நவம்பர் 11, 2014

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் ...

10.11.2014  அன்று நாமக்கல் மாவட்ட ஊழியர் குடும்பகூடுகையில் சங்கை.ஐ.இரத்தினம் பால் - துதியின் கோட்டை ஊழியங்கள் - பாளையங்கோட்டை - தலைமை போதகர் அவர்கள் கொடுத்த தேவசெய்தி. இது நம்மில் அநேகருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தொகுத்து வழங்குகிறேன்.

திறவுகோல் வசனம்:         ஏசாயா: 43:4 - "நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும் உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்"

முதலாவது, நாம் கர்த்தரின் பார்வையில் அவர் விரும்பத்தக்க வகையில் ஆவிக்குரிய ஜீவியம் காணப்பட வேண்டும்.  அப்பொழுது கர்த்தரால் நாம் கனம் பண்ணப்படுவோம். நாம் கர்த்தரால் கனம் பண்ணப்படும்பொழுது மனுஷர்களும், ஜனங்களும் நம்மைத் தேடி வருவார்கள்.

நமது திட்டங்களுக்காக இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை; மனுஷருக்காகவே இயேசுகிறிஸ்து மரித்தார்.

ஒரு ஊழியனுக்கு மக்கள் மிகவும் அவசியம். சபை கட்டிடத்தைவிட, சபையில் உள்ள பொருட்களைவிட மக்கள் முக்கியம்.

கர்த்தருடைய சமூகத்தில் கதறி அழுது, "ஆண்டவரே! எனக்கு மக்களைத்தாரும். கட்டிடம் வேண்டாம், பொருட்கள் வேண்டாம், மக்களைத்தாரும்" என கெஞ்சி மன்றாடி ஜெபிக்க வேண்டும்.

முழங்காலை முடக்கி ஆத்துமாக்களுக்காய் தேவசமூகத்தில் கதறு! உன் கதறலின் சத்தம் தேவனை அசைக்க வேண்டும்.

தாரும்! தாரும்! மக்களைத் தாரும்! ஜீவனுக்கு ஈடாக ஜனங்களைத் தாரும்! என் ஆண்டவரே தாரும் என கதற வேண்டும்.

நடிகர் திலகமாக இருக்கக்கூடாது; மக்கள் திலகமாக இருக்க வேண்டும். மக்கள் விரும்பும் தலைவனாக விளங்க வேண்டும். 

மனிதர் நம்மை கனம் பண்ணும்படி தேவன் நமக்கு கிருபை பாராட்ட வேண்டும். நாம் கர்த்தரை கனம் பண்ணினால், அவர் நம்மை கனம் பண்ணுவார்.

யோவான்: 12:26 - "ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்"

முதலாவது, அவரது பாதத்தில் உட்காரவேண்டும். சரீரத்தை அடக்கி ஒடுக்கி உபவாசிக்க வேண்டும்.வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். அவர் இருக்குமிடத்தில் ஜெபத்தோடு 40 நாட்கள் உபவாசத்தோடு இருக்க பழக வேண்டும். அப்பொழுது,...

அப்போஸ்தலர்: 2:47 - "...இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்".

அநுதினமும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். சுவிசேஷ வேலை செய்ய வேண்டும். 8 மணிநேர வேலையல்ல; 12 மணிநேர உழைப்பு காணப்பட வேண்டும். அப்போது மனுஷரும், ஜனங்களும் சபையில் அநுதினமும் சேர்க்கப்படுவார்கள். உனக்கு கனம் கர்த்தரால் வரும். கனத்தைத் தேடி நீ போகாதே. கனம் உன்னைத் தேடி வரும்படி கர்த்தர் உனக்கு உதவி செய்வார்.

ஊழியம் வளர, சபை வளர சில ஆலோசனைகள்:


1. மதிப்பைக் காத்துக் கொள்:

கர்த்தர் தந்த மதிப்பைக் காத்துக்கொள்ளத் தெரிய வேண்டும். ஊழியருக்கென்று கர்த்தர் கொடுத்த கனத்தை வீணாக்கி விடக்கூடாது. மதிப்பைக் கெடுக்கும் விஷயங்களை நம்மை விட்டு உடனடியாக விலக்க வேண்டும். மதிப்பைக் கெடுக்கும் குணாதிசயங்களை, சுபாவங்களை கண்டறிந்து தாமதமின்றி கழித்து விடவேண்டும். விசுவாசிகள் உங்களை கனம் பண்ணும்படி உங்கள் மதிப்பைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

உன் மனைவியிடம் மதிப்பைக் காத்துக்கொள்
உன் பிள்ளைகளிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் கணவனிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் நண்பர்களிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் விசுவாசியிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் மூப்பரிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்

நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்தை நேசிக்க வேண்டும். மக்களை நேசிக்க வேண்டும். அதை அறிக்கையிட வேண்டும். "இந்தப் பட்டணத்திற்காக ஊழியம் செய்யும்படித்தான் கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார். இங்குதான் நான் ஊழியம் செய்வேன். என்ன நடந்தாலும் சரி. யார் என்ன சொன்னாலும், ஏசினாலும் சரி. இந்த மக்களிடம்தான் என் ஊழியம் இருக்கிறது. இங்குதான் சாவேன். இங்குதான் அடக்கம் பண்ணப்படுவேன். மரித்தாலும் உங்களுக்காவே மரிப்பேன்" என்று அவ்வப்போது அறிக்கை செய்து பாருங்கள். ஜனங்கள் உங்களை நம்புவார்கள். நேசிப்பார்கள். கொடுப்பார்கள். தாங்குவார்கள்.

நீங்கள்  ஊழியம் செய்யும் பட்டணத்து மக்களின் சிந்தையை உங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும்படி பேசுங்கள். அவர்கள் உங்கள் மேல் வேறு சிந்தையுள்ளவர்களாக மாற்றுங்கள். உங்களைக் குறித்து நல்ல அபிப்பிராயம் தோன்றும்படி உங்கள் நல்நடக்கை, உங்கள் நல்அறிக்கை அவர்களை உங்கள் பக்கம் திருப்பும். 

அப்போஸ்தலர்: 28:5 - கப்பற் சேதத்தினால் மெலித்தா தீவிலே கரை ஒதுங்கிய பவுலை விஷப்பு+ச்சி தீண்டியது. ஆகிலும், அவனுக்கு ஒரு தீங்கும் நேரிடாதிருந்ததைக் கண்ட தீவுவாசிகள், அப்: 28:6 - ல் "...வேறு சிந்தையாகி..." போனார்கள். அத்தீவுவாசிகள் பவுலை கனம் பண்ணும்படி கர்த்தரால் இக்காரியம் நடந்தது. உன்னைக் குறித்து உன் ஜனங்கள் வேறு சிந்தையாக வேண்டும். உன்னை உன் ஜனங்கள் உன்னைக் குறித்து வேறு சிந்தையாகி, உன்னை கனம் பண்ணும்படி நீ கர்த்தருடைய பார்வையில் அருமையானவனாகக் காணப்பட வேண்டும்.

உன் அநுதின நடவடிக்கைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். மதிப்பு கூட்டப்பட வேண்டும். அப்போது உனக்குப் பதிலாக மனுஷரையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் அவர் உனக்குத் தருவார்.

2. அழைப்பைக் காத்துக் கொள்:

அழைப்பில் இரண்டு வகை உண்டு. அவை:

அ)  உண்மையான தேவ அழைப்பு பெற்று அழைக்கப்பட்டவர்கள்

ஆ)  பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டவர்கள்

உண்மையாய் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்  - கிரயம் செலுத்தும்படி தேவன் எதிர்பார்ப்பார். அப்படிப்பட்டவர்கள் அவர்களின் ஊழியப் பாதையில் தியாகம் பண்ணி, கிரயம் செலுத்தி ஊழியம் செய்வார்கள். ஊழியத்தினிமித்தம் வரும் பாடுகளை, உபத்திரவங்களை சகித்து, சுவிசேஷத்தினிமித்தம் வருகிற தீங்கநுபவிப்பதில் சந்தோஷமாய் இருப்பார்கள். தேவ சித்தப்படி செய்வர்கள்.

பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டவர்கள் - கிரயம் செலுத்துவது குறைவாயிருக்கும். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் படி ஊழியம் செய்வார்கள். அதாவது, வேதாகமக் கல்லூரி படித்துவிட்டு, அதன் சட்டதிட்டங்களுக்கு படித்த இறையியலுக்கேற்றபடி கட்டுப்பட்டு, ஒரு வரையரைக்குள் இருந்து ஊழியம் செய்வார்கள். எழுத்தின்படி, பிரமாணத்தின்படி ஊழியம் செய்பவர்கள். கிரயம் செலுத்துதல் இதில் காணப்படாது. ஆனாலும் கர்த்தர் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருப்பார். அதற்கேற்ற சுமாரான வளர்ச்சி நிலை மட்டுமே காணப்படும். ஏனென்றால், இதில் கிரயம் செலுத்துதல் இல்லை.

இப்பொழுது இவையிரண்டில் ... நீ எந்த இடத்தில் அல்லது எந்தவித அழைப்பில் நின்று ஊழியம் செய்து கொண்டு இருக்கிறாய்?

உன் வளரா நிலைக்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்து உன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய். நீ மாறினால் எல்லாம் மாறி விடும். நீ கிரையம் செலுத்த முன்வந்தால் - அவர் உன்னை கனம் பண்ண முன்வருவார்.

மோசே  -  தேவனால் நேரடியாக அழைக்கப்பட்டான்
யோசுவா  -  பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டான்

யாரோ ஆரம்பித்ததை, யாரோ கட்டிக் கொடுத்ததை, யாரோ சம்பாதித்துக் கொடுத்ததை உன்னுடைய ஊழியமாக கருதாதே. எடுத்துக் கொள்ள முயற்சிக்காதே, பறித்துக் கொள்ள முயலாதே. அது உன் அழைப்பும் அல்ல; அது உன் ஊழியமும் அல்ல. அதற்குப் பெயர் ஊழியமல்ல.

ரோமர்: 15:21 - "நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்படாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி  நாடுகிறேன்"

அப்.பவுல் - தேவனால் நேரடியாக அழைக்கப்பட்டான்
தீமோத்தேயு  - பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டான்

ஆசைப்பட்டு வருவது அழைப்பல்ல; ஆண்டவரால் அழைக்கப்பட்டு வருவதே அழைப்பு. பிழைப்பு தேடி வருவது, கனத்தை விரும்பி வருவது அழைப்பல்ல.

லூக்கா: 9:24 - "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாக ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக் கொள்வான்"

'ஆண்டவரே! உமது ஊழியத்தினிமித்தம் இரத்தசாட்சியாக நான் என்னை மரிக்க ஒப்புகொடுக்கிறேன்' என்று என்து ஊழிய அர்ப்பணிப்பின் நாட்களிலே அர்ப்பணித்து தேவ அழைப்பைப் பெற்று வந்தேன். சாக வந்தவனை அவர் வாழ வைத்துப் பார்க்கிறவர் - என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார். என்னை வாழ வைக்கும் தெய்வம் உன்னையும் வாழ வைப்பார்.

ஊழியத்திற்காக சாகும்படி ஒப்புக் கொடு; அவர் உன்னை வாழும்படி செய்வார்

3. இடைவெளியைக் காத்துக் கொள்:

மோசேயின் காலத்தில் சுமார் ஏறக்குறைய 20 இலட்சம் மக்களை வழிநடத்தி வந்தார்கள் என கூறுகின்றனர். 20 இலட்சம் ஜனங்கள் இருந்தாலும், தேவன் மோசே என்ற ஒரு தனி மனிதனிடம் மட்டுமே பேச விரும்பினார். 20 இலட்சம் மக்களிடம் தேவன் பேச விரும்பவில்லை.

மோசே - 40+40+40 என 120 நாட்கள் உபவாசம் இருந்தான். அவனது ஆயுசு நாட்களை கவனியுங்கள். 120 வருடங்கள் உயிரோடு வாழ்ந்தான் என்றிருக்கும். அவர் உன்னோடு பேச வேண்டுமானால் உபவாசத்தினால் அவரைத் தேடு. உபவாசத்தோடு அவர் பாதம் நாடு. பேசுவார் உன்னோடு.

உபவாசிக்க வேண்டிய வயதில், காலத்தில் உபவாசத்தோடு தேவனிடம் மன்றாடுங்கள். உபவாசிக்க முடியாத காலமும் வரும்.

எபிரெயர்: 1:1 - "புர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்"

தேவனே வகைவகையாக, விதவிதமாக பேசுகிறவராயிருக்கிறார். நீ அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காதே. தேவசமூகத்தில் விழுந்து கிடப்பாயானால், அவர் உனக்கு வார்த்தையைக் கொடுப்பார். அதை சபையில் பேசு. அவர் சகலத்தையும் புதிதாக்குவேன் என்றவர் - உன் செய்தியையும் வார்த்தையையும் புதிதாக்குவார். வருமே எழுப்புதல் தானாய். வருமா? வராதா? ஆமாவா? இல்லையா?

அதேபோல சகோதரிமார்களும் வீட்டிலே சமையல் கட்டிலே ஒரே 'டைகர் குழம்பா" (புளிக் குழம்பு) செய்து போடக்கூடாது. விதவிதமாக சமைத்து கணவனையும், குழந்தைகளையும் அசத்த வேண்டாமா?

சபையிலும் அதேபோல விதவிதமாக போரடிக்காமல் தேவ செய்திகளை தேவசமூகத்தினின்று பெற்று எழுப்புதல் உண்டாகும்படி அசத்த வேண்டாமா? அதைத்தவிர என்னதான் வேலை நமக்கு? ஒருமுறை தேவசெய்தியை கேட்ட புதுநபர் தொடர்ந்து நம்சபைக்கு ஆவலாக ஓடிவரவேண்டாமா? ஓடிவரணுமா? ஓடிப்போகணுமா? அப்படியானால், தேவசமூகத்தில் காத்துக்கிடந்து பெற்று, எடுத்துக்கூறு.

யாராயிருந்தாலும் ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் (Keep Up Distance) பண்ணப்பட வேண்டும். விசுவாசியாயிருந்தாலும், மூப்பராயிருந்தாலும் இடைவெளி இருக்க வேண்டும். போதகருக்கும் விசுவாசிக்கும் ஒரு இடைவெளி டிஸ்டன்ஸ் இருக்க வேண்டும். எதுவும் ஒரு லிமிட்தான். அன் லிமிட்டாக போய்விடக்கூடாது.

தேவனே ஒரு எல்லைக்கோடு வைத்திருக்கிறார். சீனாய் மலைக்கு ஒரு எல்லைக்கோடுண்டு. மோசே மட்டுமே ஏறி வர வேண்டும். மக்கள் அடிவாரத்தோடு நின்றுகொள்ள வேண்டும். மீறி ஏறிவந்தால் அம்பு துளைக்கும். தேவனே டிஸ்டன்ஸை பாதுகாத்துக் கொள் எனும்போது நீ சட்டத்தை மீறினால் என்னவாகும்?

யாத்திராகமம்: 19:12,13  -  மோசேயைத் தவிர ஒருவரும் மலைமேல் வரக்கூடாது என்பது தேவ கட்டளை. ஆனால், என்ன நடக்கிறது? இரண்டுபேர் மலைமேல் ஏறி வருகிறார்கள். யார்யார்? மோசேயும், யோசுவாவும்தான். என்ன ஒரு நெஞ்சழுத்தம்?! கர்த்தர் ஏதாவது சொன்னாரா? ஒன்றுமே சொல்லலையே. ஏன்? இதெல்லாம் ஒரு ஹிண்டஸ்தான். இதையெல்லாம் தொடர்ந்து தியானித்துப் பாருங்களேன்...

4. ஆவிக்குரிய வாழ்வைக் காத்துக் கொள்:

இன்று புசித்து, குடித்து விளையாடும் ஊழியர்கள் வாழுகின்ற நாட்களில் இருக்கிறோம். அந்த மாதிரியான  விளையாட்டுக்கள் அல்ல. சிலர் சிரிக்க வைத்தே சரி பண்ணி விடலாம் என கருதுகிறார்கள். அப்படியல்ல. வாழ்வைக் கெடுக்கும் விளையாட்டுக்களை நிறுத்து.

நகைச்சுவையை நிறுத்து. உபவாசத்தை பெருக்கு. சத்தியத்தை கூறு. சத்தியம் நம்மை மாற்றும், பிறரை மாற்றும். விடுவிக்கும்.

நகைச்சுவை தேவைதான். அளவோடு. நகைச்சுவையே வாழ்வாக, செய்தியாக மாறி விடக் கூடாது. நகைச்சுவை, கேலி, கிண்டல் நம் ஆவிக்குரிய வாழ்வை கெடுத்துப் போடாதவாறு விழிப்பாக இருந்து காத்துக் கொள்ளப்பட வேண்டும்.

10 கட்டளைகளை மோசே பெற - 40 நாட்கள் உபவாசிக்க வேண்டியதாயிருந்தது. 10 நிமிட செய்திக்கு 40 நாட்கள் உபவாசம். என்ன ஒரு கணக்கு. எல்லாமே கணக்குதான். ஆவிக்குரிய கணக்கு. எழுப்புதலை கொண்டு வரும்.

10 கட்டளையை பெற்றுக் கொண்டு வரும் மோசே சொல்கிறான்: "பாளையத்தில் என்ன சத்தம்?" வயதான மோசே கேட்கிறான்.

யாத்திராகமம்: 32:17 - வாலிபனான யோசுவா சொல்கிறான்: "பாளையத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது" என்றான்.

யாத்திராகமம்: 32:18 - ல் வயதான மோசே சொல்கிறான்: "பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது" என்றான்.

யாருக்குக் காது நன்றாக கேட்கிறது என்று பாருங்கள். வயதானவனுக்கா? வாலிபனுக்கா?

மோசே - "பாடலின் சத்தம் என்கிறான்
யோசுவா - "யுத்தத்தின் இரைச்சல் என்கிறான்"

கவனிப்பதைக்குறித்து கவனமாயிருங்கள். வித்தியாசத்தைக் காண்பதில் விழிப்பாயிருங்கள். இரைச்சலா? பாடலா? இனம் காணுவதில் கவனம் ஊழியனுக்குத் தேவை.

இன்றைய இந்தியாவில் சில ஊழியர்கள் "யுத்தத்தின் இரைச்சல்" என்கிறார்கள். இனம் காணும் முதிர்ந்த அனுபவம் வாய்ந்த சில நல்ல ஊழியர்கள் "பாடலின் சத்தம்" என்கிறார்கள். "கிறிஸ்தவர்களுக்கெதிரான ஆட்சி அமைந்து விட்டது... ஆ... ஐயோ... ஐயகோ... அப்படியாகி விடும்... இப்படியாகி விடும்... என்ன செய்வது? என்ன செய்வென்? ஓ... ஓ... யுத்தத்தின் இரைச்சல் கேட்கிறதே" என சிலர் ஓலமிடுகிறார்கள். நீங்கள் அப்படி சொல்லாதீர்கள். நீங்கள் நல்ல அனுபவம் வாய்ந்த நல்ல ஆவிக்குரிய முதிர்வு பெற்ற ஊழியர் அல்லவா? உங்கள் நாவில் இப்படிப்பட்ட வாக்கு பிறக்கலாகாது. நீங்கள் இப்படி கூற வேண்டும்: "இந்த பீரியடில்தான் கர்த்தரைத் துதிக்கும் துதிப்பாடல் சத்தம் கேட்கிறது" என்று.

முதிர்ந்த அனுபவம் பெற்றவர்கள் - நேர்மறையாக பேசுவார்கள். மற்றவர்கள் - எதிர்மறையாக பேசுவர். உண்மை ஊழியன் - நேர்மறையாகவே பேசுவான்.

ஏசாயா: 65:8 - "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்"

நாட்டை யார் ஆண்டால் என்ன? "நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்" என்பதுதானே தேவனது வாக்கு. அப்படியிருக்க... நாம் ஏன் எப்பவும், எதையுமே ... எதிர்மறையாக பேசவும், அறிக்கையிடவும் வேண்டும்? இருட்டை பார்க்காதே... எழுந்து சென்று சுவிட்சை போடு. இருள் தானாய் விலகும். இயேசுவை நோக்கி போ... அவரையே பேசு... எல்லாம் சரியாகும்.

கர்த்தருடைய ஊழியக்காரன் - எஸ்கோல் பள்ளத்தாக்கில் காணப்பட்ட திராட்சைக்குலைப்போல காணப்பட வேண்டும். ஆண்டவர் இயேசு திராட்சைசெடி - திராட்சை குலைபோல இருக்கிறார். நீயும் அப்படியிரு.

5. தேவனுடைய அடிச்சுவடுகளைக் காத்துக் கொள்:

சங்கீதம்: 77:19,20 - "உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்"

தேவனுடைய அடிச்சுவடுகளை மறைக்கும் அல்லது அழிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். தேவனுடைய அடிச்சுவடுகள் காணாமல் போகும் காலம் இது. தேவனுடைய அடிச்சுவடுகள் காணாமல்போகும்போது கர்த்தருடைய ஊழியர்களின் கையால் அவர்களை நடத்துவார் என்று வேதம் கூறுகிறது. எனவே, கர்த்தருடைய அடிச்சுவடுகளை ஜனங்கள் பின்பற்றும்படி நாம் அவர்களை வழி நடத்த வேண்டும்.

கர்த்தருடைய அடிச்சுவடுகள் கலைக்கப்பட்டுள்ளது. பல துர்உபதேசங்களால் கலைக்கப்பட்டுள்ளது. சபைபோதகராகிய நீங்கள் அதை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். கர்த்தருடைய அடிச்சுவடுகளை மக்களுக்கு காண்பிக்கிறவர்களாயும், அதிலே அவர்களை நடக்குவிப்பவர்களாகவும் நாம் காணப்பட வேண்டும். ஜனங்கள் கர்த்தருடைய அடிச்சுவடுகளை காணார்கள். நாம் அதை காணும்படிச் செய்ய வேண்டும்.

6. விளக்கு அணையாமல் காத்துக்கொள்:

2இராக்கள்: 2:12 - "அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்;..."

2சாமுவேல்: 21:17 - "... அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்து போகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்".

எலியா - எலிசாவுக்கு, இஸ்ரவேலருக்கு - இரதமும் குதிரை வீரருமாய் இருந்தான்

தாவீது - இஸ்ரவேலின் மனுஷருக்கு -  விளக்காயிருந்தான்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்தாருக்கு? மக்களுக்கு? பின்பற்றி வரும் சீஷர்களுக்கு எப்படிப்பட்டவர்களாயிருக்கிறீர்கள்?

நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்திற்கு - நீங்கள்தான் விளக்கு. அது அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மத்தேயு: 16:18 - "... இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை."

உங்களைக் கொண்டுதான் (ஸ்தலசபை போதகர்) தேவன் தமது சபையைக் கட்டுவார். பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொள்ளாது என்பது தேவவாக்கு. எனவே, தைரியமாக, விசுவாசத்தோடு சபையை கட்டுங்கள்.

முதல் மூன்று வருடங்கள் நன்றாக சபையில் பட்டணத்தில்  வேலை செய்யுங்கள். அடுத்த மூன்று வருடங்கள் சபை நன்கு வளர தேவன் உதவி செய்வார்.

7. சொந்த தோட்டத்தைக் காத்துக்கொள்:

உன்னதப் பாட்டு: 1:6 - "... என்னைத் திராட்சத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்  தோட்டத்தையோ நான் காக்கவில்லை"

சொந்த சபையை நன்கு பராமரிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஆடுகளின் நிலைமையை நன்கு அறிந்து அதற்கேற்றபடி போஷித்து காப்பாற்ற வேண்டும்.

எஸ்தரின் புத்தகத்தில் மொர்தெகாயின் சபையைப்பற்றி வாசிக்கிறோம். மொர்தெகாய் சபையில் எஸ்தர் என்ற ஒரேஒரு விசுவாசிதான் இருந்தாள். அவளுக்கு வேண்டிய ஆவிக்குரிய ஆகாரத்தை நன்கு போஷித்தான். உருவாக்கினான். நன்றாக போதித்தான். விளைவு? 128 தேசங்களுக்கு மகாராணியானாள். 128 தேசங்களுக்கு தலைவியானாள். 128 தேசங்களை ஆண்ட ராஜா அகாஸ்வேருக்கு இல்லத்தரசியானாள். கேட்பதை பெற்றுக் கொள்ளும் உரிமையைப் பெற்றாள். தேவஜனத்திற்காக உபவாசித்தாள்.  தேவஜனத்தின் மீட்பிற்காக ஜீவனையும் பாராமல் பாடுபட்டு மீட்கும் சட்டத்தினை கொண்டு வந்து காப்பாற்றினாள்.

எனவே, சொந்த தோட்டத்தை நல்லமுறையில் காக்க வேண்டும். சொந்த சபைக்கு நல்ல ஆவிக்குரிய போஷாக்கு கொடுக்கப்பட வேண்டும். நல்ல உபதேசம் பண்ணு. உன்மூலம் தேசத்தை அசைக்கும் தலைவர்கள் உன் சபையில் எழும்ப வேண்டும்.

உன்னுடைய வார்த்தைக்கு உன் சபையில் மதிப்பிருக்க வேண்டும். தூதர்கள் உன் வார்த்தையை மதிக்க வேண்டும். பிசாசுகள் உன் வார்த்தையை மதிக்க வேண்டும். தூதர்களும், பிசாசுகளும் உன் வார்த்தைகளை கனம் பண்ண வேண்டும். அந்தளவுக்கு உன் வார்த்தைகள் மதிப்பு வாய்ந்தவைகளாக மாற வேண்டும். வல்லமையுள்ளவைகளாக மாற வேண்டும்.

வியாதி நீங்க கட்டளையிட்டால் நீங்க வேண்டும். பிசாசே ஓடு என்றால் ஓட வேண்டும். குழந்தை பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றால் உண்டாக வேண்டும்.

8. வேதவாசிப்பைக் காத்துக்கொள்:

எசேக்கியேல்: 3:1-3 - "பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழு அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக் கொடுத்து: மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிறஇந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது".

வெளிப்படுத்தல்: 10:8-10 - கடைசி நாட்களில் ஒரு தூதன் கையில் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை வாங்கி புசிக்கும்படி கட்டளை பிறக்க அதை வாங்கி யோவான் புசிக்க, அது வயிற்றிற்கு கசப்பாயிருந்தது என வாசிக்கிறோம்.

எசேக்கியேல் கண்ட தரிசனமாகட்டும், யோவான் கண்ட தரிசனமாகட்டும் - மொத்தத்தில் புத்தகத்தை புசிக்க வேண்டும். அதாவது வேதவாக்கியத்தை விருப்பமான ஆகாரம்போல வாசித்து புசிக்க வேண்டும்.

ஊழியர்கள் வேதவாசிப்பில் உறுதியாயிருக்க வேண்டும். வேதம் வாசிக்க நேரம் இல்லை என கூறக்கூடாது. வேதவாசிப்பு முதலிடம். எவ்வளவு பிரயாணங்கள் மற்றும் வேலைப்பளு இருந்தாலும் தவற விடக்கூடாது. உங்கள் வாழ்வில் காணப்படும் விளையாட்டுத்தனமான காரியங்கள், நகைச்சுவைகளை நிறுத்துங்கள் என்று மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவகிருபையை இழந்து விடாதபடி ஜாக்கிரதையாயிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களோடிருப்பாராக! ஆமென்!