 6:53-55 - "நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்... என் மாம்சம் மெய்யான  போஜனமாயிருக்கிறது".

மாம்சத்தைப் புசிப்பது என்பது - வேத வசனத்தை தியானிப்பதற்கு அடையாளம். (சங்கீதம்: 1,  லேவியராகமம்: 11:3). வேதவசனம் நம்மில் ஒரு பகுதியாக மாறும் வரை உட்கொள்ளப்பட வேண்டும்.

யாத்திராகமம்: 12:11 - அரைகள் கட்டப்பட வேண்டும் என்பது - புறப்படுவதற்கு அடையாளம். இரட்சிக்கப்பட்ட பின் உலகத்தை பின்னே தள்ளி கிறிஸ்துவுக்குள் முன்னேற வேண்டும். இரட்சிப்பிலே கூடாரமடித்து தங்கி விடாதே.

7. இரத்தமே அடையாளம்: (யாத்திரகமம்: 12:12,13)

 

"அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன்" கல்வாரி சிலுவையில் நிறைவேற்றப்பட்ட கிரியையிலே தேவன் என்றென்றுமாய் திருப்தி அடைந்தார். நாம் இரத்தத்தால் (இயேசுவின்) மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம்.

பஸ்கா பண்டிகை கிறிஸ்துவின் மரணத்துக்கும் அடக்கத்துக்கும் நிழலாட்டமானது. இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்படுகிறோம். மறுபடியும் பிறக்கிறோம். பஸ்கா பண்டிகையை தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவிக்கிறோம்.

வாசித்துப் பாருங்கள்: 1பேதுரு: 1:18,19;  எபேசியர்: 1:7;  1யோவான்: 1:7;  ரோமர்: 5:9;  1கொரிந்தியர்: 6:19,20.