ஆகஸ்ட் 04, 2016

“நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்”



திறவுகோல்வசனம்: கொலோசெயர்: 3:15 – “… நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்”
கர்த்தருடையபிள்ளைகள் நன்றி சொல்கிறவர்களாகவும், நன்றியறிதலுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என வேதம் கூறுகிறது. 

நன்றி சொல்லுதல், நன்றியறிதல் – இவையிரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 

நமக்கு யாராகிலும் உதவி செய்திருந்தால் நாம் பதிலுக்கு “நன்றி” என்று வாயால் சொல்கிறோம். அல்லது அந்நன்றிக்கு பதிலாக நாமும் அவர்களுக்கு தக்க சமயத்தில் பிரதியுபகாரமாக திருப்பி ஏதாகிலும் உதவி செய்து நன்றி கடன் செலுத்தி விடுதல் – “நன்றி சொல்லுதல்" ஆகும்.

நமக்கு நன்மை செய்தவருக்கு மட்டும் நன்றி சொல்லாமல், அந்நன்றியை நமக்கு செய்யும்படி பின்னிருந்து செயல்பட்ட ஒரு வல்லமை உண்டு. கண்களால் காணமல் இருந்தும் அது கர்த்தராகிய தேவன் என்பதை அறிந்து, அவ்அறிவினால் கர்த்தரை உணர்ந்து ஆண்டவருக்கு நன்றி சொல்ல முற்படுகிறோமே… அதுதான் “நன்றியறிதல்”

நாம் மனிதருக்கு எல்லாம் ஒழுங்காக நன்றி சொல்லி விடுவோம். காரணம்?

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல                                                                                    தன்றே மறப்பது நன்று” 
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை                                                செய்ந்நன்றி கொன்ற மகற்கு”   - போன்ற திருவள்ளுவனின் குறள்களை சிறுவயதில் பள்ளியில் படித்திருப்பதால் ஓரளவுக்கு மனிதன் மனிதனுக்கு நன்றி சொல்லி விடுகின்றனர்.

ஆனால், நமக்கு உதவி செய்யும்படி ஏவிவிட்ட தேவனுக்கு மட்டும் நன்றியறிதல் செய்திட மாட்டோம். அதை அறிந்திட மாட்டோம். உணர்ந்திட மாட்டோம். கர்த்தருக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை நாம் கொடுக்கிறோம் என தெரிகிறதா?

கர்த்தர் நமக்கு செய்திட்ட நன்மையான ஈவுகள் அனைத்திற்கும் நன்றியறிதலுள்ளவர்களாயிருந்திருக்கிறீர்களா?

 “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மை பாராட்டுகிறாய்?” (1கொரிந்தியர்: 4:7)


மேற்கண்ட வசனத்தில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதை காண்கிறோம். இம்மூன்றிற்கும் நாம் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறோமா?  நாம் மெய்யான ஆவிக்குரியவர்களாயிருக்கிறோமா? இல்லையா? என்பதை இக்கேள்விகளை தியானிக்கும்போது தெரிந்துவிடும். தொடர்ந்து தியானிப்போம்.

1. நீ விசேஷமானவன்


“அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்?” – இது முதல் கேள்வி.

“விசேஷம்” – என்பதன் பொருள் – “அதிஅற்புதமாக/ தனிச்சிறப்பு வாய்ந்த/ பிரம்மிக்கத்தக்க/ அநேகரில் நீ மட்டும்/ “ 

தேவனாகிய கர்த்தர் நம்மை பார்த்து …

நீ விசேஷமானவன் – நீ அதி அற்புதமானவன் – நீ தனிச்சிறப்பு வாய்ந்தவன் – நீ பிரம்மிக்கதக்கவன் – அநேகரில் நீ மட்டும் ஸ்பெஷல் என்று கூறுகிறார்.

உலகம் நம்மை வெறுக்கையிலும், நேசிப்பவர் நம்மை விட்டு விலகும்போதும், நன்மையை பெற்றவர் நம்மை விரோதிக்கும்போதும், பாசமானோர் பகைக்கும்போதும், எல்லாமே நம் கையை விட்டு போகும்போதும் – நம்மை வெறுக்காமல் உலகமே வியக்கும்படி நம்மை மேன்மைப்படுத்தி சிறப்பிக்கும் தேவன் ஒருவர் உண்டானால்… அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துதான். நமக்கெல்லாமே எதிராக இருக்கும்போது நம்மை விசேஷித்தவனாகும்படி உதவி செய்கிறவர் யார் தெரியுமா? கர்த்தராகிய இயேசு ஒருவர் மட்டுமே.

நாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் போல இவ்வுலகிற்கு முன்பு காணப்பட்டோம். பயனற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்டோம். ஆனால், நம்மை எல்லாவற்றிலிருந்தும் மீட்டெடுத்து சிறப்பு வாய்ந்தவர்களாக மாற்றியிருக்கிறவர் நமக்குண்டே! நாம் தேவனால் எல்லா நிலைகளிலும் விசேஷமானவனாக தெரிந்து கொள்ளப்பட்டதால்தானே இவ்வளவு உயர்வும் மேன்மையும்!

நம்மை அநேகர் வெறுத்தார்கள். அநேகர் நம்மை வேண்டவே வேண்டாம் என்றார்கள். வீட்டு வாசலைகூட மிதியாதே என்றார்கள். கண்டாலே ஆகாது என்றார்கள். ஏன் பெற்றவர்கள்கூட தூக்கியெறிந்து விட்டார்கள். சிலர் வார்த்தையால் மற்றவர்கள் செயலால் நம்மை ஈனப்படுத்தினார்கள். ஆனால், இவையெல்லாவற்றிலிருந்தும் தேவனாகிய கர்த்தர் நம்மை தூக்கி உயர்த்தி மேன்மைபடுத்தி விசேஷமானவனாக்கியிருக்கிறாரே! அவர் எவ்வளவு நல்லவர்!

ஆடுகளின் பின்னே சென்ற தாவீது, அரசனான பின்பு சொல்கிறதைப் பாருங்கள்:

 சங்கீதம்: 139:14 – “நான் பிரம்மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்;” தாவீது தன் வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்கிறான். சரீர அமைப்பைப்பற்றி மட்டும் பார்த்து அவன் பிரம்மிக்கவில்லை. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் திரும்பிப்பார்த்து பிரம்மித்துப்போய் தேவனைத் துதிப்பதைப் பார்க்கிறோம்.

இஸ்ரவேலுக்கு இராஜாவாக ஈசாயின் குமாரரில் ஒருவனை தேவன் தெரிந்து கொள்ள சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பி வைத்தார். ஈசாயினிடத்தில் வந்தபோது, தாவீதை தவிர மற்றவர்களை அவன் அறிமுகம் செய்கிறான். காரணம் ஆடுமேய்ப்பவன்தானே என்ற ஏளனம். மூத்த அண்ணன்மார்கள் அனைவரும் இராணுவத்தில் வேலை பார்க்க, அவர்களில் ஒருவனைத்தான் தேவன் தெரிந்தெடுப்பார் என ஈசாய் ஒருவேளை நினைத்திருக்கலாம்.(1சாமுவேல்: 16:6-11). தகப்பன் தாவீதை மறந்தான். தேவன் தாவீதை தெரிந்தெடுத்தார். அபிஷேகித்தார்.

கோலியாத்தை வீழ்த்த உதவினார். அதற்கு முன்பு கரடியையும் பாலசிங்கத்தையும் கிழித்துப்போட உதவினார். சவுலின் கைக்குத் தப்புவித்தார். ஒருதடவையல்ல… பலமுறை.

தவறான முடிவெடுத்து பெலிஸ்திய ராஜாவிடம் தஞ்சமடைந்து போது, இஸ்ரவேலருக்கு அவமாய்ப்போகாதபடி வழிகாட்டினார். “தாவீது, கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவர்” பொல்லாப்பு செய்துவிடக்கூடாது என்பதற்காக நாபாலை கொன்று பழிக்காகதபடிக்கு தடை செய்ய கர்த்தர் அபிகாயிலை அனுப்பி காத்தார். (1சாமுவேல்: 25:28). தாவீது தன் வாழ்வில் கர்த்தர் இடைபட்டு செய்த சகல நன்மைகளையும் பார்த்து பார்த்து பிரம்மித்துப்போய்தான் 139 சங்கீதத்தை பாடுகிறான்.

பிரியமானவர்களே! தாவீதுக்கு மட்டுமா அவர் தேவன். உங்களுக்கும்தான் அவர் தேவன். உங்கள் வாழ்விலும் அவர் இடைப்படுவார். உங்களை விசேஷமானவனாக மாற்றுவார். விசுவாசியுங்கள். உங்கள் வாழ்வு மாறும். நீங்கள் விசேஷமானவர்கள்.

உலகில் வாழும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களை எவ்விதம் அறிக்கையிடுகிறார்கள் தெரியுமா?

நாத்திகர்கள்: ஒரு செல் உயிரினமான அமீபாவிலிருந்து உருவானோம் என்கிறார்கள். (அந்த ஒருசெல் உயிரினத்திற்கு உயிர் கொடுத்த வல்லமையுள்ளவர் ஒருவர் உண்டல்லாவா? அவர்தான் தேவன் என்றால் ஏற்றுக்கொள்ள மறுப்பர்)

விஞ்ஞானிகள்: குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். (பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும்… இன்னும் ஒரு குரங்குகூட மனிதனாகாதது ஏன்? என்றால் விடையில்லை. மனிதனுக்கு இரத்தம் தேவைப்படும்போது குரங்கின் இரத்தத்தை செலுத்த மறுக்கிறார்களே ஏன்?)

இந்துக்கள்: பிரம்மனுடைய வாயிலிருந்து தோன்றினவர்கள் பிரமாணர்கள். பிரம்மனது தோள்பட்டையிலிருந்து தோன்றினவர்கள் ஷத்திரியர்கள். பிரம்மனது தொடையிலிருந்து தோன்றினவர்கள் வைசியர்கள். பிரம்மனது காலிலிருந்து தோன்றினவர்கள் சூத்திரர்கள். பிரம்மனது பாதத்திலிருந்து தோன்றினவர்கள் பஞ்சமர்கள் என்று கூறுகிறார்கள். ஆக… யாரும் பிறக்க வேண்டியதிலிருந்து யாரும் பிறக்கவில்லை. என்ன கொள்கையோ?! மனிதர் யாவரும் பிரம்மனிலிருந்து தோன்றியிருப்பின் எதற்கு வர்ணாசிரமம் வந்தது? அனைவரும் பிரம்மா கடவுளுடைய சரீரத்திலிருந்துதானே தோன்றினார்கள். அப்படியானால் எல்லாரும் சம அந்தஸ்து உள்ள சிறப்பு வாய்ந்த மக்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும். அப்படியிருக்க… எப்படி ஏற்றத்தாழ்வு வந்தது? அப்படியானால், பிரம்மாவின் காலிலும், பாதத்திலும் ஏதோ ஒரு தீட்டு இருக்க வேண்டும் அல்லவா? சரி… இதைப்பற்றி பிறிதொரு சமயம் கர்த்தருக்கு சித்தமானால் பார்ப்போம்.

கிறிஸ்தவர்கள்:   தேவன் அவரது சாயலாகவும், அவருடைய ரூபமாகவும் தங்களை படைத்தார் என்கின்றனர்.

அன்பானவர்களே!
தேவன் நம்மை அவரது சாயலின்படியும் அவரது ரூபத்தின்படியும் விசேஷமாக அழகாக நம்மை படைத்திருக்க… நம்மை போய் குரங்கின் சாயலுக்கு ஒப்பிட்டு, படைத்த சிருஷ்டிகரை அவமானப்படுத்தலாமா? சிந்தியுங்கள்.

விசேஷமானவர்களுக்கு தேவன் கொடுக்கும் விசேஷங்கள்


1. கிறிஸ்துவைப்பற்றிய சுவிசேஷம் நமக்கு விசேஷமாக தரப்பட்டுள்ளது:
அப்போஸ்தலர்: 28:31 – “மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான்”.

2. பரிசுத்தவேதாகமத்தின் மூலம் ஆறுதல் பெறுகிற விசேஷத்தை தருகிறார்:
எபிரேயர்: 6:18 – “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து அவரைத்தேடி அடைக்கலமடைய ஆலயத்திற்கு ஓடி வந்த நமக்கு, இரண்’டு மாறாத விசேஷங்கள் (பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு) மூலம் நமக்கு ஆறுதல் உண்டாகும்படி செய்கிறார்.

3. இயேசுவுக்கடுத்த விசேஷங்கள் அதாவது 2ஆம் வருகை, 1000 வருட அரசாட்சி… போன்ற விசேஷங்கள் போதனையாக தரப்பட்டது:
அப்போஸ்தலர்: 28:23 – “அதற்காக அவர்கள் ஒருநாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்”.

நம்மை மீட்கும்படிக்கு பிதாவினால் முன்னறிவிக்கப்பட்டவர் கர்த்தராகிய இயேசுதான் என்பதை மோசேயின் நியாப்பிரமாண புஸ்தகத்திலும், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து நிரூபித்ததோடல்லாமல்… இயேசுவுக்கடுத்த காரியங்கள் அதாவது வருடைய இரண்டாம் வருகை மற்றும் அதிலேயே இரண்டு பிரிவுகளாகிய 1. இரகசிய வருகை 2. பகிரங்க வருகை – பற்றியும், 1000 வருட அரசாட்சி பற்றியும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புப் பற்றியும், பின்பு புதிய வானம் புதிய பூமி பற்றியும் நல் விசேஷங்களாக போதிக்கப்பட்டது. இப்பொழுதும் சபைகளில் விசேஷங்களாக போதிக்கப்படுகிறது.

4. ஆதிமுதல் உபதேசிக்கப்பட்ட விசேஷங்களை திட்டமாய் ஒவ்வொருவரும் அறிய வேண்டுமென்று விசேஷங்கள் தரப்பட்டது:
லூக்கா: 1:3 – “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நீச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று,”
லூக்கா: 24:44 – “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்”.


ஆதிமுதல் உபதேசிக்கப்பட்ட விசேஷங்களை திட்டமாய் ஒவ்வொருவரும் அறிய வேண்டுமென்று ஏன் எழுதப்பட்டது?


அ) யோவான்: 20:31 – “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது”.

ஆ) லூக்கா: 1:2-4 – “ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று “.

1. விசுவாசித்து நித்திய ஜீவனை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
2. தப்புத்தப்பாய் சரித்திரம் எழுத அநேகம்பேர் புறப்பட்டபடியினால் சுத்த சுவிசேஷத்தை கர்த்தரால் உபதேசிக்கப்பட்ட விசேஷம் மாறாமல் கலப்பின்றி துப்புரவாய் உபதேசிக்கப்பட திட்டமாய் ஆய்வு செய்து எழுத வேண்டியது அவசியம். அப்பொழுது, பின்வரும் எதிர்கால சந்ததியினர் துர்உபதேசத்தில் விழுந்துவிடாமலிருக்க அது உதவி செய்யும். பாதுகாக்கும்.

“மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள்”


பிரசங்கி: 6:11 – “மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜமென்ன?”
இன்றைக்கு எத்தனையோ மாயையை பெருகப் பண்ணுகிற கதை கட்டுரைகள், பொழுது போக்கும் சமாச்சாரங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணைய தளதளம் வலைதளங்களிலும் ஏராளம் ஏராளம் காணக் கிடக்கிறது. அவைகளினால் மனிதனுக்குப் பிரயோஜனமென்ன? என்று பிரசங்கி கேட்கிறார்.

பிரசங்கி: 6:12 – “நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?...” 

பிரசங்கி: 12:12 -14 – “என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்”.

உலகம் தருகின்ற “மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்களை”விட, விசேஷமானவர்களுக்கு தேவன் கொடுக்கும் விசேஷங்கள் எவ்வளவு மேன்மையானவைகள்!! 
அவைகளையே வாஞ்சிப்போம்.

இப்படி நம்மை விசேஷமானவனாகும்படி செய்த தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க வேண்டாமா?

2. நீ பெற்றுக் கொண்டவன்


“உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது?”  - இது இரண்டாவது கேள்வி

எபேசியர்: 1:3 – “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்”
கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட அனைவரும் உன்னத்திலிருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் பெற்றவர்கள் என்று வேதம் கூறுகிறது. உன்னத ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகள். உரிமையுள்ளவர்கள். அதை அவர்கள் பெற்றுவிட்டார்கள். “ஆசீர்வதித்திருக்கிறார்” என்று தெளிவாக வேதம் கூறிவிட்டது. ஆம் நாம் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டோம்.

ஆவிக்குரியவனுக்கு உண்டாயிருக்கிறவைகள் அனைத்தையும் கிறிஸ்து இயேசு நமக்கு முன்பே கொடுத்து விட்டார். அதாவது கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட அனைவருக்கும், ஆவிக்குரியவனுக்கென்று உன்னதத்தில் உண்டாயிருக்கிற சகல ஆசீர்வாதத்தினாலும் அவர் ஆசீர்வதித்து விட்டார். இனி புதிதாக ஒன்றும் ஆவிக்குரிய வாழ்வில் ஆசீர்வதிக்க வேண்டியதில்லை என பொருள்படுவதைக் கவனியுங்கள்.

கலாத்தியர்: 3:6-9 – “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால், விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்”.

கவனியுங்கள்: கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட புதிய ஏற்பாட்டு விசுவாசிக்கு இரண்டுவித ஆசீர்வாதங்கள் உண்டாயிருக்கிறது.

அ) உன்னதத்தில் இருக்கிற சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகள் ஆகிறார்கள்.

ஆ) அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்பட்டு பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் உரிமைபெறுகிறார்கள். 

எபிரேயர்: 6:18 – “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” புதிய ஏற்பாட்டின் ஆசீர்வாதமும் பழைய ஏற்பாட்டின் ஆசீர்வாதமும் உண்டாயிருக்கிறது. இரட்டிப்பான ஆசீர்வாதங்கள். எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றவர்கள் நாம். அல்லேலூயா!

அப்படியானால்… ஆவிக்குரியவனே… பெற்றுக்கொண்டது உண்மையானால்… உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது யாது?

ஆவிக்குரிய வாழ்வில் இன்னமும் நீ பெறாதது யாது? … ஏன்? … எது தடை? … எதனால்? … அவர்தான் சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்து விட்டாரே … இன்னமும் என்ன பிரச்சினை உனக்கு? ஏதோ நெருடுகிறதே… ??!! உன் மனதில் பெறாததுபோல திருப்தியின்றி காணப்படுகிறாயே… ஏன்?

யோபு சொல்வதை கவனியுங்கள்….

யோபு: 1:21 – “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான்”

இப்பொழுது நமக்கென்னகுறை? இப்பொழுது வாழும் வாழ்க்கையில் என்ன பெரிய இழப்பு வந்து விட்டது என்று புழுவாய் துடிக்கிறீர்கள்? என்னத்தை இவ்வுலகிற்கு நாம் கொண்டு வந்தோம்… எதை நாம் கொண்டு போகப்போகிறோம்? நடுவில் வந்தது … நடுவிலே போய் விட்டது. அவ்வளவு தானே! போனது திரும்பி வராதா… என்ன?! அல்லது தேவன் அதை இரட்டத்தனையாக உனக்கு திரும்ப தர மாட்டேன் என்று எங்கேயாவது வேதத்தில் சொல்லியிருக்கிறாரா என்ன?!

நாம் ஆராதிக்கும் தேவன் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஏசாயா: 42:3 – “அவர் நெறிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும்” – செய்கிற கர்த்தர் அவர்.

யோவான்: 1:9 – “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி”          
     
1சாமுவேல்: 2:8 – “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்”  
 
ரோமர்: 8:32 – “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?”

1நாளாகமம்: 29:12 – “ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்”

இப்படிப்பட்ட நல்ல தேவன் நமக்குண்டே!

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை. பிறப்பிலே நிர்வாணமாய் வந்தோம். இறப்பிலே நிர்வாணமாய் அவ்விடத்துக்கு போகப்போகிறோம். வரும்போதும் ஒன்றும் கொண்டு வந்ததில்லை; போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதும் இல்லை. நடுவிலே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நம்மிடம் வருவதெல்லாம், இருப்பதெல்லாம் தேவன் அருளியவை. அவர் அருளாமல் நம்மிடம் எதுவும் வரவில்லை. இதோடு எதுவும் இனி இல்லை - என்றாகி விடவில்லை. இன்னும் நமக்குரியவைகளை தேவன் தர விரும்புகிறார். உனக்கென்று உண்டாயிருக்கிறவைகள் தேவனிடம் பத்திரமாக இருக்கிறது. அது ஏற்றவேளையில் உனக்கு நிச்சயமாக கிடைக்கும். விசுவாசமாயிரு. நம்பிக்கையில் சோர்ந்து தளர்ந்து விட வேண்டாம்.

நிர்வாணியாய் வந்த நமக்கு இப்பொழுது என்ன குறை உண்டு?

இரண்டுவித ஆசீர்வாதம் நம்முன் தேவனாகிய கர்த்தர் கொடுத்துவிட்டாரே! அதை நீங்கள் இன்னுமா அறியாதிருக்கிறீர்கள்?! அதை நாம் விசுவாசத்தோடு சுதந்தரிக்க வேண்டியதுதான் பாக்கி. ஆம் இரண்டு வித ஆசீர்வாதம் நமக்கு உண்டு.

அவை:

1. உன்னதத்தில் இருக்கிற சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்                                     2. விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்பட்டு பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் உரிமைபெறுகிறார்கள் என்பதே. எனவே, நீ பெற்றுக் கொண்டவன் – என்பதை விசுவாசிக்கவில்லையா?

குறிப்பாக எதையெல்லாம் பெற்றிருக்கிறீர்கள்?


ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்:
1. இலவசமாக இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்கள்
2. ஆவியின் நிறைவு, முத்திரையாக பெற்றிருக்கிறீர்கள்
3. பரலோகத்தில் உள்ள ஜீவபுஸ்தகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டுள்ள சிலாக்கியத்தை பெற்றிருக்கிறீர்கள்.
4. பிதாவின் வீட்டில் உங்களுக்கென ஒரு ஸ்தலத்தைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது
5. ஆரோன் மோசே போன்ற நல்ல ஆவிக்குரிய தலைவர்களை வழிநடத்துதலாக பெற்றிருக்கிறீர்கள்.
6. உபதேசம், அப்பம் பிட்குதல், அந்நியோநியம், சபை ஐக்கியம், கபடற்ற இருதயம், மகிழ்ச்சி பெற்றிருக்கிறீர்கள்.
7. வாக்குத்தத்தம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், … கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாகும் சிலாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்.

இப்படி நீங்கள் பெற்ற ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களை (எபேசியர்: 1:3) சொல்லிக்கொண்டே போகலாம். 

விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே பெறும் ஆசீர்வாதங்கள்:

1. கிறிஸ்துஇயேசு மூலமாய் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளாகும் சுதந்தரத்தைப் பெற்றிருக்கிறோம்
2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
3. சகேயு போன்று நாமும் ஆபிரகாமுக்கு பிள்ளைகளாகிறோம். காட்டொலிவ மரமாய் இருந்த நம்மை நாட்டொலிவ மரமாக இணைக்கப்படுகிற சிலாக்கியத்தை பெற்றோம்.
4. முற்பிதாக்கள் பெற்ற உலக மேன்மைகள், ஐசுவர்யங்கள் நாமும் பெற தகுதிப்பட்டிருக்கிறோம்.
5. இரட்சிப்பு யூதர்கள் வழியாக நமக்கு கிடைத்திருக்கிறது. பிரமாணங்களும், கட்டளைகளும் வாக்குத்தத்தங்களும் அவர்கள் வழியாகத்தான் நமக்கு கிடைத்திருக்கிறது.
6. யோவான்: 1:11,12 – “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்”.

நமக்கு எவ்வளவு பெரிய சிலாக்கியங்களெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது பாருங்கள். வேதத்தை ஆராய்ந்து பார்ப்பீர்களானால் இங்கு சொல்லப்பட்டவைகளைவிட அதிகமான ஆசீர்வாதங்கள் இருப்பதை காண்பீர்கள்.

இப்போது உங்களுக்கு இருக்கும் ஆசீர்வாதங்களும் பெற்ற நன்மைகளும்:

1. நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம். நல்ல தகப்பன், தாய். நல்ல கணவன், மனைவி, பிள்ளைகள். வாழ ஒரு வீடு
2. நல்ல வேலை. நல்ல வாகனம். நல்ல நண்பர்கள்
3. நல்ல ஆவிக்குரிய சபை, ஐக்கியம், உபதேசித்து நல்வழி நடத்தும் அன்பான கண்டிப்பான போதகர்.
4. உங்களுக்காக இரவும் பகலும் ஜெபங்களில் நினைவுகூர்ந்து ஜெபிக்கக்கூடிய நல்லதொரு சபையும் போதகரும்
5. ஜெபிக்கும்போது நடக்கும் அற்புதங்கள், அதிசயங்கள், வழிநடத்துதல்கள், கிருபைகள் ஏராளம் ஏராளம் …
6. நெருக்கத்திலே விசாலத்தை உண்டுபண்ணின கிருபை, கண்ணீரிலே, கஷ்ட நஷ்டங்களிலே ஆறுதல் தரும் ஆவியானவர், தேற்றிடும் வேத வார்த்தைகள்.
7. புது வாழ்வு, புது சிருஷ்டி, மனமகிழ்ச்சி, திருப்தி, விசுவாசம், நம்பிக்கை, சுகம் பெலன் ஆரோக்கியம்
8. நம்மை நம்பி பலபேர்; நம் தயவில் பலபேர். வேலை ஸ்தலங்களில் உயர்வின் மேல் உயர்வு
9. தனிமை உணர்வின்றி சபை மக்கள் உறவு பாசம் – அன்பின் விருந்து – ஐக்கியம் – உறவு
10. தற்கொலை எண்ணம் நீங்கி, நீண்டகால ஆசீர்வாத வாழ்விற்கு வழி திறந்து, வாழ்தே தீருவோம் என்ற நம்பிக்கை பெற்றது. பலபேருக்கு அதினிமித்தம் சாட்சியாக நீங்கள் நின்று கொண்டிருப்பது

இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். அவர் செய்த நன்மைகளை நாம் மறக்கும்போதுதான் – சோதனைக்காரன் நம்மை சோர்வுறச் செய்து நம்மில் வெற்றி காண்கிறான். அதற்கு இடம் கொடுக்காதிருப்போமாக. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் என்று வேதம் வெற்றி முழக்கமிடுவதை கவனிக்கவில்லையா எனதருமை பிள்ளைகளே!

தாவீது தனக்கெதிராக நின்ற கோலியாத்தை கண்டு அஞ்சாததற்கு காரணம்? தேவன் தனக்கு முன்பே செய்திருந்த நன்மைகளை உபகாரங்களை நினைவுகூர்ந்தபோது, அவனுக்குள் விசுவாச பெலன் வந்தது. ஒருவிசை கரடி, ஒருவிசை பாலசிங்கம். அதை மேற்கொள்ள பெலன்தந்த கர்த்தர் இப்போதும் நம்மோடிருந்து நமக்கு பெலன் கொடுத்து வெற்றிதருவார் என்ற நம்பிக்கை பெற்றான். அதுபோல உங்கள் நெருக்கங்களிலும் பாடுகளிலும், உபத்திரவங்களிலும் சோர்ந்து போகும்போதெல்லாம் பழைய வெற்றிகளை தாவீதைப்போல அசைபோட்டு பெலன் அடையுங்கள். வெற்றி பெறுவீர்கள் ஆமென்! அல்லேலூயா!

இவ்வளவும் பெற்ற நீங்கள்… இனியும் … “பெறாதவைகளைப் பெற்றுக் கொள்கிற சிலாக்கியத்தையும் பெற்றிருக்கிறீர்கள்” எப்படி?

யோவான்: 14:13,14 – “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” இப்படிதாங்க. அவருடைய நாமத்தினால் கேளுங்கள். அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்.

*இப்பொழுது சொல்லுங்கள் …

“உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது?”

கவனத்தில் கொள்க:

மனிதனுக்கு தேவையான அனைத்தையும் தேவனாகிய கர்த்தர் சிருஷ்டிப்பில் பரிபூரணமாக படைத்தபின்பே, மனுஷனை உண்டாக்கினார். மனுஷனை உண்டாக்கி அந்தரத்திலே ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு சிருஷ்டிப்பை சிருஷ்டிக்கவில்லை. தேவனாகிய கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடித்தார்.
உனக்கு உண்டாயிருக்கிறவைகள் ஆதிமுதற்கொண்டே உனக்கென்று உண்டாக்கப்பட்டு விட்டது. இனி புதிதாக மனிதனுக்கென்று எதையும் படைக்க வேண்டியதில்லை. மறந்துபோய் விட்டுவிடப்படவும் இல்லை.
உனக்கு உண்டாயிருக்கிறவைகள் உனக்குத்தான். அதை வேறொருவருக்கும் தேவன் கொடுக்கமாட்டார். இப்போது இல்லையென்றால், இனி எப்போதும் இல்லையென்று பொருள் அல்ல. தரமாட்டார் என்றும் பொருள் அல்ல. தற்சமயம் இல்லை. பின்னாட்களில் அதாவது கர்த்தருடைய ஏற்றவேளையில் உங்களுக்கு கொடுக்கப்படும். அதுவரை விசுவாசத்தோடு கர்த்தருக்கு நீடியபொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான்.
ஒருவேளை உங்களுக்கு வரவேண்டிய நன்மை, உயர்வு வேறொருவருக்கு கிடைத்ததுபோன்ற தோற்றம், சூழ்நிலை ஏற்பட்டால் எரிச்சலாகாதீர்கள். விசுவாசத்தையோ, ஜெபிப்பதையோ, ஆராதனையையோ விட்டுவிடாதீர்கள். “இப்போதைய இழப்பு – இரட்டிப்பான வரவு” என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். எல்லாம் அனுபவித்துதான் சொல்கிறேன் பிரியமானவர்களே.
உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாதாகிலும் இருக்குமென்று நீ உணர்வாயானால்…   அதை ஒருபேப்பரில் பட்டியலிடுங்கள். கர்த்தருடைய நாமத்தில் ஜெபியுங்கள். அவருடைய நாமத்தினால் கேளுங்கள். கொடுக்கிறாரா? இல்லையா? என்று பார்த்து விடுவோம்.

*இப்பொழுது சொல்லுங்கள் …

“உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது?”

இப்படி நம்மை நமக்கென்று உண்டாயிருக்கிறவைகளை பெற்றுக்கொள்ளச் செய்த தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க வேண்டாமா?!

3. பெற்றுக் கொள்ளாதவன்


நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மை பாராட்டுகிறாய்? – இது மூன்றாவது கேள்வி

நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன்  காட்சியளிக்கிறாய்? அல்லது ஏன் வேஷம் போடுகிறாய்? அல்லது ஏன் முறுமுறுத்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும் திரிகிறாய்? மேலே கண்ட இரண்டு தலைப்புகளின்கீழ் தியானித்ததின்படி நாம் அனைத்தையும் உடையவர்களாயிருக்க … பெற்றுக்கொண்டும் பெறாதவன்போல நடந்து கொள்ளலாமா? இது ஒரு நல்ல ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்வாகுமா?

பேச்சிலும், செயலிலும் சுயத்தைச் சார்ந்து பிதற்றுகிறோமே ஏன்? வாழ்வில் வந்த ஒரு குறைச்சலின் நிமித்தமா இந்த நிலைக்கு ஆளானீர்கள்?! ஒரு இழப்பிற்கா இந்த முறுமுறுப்பு?! “தேவனிடத்தில் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” என்றானே யோபு. அவ்வளவுதானா நமது கிறிஸ்தவ விசுவாசம். ஒரு குறைச்சல், ஒரு பாடு உபத்திரவம், ஒரு இழப்பு – இவைகளை சகிக்க நமக்கு விசுவாச பெலன் இல்லையா?

வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் அனைவரும் நம்மைப்போல பாடுள்ள மனிதர்கள்தானே! அவர்கள் தங்கள் பாடுகளில் தேவன்பேரில் வைத்திருந்த விசுவாசத்திற்காக ஒருவிசை பாடுபட்டு, தங்களுடைய விசுவாசத்தை காத்துக்கொண்டார்களே! (எபிரேயர்:11 அதிகாரம் முழுவதும்)  அதனால்தான்   இன்றும் அவர்கள் நமக்கு சாட்சிகளாகவும், திருஷ்டாந்தங்களாகவும் இன்றளவும் மரித்தும் பேசப்படுகிறார்கள். நாளைய விசுவாசசபை சரித்திரம் நம் பரிசுத்த விசுவாசவாழ்வை முன்னுதாரணமாக்கி வீறுநடை போட வேண்டாமா பிரியமானவர்களே!

பெறாதவன்போல் மேன்மைபாராட்டுவது – என்பதின் பொருள் என்ன?

ரோமர்: 14:23 – “… விவாசத்தினாலே வராத யாவும் பாவமே”

யாக்கோபு: 1:17 – “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை”.
                   
யோவான்: 3:27 – “யோவான் பிரதியுத்திரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்”

நம்மிடத்தில் இருப்பது, இருப்பவை, இருப்பவர், வருபவை, வருவது, வருபவர் அனைத்தும் சோதிகளின் பிதாவினால் வந்தவைதான். நம்மிடம் உள்ள எவ்வித ஆசீர்வாதமாகட்டும் அது பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய நாமாக எதையும் பெற இயலாது என்று சத்திய வசனம் இவ்வளவு ஆணித்தரமாக சொல்லியிருக்கும்போது … உன்னிடத்தில் வந்த ஆசீர்வாதங்கள், இருக்கின்ற ஆசீர்வாதங்கள், கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு “என் சாமார்த்தியமும் என் கை பெலனும் இந்த ஐசுவர்யத்தை எனக்கு சம்பாதித்தது என்று நீ சொல்லலாமா?”. எவ்வளவு பெரிய அபத்தமான அறிக்கை???!!! தேவனுடைய நாமத்தையே இருட்டடிப்பு செய்துவிடுகிறோமே!? அறிந்தா? அறியாமலா? அல்லது துணிகரமாகவா?

சுயம்பு – அதாவது, தன்னில்தானே வல்லமை உடையவனாக பேசலாமா? எனக்கு நிகர் நானே; எனக்கு எதிர் யார்? என்று மேட்டிமையாக வாயின் அறிக்கையின் மூலம் உன்னை சிருஷ்டித்தவருக்கு முன்பாக அப்படி காட்டிக்கொள்ளலாமா?

உபாகமம்: 8:17,18 – “என் சாமார்த்தியமும் என் கை பெலனும் இந்த ஐசுவர்யத்தை எனக்கு சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்”. ஆமென்! அல்லேலூயா! 

கர்த்தர் நினைத்திருந்தால் ...  நம்மை அனாதையாகவோ, பைத்தியக்காரனாகவோ, அந்தகனாகவோ, அறிவிலியாகவோ, துரதிர்ஷ்டசாலியாகவோ, வறியவனாகவோ படைத்திருந்திருக்கலாமே! ஏன் அப்படிச் செய்யவில்லை? அல்லது ஊர்வன, பறப்பன, நீந்துவன, மற்றும் கண்ணுக்கு தெரியாத வஸ்துக்களாக, மரமாக படைத்திருக்க கூடாது? ஏன் அப்படிச் செய்யவில்லை? யாராவது அவரை உங்களுக்கும் எனக்கும் அப்படிச் செய்யாதபடி தடுத்தார்களா என்ன? அவர் சர்வ வல்லவராயிற்றே! அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாதாமே! யார் தடுத்தது?

நம்மை அவரது சாயலாகவும், அவரது ரூபத்தின்படியேயும் எவ்வளவு நேர்த்தியாக, அழகாக, அந்தஸ்தாக, அருமையாக நல்லதொரு குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதற்கு முதலில் நாம் அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க வேண்டாமா?!

மேட்டிமையான வாயின் அறிக்கை அழிவுக்கு வித்திடும்:

எரேமியா:51:58 – “… ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”

எல்லாவற்றையும் தேவனிடத்திலிருந்து பெறுவதையெல்லாம் பெற்றுக்கொண்டு, “நான் பிரயாசப்பட்டேன்/ நான் வருத்தப்பட்டு சம்பாதித்தேன்” என்று சொல்லிக் கொள்வது கர்த்தருக்கு முன்பாக நீதியாய் விளங்குமோவென்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். 

நாம் பிரயாசப்பட்டதும் சம்பாதித்ததும் நம் கையைவிட்டு கரைந்து காணாமல் தொலைந்தும் திருட்டுப் போவதும், பலவேளைகளில் கண்களுக்கு முன்பாகவே பறிபோவதும், எதனால் என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?! (எரேமியா: 51:58). என் ஆசீர்வாதங்களுக்கு நான்தான் காரணம் என்று அறிக்கையிட்டீர்கள். அப்படியானால் அதற்கு முழுபொறுப்பும் பாதுகாப்பும் நீங்கள்தானே! 

1நாளாகமம்: 29:14 – “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்” என்று சொன்ன சாலமோனின் தாழ்மையான விசுவாச வாயின் அறிக்கை நாம் செய்வோமானால்… கர்த்தருக்கு முன்பாக இன்னும் அதிக நீதியுள்ளதாக நமது விசுவாசம் காணப்படுமல்லவா?

கர்த்தருடைய பிள்ளைகள் இவ்விரண்டு காரியங்களுக்கும் விலகியிருக்க வேண்டும்:

சுயம்பு/ சுயம்/ மேட்டிமை/ பொறாமை/ தகுதியற்றநிலையில் மேன்மைபாராட்டல்/ கர்த்தருடைய மகிமை எடுக்க முயற்சிப்பது – போன்ற காரியங்கள்  - நமது வாயின் அறிக்கைகள் மூலம் மாம்சமோ, உலகமோ, பிசாசோ, கள்ள தீர்க்கதரிசியோ தூண்டிவிடாதபடி நம் ஆவிக்குரிய வாழ்வை காத்துக் கொள்ள வேண்டும்.

நம்மை யாரும் தவறாக உபயோகிக்காதவாறும், மற்றும் நம் உணர்வுகளை தூண்டிவிடப்பட்டு விடாதவாறும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாம் பிதற்றியோ மனம்பதறியோ மேட்டிமையான வாயின் அறிக்கையில் விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.

ஏனெனில், நீதிமொழிகள்: 18:21 – “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” என்று வேதம் கூறுகிறதை மனதிற்கொள்வோம்.

அ) தானியேல்: 4:30 – “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்திற்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்”

ஆ) நெகேமியா: 4:3 – “அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்”

தான் கட்டினதுக்கும் ஒருவன் பெருமைப்படக்கூடாது; பிறர் கட்டுவதைக் கண்டும் பொறாமைப்படவும் கூடாது

இவ்விரண்டையும் தேவனாகிய கர்த்தர் வெறுக்கிறார்

நம்மைக் குறித்து இறுதியாக வேதம் சொல்வதென்ன?

1கொரிந்தியர்: 4:8 – “இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, … ஆளுகிறீர்களே…”

நாம் விசேஷமானவர்கள் – ஆம்! நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதினால் – நாம் விசேஷமானவர்கள் - அதனால் நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் பெற்றுக்கொண்டவர்கள் – ஆம் – தேவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருப்பதினால் –  நாம் பெற்றுக் கொண்டவர்கள் - அதனால்   நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்.

ஆம்! நாம் தேவனிடத்திலிருந்து இம்மைக்குரியவைகளையும், மகிமைக்குரியவைகளையும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்போதைய வாழ்விலேயே பெற்று இப்பொழுது திருப்தியாயிருக்கிறோம்; இப்பொழுது நாம் ஐசுவரியவான்களாக இருக்கிறோம்; இப்பொழுது எவ்விடங்களிலும் ஆளுகை செய்பவர்களாக அதிகாரத்தை உடையவர்களாயிருக்கிறோம் என்று வேதம் நம்மைக் குறித்து சாட்சியிடுகிறது. 

ஆம்! பிரியமானவர்களே! 

வேதம் சொல்கிறபடி நீங்கள் அனைத்தையும் பெற்றிருக்கிறீர்கள். அவைகளைக் கொடுத்தவர் தேவன். அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருப்பீர்களானால்… இப்பொழுதே உங்கள் வாழ்வில்… திருப்தி/ ஐசுவரியம்/ ஆளுகையை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை உயர்வடையும். 

மனிதனுக்கு சிறுசிறு நன்றி சொல்கிற நாம் – நமக்கு உதவி செய்யும்படி அம்மனிதனை அனுப்பிய தேவனை நம்மனம் ஏன் அறியவில்லை. அறிந்து நன்றி சொல்லவில்லை. நன்றியறிதல் நம் வாழ்வில் பல நன்மைகளைக் கொண்டுவரும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆராதனையில் ஜெபங்களில் நன்றி பலி செலுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!