அக்டோபர் 31, 2019

முட்கள் நமக்கு சாதகமா? பாதகமா?பாதிப்பா? பாதுகாப்பா?

உன்னதப்பாட்டு:2:1,2 - "நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்."

இந்த வார்த்தை யாருடையது? 

சாதாரணமாக பார்த்தால் முதல் வசனம் இயேசுவையும் இரண்டாம் வசனம் மணவாட்டியையும் குறிப்பது போல இருக்கும். ஆனால் அது தவறு.

1 வசனம் - மணவாட்டிக்குரியது (சபை)
2 வசனம் - மணவாளனுக்குரியது (இயேசு)

நாம் முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பமாயிருக்கிறோம். அதின் அர்த்தம்: உபத்திரவத்தின் நடுவிலும் அழகாக இருக்கிறோம்.

முட்கள் - எபிரேய வார்த்தை:  Choch / Koa-ach - பயன்படுத்தப்படாத வேர்

இங்கே முட்கள் என்பது மனந்திரும்பாத ஜனங்கள் (அ) பரிசுத்தமாக்கப்படாத ஜனங்களை குறிக்கும்

I. முட்களுடைய தன்மை என்ன? (முள் - உபத்திரவம்)

1.குத்துவது

ஒரு முள் நம்மை குத்திவிட்டால் அலறாமல் குத்தின முள்ளை பயன்படுத்தவும் நமக்கு வேலியாக்கி கொள்ள தெரிய வேண்டும். கடிக்க வரும் சிங்கத்தை நமக்கு பாதுகாப்பு தரும் நாயை போல மாற்றிக்கொள்ள தெரிய வேண்டும். துன்பத்தை இன்பமாகவும் தீமையை நன்மையாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

2.பயமுறுத்துவது

வழியில் கிடக்கும் முள்ளை கண்டு பயப்படாமல் சர்வாயுதவர்க்கமான ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொண்டு மேற்கொள்ள வேண்டும். நின்று நிதானித்து வீழ்த்தவேண்டும். நம்மை ஒருவன் பயமுறுத்தினால், அவனை பார்த்து சிரிக்க வேண்டும்.ஏனென்றால் அவனுக்கு நம்மேல் பயம் வந்ததினால் தான் நம்மை பயமுறுத்துவான்.

3.பதம்பார்ப்பது

சில சமயம் நாம் முட்களை உபயோகப்படுத்தும்போது நம்மை அறியாமலேயே நம்மை குத்திவிடும். நம்மையே பதம் பார்த்து விடும்.

4.பாதுகாப்பது

பூ, கனி,இலை - இவற்றின் கீழே இருக்கும் முள் பாதுகாப்பு தருவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. அந்த முள் காற்றில் அசையும்போது கனிகளுக்கு இலைகளுக்கும் சேதத்தை உண்டாக்கும். பாதுகாப்பு கொடுக்கும் முள் பாதைக்கு வந்தால் ஆபத்தாகி விடும்.

II. முட்கள் நமக்கு அனுமதிக்கப்படுகிறதா? 

 ஆம்! தேவனே அதை அனுமதிக்கிறார்.

2கொரிந்தியர்:12:7-9 - "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில்வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்"

"பெருமை வந்தால் மதிகேடு வரும்; மதிகேடு வந்தால் பின்மாற்றம் வரும்; பின்மாற்றம் வந்தால் முடிவில்  நரகம் கிடைக்கும்"

எனவே அதை தடுக்கும்படியாக தேவனே முள்ளை கொடுக்கிறார். தேவனால் அனுமதிக்கப்பட்ட முள் நம்மை கொல்லாது.நமக்குள் இருக்கிற மேட்டிமையை தாழ்மைப்படுத்த தேவன் அந்த முள்ளை வைத்திருக்கிறார். சில முட்களை தேவன் நீக்கமாட்டார். ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதற்கு ஏதுவாக சில முட்கள் தேவனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 

III. முட்கள் தானாகவே வருகிறதா? 

ஆம்! எங்கேயோ போக வேண்டிய முள் நமக்கு வரும்.

காற்றில் வரும் முள்:

1. அடுத்தவர் பிரச்சினை
2. சொந்த பிரச்சினை
3. சபை பிரச்சினை
4. போதகர் பிரச்சினை
5. கட்சி பிரச்சினை
6. மத பிரச்சினை
7. அரசியல் பிரச்சினை
8. சமூக வலைத்தளங்கள்

2சாமுவேல்:1:6 - "அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்."

2சாமுவேல்:20:1,2 - "அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்."

தற்செயலாய் வருகிறவன் நம் உடலுக்கும் உடைமைக்கும் சேதத்தை வருவிப்பான்.  அவன் திட்டத்தோடே வருவான்; ஆனால் அவன் தற்செயலாய் வந்தது போல நடிப்பான். ஆகவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நீதிமொழிகள்:26:17 - "வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்."

1தீமோத்தேயு:6:20 - "ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு."

நம்மிடத்தில் ஒப்புவிக்கபட்டது:


  • இரட்சிப்பு
  • விசுவாசம்
  • பரிசுத்தம்
  • ஆவியின் அபிஷேகம்
இவற்றை இழந்தால் பரலோகத்தில் இடம் இல்லை. ஆகவே மோசம் போகாமல் ஆகாத சம்பாஷணைகளுக்கு விலக வேண்டும்.

"நமக்கு அவசியமில்லாத பாரத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும்? 
 நமக்கு தெரியாததை நாம் ஏன் தீர்ப்பிட வேண்டும்?"

IV. முட்கள் போகும் வழியில் கிடக்கிறதா? 

பிரயாணங்களில் முட்கள் வரும்.நம் பிரயாணங்களில் பிசாசு மரணத்தை கொண்டு வருவான். நம்மேல் பகையாக இருக்கிறவர்கள், எரிச்சலுள்ளவர்கள் நம் வழியில் வீழ்த்த வருவார்கள். வழியிலே விரியனை போல முட்கள் இருக்கும்.

யாத்திராகமம்:33:14 - "அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

காலையில் எழுந்தவுடன் தேவசமூகம் நம்முடன் வரும்படியாக மோசேயை போல ஜெபம் செய்ய வேண்டும்.

V. முட்களை யாராவது போடுகிறார்களா? 


அகித்தோப்பேல், சீமேயி, ஆமான், யூதாஸ் - இவர்களை போல தீமை செய்வது சந்தோஷம் என்று கருதுபவர்கள் நம் வாழ்வில் முட்களை போட நினைப்பார்கள். ஆனால் தேவன் நம்மை அவர்களெல்லாவித துர்ஆலோசனைகளுக்கும் விலக்கி பாதுகாப்பார்.

"அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்கும் தேவன் நம்மோடு உண்டு."

மணவாட்டி எப்படிப்பட்டவள்?

1. முட்களை சகித்து, சமாளித்து, கையாண்டு, உபயோகித்து, வாழ தெரிந்தவள்.
2. முட்களால் பட்ட பாடுகள், வலிகள், வேதனைகள் இவையெல்லாவற்றையும் சகித்து கொண்டு அழகாய் இருப்பவள்

முட்களால் குத்தப்பட்டு வருகிற வாசனையை தேவன் நுகர்ந்து மகிழ்வார். ஆகவே முட்களை கண்டு பயப்படாமல் தேவ பெலத்தோடே கையாண்டு மலராக மலர்வோம்!!!! 

"முள் இருக்கும் என் வாழ்வில்...
ஆனால் அதில் நான் மலராய் மலர்ந்திருப்பேன்"