ஆகஸ்ட் 26, 2014

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 10. "குடும்பத்தில் ஆண்களின் பங்கு"


தலைமைத்துவத்தில் உள்ள ஒரு ஆண் - தன் குடும்பத்தோடுள்ள உறவில் தனது பங்களிப்பை முழுமையாக கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு சிறந்த தலைவனாக, சிறந்த ஒரு ஆசாரியனாக இருக்க வேண்டும்.

தீர்க்கதரிசியைப்போல தனது குடும்பத்தைப் பற்றிய ஆவிக்குரிய தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். குடும்பத்தை   காப்பதில் போஷிப்பதில் வளர்ப்பதில் கவனம் இருக்க வேண்டும். 'சீக்கு வந்த கோழியை சாமிக்கு நேந்திக்கோ' என்பதுபோல பிள்ளைகளை வளர்க்கக்கூடாது. மனைவிக்கு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்லதொரு தகப்பனாகவும் இருக்க வேண்டும்.

மனைவியின் பெலவீனத்தில் உதவ வேண்டும். பெலவீன நேரத்தில்தான் அதிக அன்பு காட்ட வேண்டும். அன்புக்கு பொருள் - எதை, எப்போது கொடுத்தாலும் 'சிறந்ததைக் கொடுக்கும்' என்பதே.


பலவீனம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை:

1. சரீர பலவீனம்     2. ஆவிக்குரிய பலவீனம்

- இவ்விரண்டு பலவீனங்களையும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரிசுத்தவான்கள் எவ்வாறு மேற் கொண்டனர் என்பதை ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்து, அதே வண்ணமாக நாமும் பலவீனங்களை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

ஆய்வுக்காக சில கேள்விகள்... வேதத்தின் வழியே ஒப்பிட்டு பாருங்களேன்...

பரிசுத்தவான்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு என்ன செய்தனர்?
மனைவியின் பேச்சைக் கேட்டு என்ன செய்தனர்?
புருசனை பிசாசு எப்படி பயன்படுத்துகிறான்?
மனைவியை பிசாசு எப்படி பலவீனப்படுத்துகிறான்?


மனைவியை ஆவிக்குரியப் பெண்ணாக மாற்ற என்ன வழி?

ஆதியாகமம்: 2:24 - "இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்..." என்று சொன்னாரே தவிர... தேவனை விட்டு அல்ல - என்பதை ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில ஆண்கள் தேவனை விட்டுவிட்டு மனைவியே கதியென இருப்பார்கள்.

குறைந்தபட்சம் தினமும் அரைமணி நேரம் குடும்ப ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு தேவசெய்தியை சி.டி.மூலமாக கேட்கச் செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு நல்ல ஆவிக்குரிய புத்தகத்தை வாசிக்கப் பழக்க செய்ய வேண்டும்.

விசுவாச வார்த்தைகளை பேச வைக்கவும், விசுவாசிக்கச் செய்யவும் வேண்டும். வாக்குத்தத்தங்களின் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் ஏற்படுத்த வெண்டும். சிறிய நன்மைக்கும் கர்த்தருக்கு நன்றி சொல்ல பழக்குவிக்க வேண்டும்.


 குடும்பத்தை கண்காணிக்க வேண்டும்:

மனைவி மற்றும் பிள்ளைகளின் செயல்களை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் வேண்டும். இதற்குப் பெயர் சந்தேகப்படுவதல்ல. சந்தேகம் வேறு. கண்காணிப்பது என்பது வேறு. சரியான கண்காணிப்பு இல்லாததினால் எத்தனையோ வேதாகம புருஷர்களின் குடும்பங்கள் சிதறிபோனதை வேதத்தில் காணலாம். நடைமுறை வாழ்வில் பல குடும்பங்கள் சீரழிந்து போனதையும் அறிவீர்கள்.

இயேசுகிறிஸ்து அடக்க ஆராதனை செய்ய மாட்டார். எந்த வீட்டுக்குப் போனாலும் சரி. மரித்தோரை எழுப்பி உட்கார வைப்பார் நமதாண்டவர் இயேசு. அதுபோல எந்த சூழ்நிலையையும் மாற்றி அமைக்கத் தெரிய வேண்டும்.

தேவன் எப்போது நமக்குள் கிரியை செய்வார்? பிசாசு எப்போது  நமக்குள் கிரியை செய்வான்? என்பதை மனைவி பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். மனைவி பிள்ளைகளுக்கு ஆதாம் கற்றுத்தராததினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை நாம் அறிவோம். அதை இன்று வரை முழு உலகமும் அனுபவித்து வருகிறதையும் நாமறிவோம். விழித்திருங்கள்.

குடும்பத்தை வேதவாசிப்பிலும் தனி ஜெபத்திலும் ஊக்கப்படுத்த வேண்டும்.

குடும்பத்தின் நிர்வாகம், வரவு செலவு பற்றி கற்றுக் கொடுக்க  வேண்டும்.

கர்த்தருக்கு கொடுப்பதை பற்றி குடும்ப அங்கத்தினர்களுக்கு நன்கு போதிக்க வேண்டும். கொடுத்தலின் ஆசீர்வாதத்தினை புரியும்படி விளக்க வேண்டும். பிள்ளைகளின் கைகளில் காணிக்கை கொடுத்து போடச் சொல்லி கற்றுத் தர வேண்டும்.