நவம்பர் 02, 2012

சிமிர்னா சபை


சிமிர்னா சபை (Smyrna)
வெளிப்படுத்தல்: 2:8-11
(உபத்திரவ கால சபை)

'சிமிர்னா' என்பதற்கு 'வெள்ளைப்போளம்' என்று பொருள். எபேசு பட்டணத்திற்கு வடக்கே 50 மைல் தொலைவில் இருந்தது. இப் பட்டணம் அக் காலத்தில் திட்டமிடப்பட்ட அழகிய பட்டணம். பட்டணத்தின் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் நேர் தெருக்கள் இருந்தன. பொன் தெரு என அழைக்கப்பட்ட பெரிய தெருவில் 'சிவிலி'  'ஜீயஸ்'  தேவதைகளின் கோவில்கள் இருந்தன.
 

வியாபாரத்திற்கு சிறந்த ஒரு பட்டணமாக இருந்தது. ஐசுவரியத்தில் உயர்ந்த ஒரு பட்டணமாக இருந்தது. இது ஆசியாவின் 'அணிகலன்' என்றும் 'மணிமுடி' என்றும் அழைக்கப்பட்டது. இப்பட்டணம் திடீரென்று எதிரிகளால் அழிக்கப்பட்டு சிறு கிராமமாய் மாறிற்று. ஆனால், மீண்டும் சில காலத்துக்கு பின் பெரும் பட்டணமாயிற்று. இப்பட்டணம் பல முறை  நில அதிர்வினால் சேதமடைந்தது உண்டு.
 

இன்றும் இப்பட்டணம் 'இஸ்மிர்' என்னும் பெயரில் துருக்கி நாட்டில் துறைமுகப்பட்டணமாக விளங்குகிறது. தற்போது இதன் ஜனத்தொகை 2,50,000. இப்பட்டணத்தில் சபை இல்லாத காலமே இல்லை.

சிமிர்னா சபை:

சிமிர்னா சபை பவுல் அப்போஸ்தலன் ஆரம்பித்தாக சிலர் கருதுகின்றனர். 'போலிகார்ப்' என்ற சபைப்பிதா சிமிர்னா சபையின் கண்கானியாக இருந்தார். போலிகார்ப்  யூதர்களால் பிடிக்கப்பட்டு நியாயஸ்தலத்துக்கு முன் நிறுத்தப்பட்டார்.
 

கிறிஸ்துவை மறுதலிக்குமாறு அவரை வற்புறுத்தியபோது, போலிகார்ப், "86 வருடங்களாக கிறிஸ்துவை சேவித்து வந்தேன். அவர் ஒரு போதும் ஒரு தீங்கினையும் எனக்குச் செய்ததில்லை. இப்படிப்பட்ட என் இராஜாவும், இரட்சகருமானவரை எவ்விதமாய் நான் மறுதலிக்க முடியும்?" என்று அறிக்கையிட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
 

இச் சமயத்தில் ஒரே நேரத்தில் 1500 பேரும், மற்றொரு சமயம் 800 பேரும் கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாய் மரித்தனர்.

1. இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு: (வெளிப்படுத்தல்: 2:8)

முந்தினவரும் பிந்தினவரும் பிழைத்தவருமாக வெளிப்படுகிறார். மகா உபத்திரவத்தினூடே சென்ற சபைக்கு மரித்தோரிலிருந்து மரித்தோராக வெளிப்பட்டு அவர்களை ஆறுதல்படுத்துகிறார். உபத்திரவம் மரணத்தைக் கொண்டு வந்தாலும் பயப்பட வேண்டாம். நான் ஜீவிப்பதுபோல் நீங்களும் பிழைத்திருப்பீர்கள் என்ற பொருளில் வெளிப்படுத்துகிறார்.

2. சபையின் நற்குணங்கள்:

இச் சபை நற்குணங்கள் உள்ள சபையாக இருந்தது. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். எல்லா சபைகளுக்கும் ஆண்டவர் கூறும் வார்த்தை இதுவே. தேவனுடைய கண்காணிப்பை இது காட்டுகிறது. இச்சபை கிறிஸ்துவுக்காய் உபத்திரவப்பட்ட சபை. பாடுபட்ட சபை.

3. ஆலோசனை:

"நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும்..."  - தரித்திரரும் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு.

அ) இந்த ஊர் செல்வ நிலையில் இருந்தும், இச் சபையில் உள்ள விசுவாசிகள் தரித்திர நிலையில் இருந்தார்கள் என்பது ஒரு விளக்கம்.

ஆ) ஆவிக்குரிய காரியங்களில் இவ்விசுவாசிகள் ஐசுவரியவான்களாய் இருந்தார்கள். ஆனால், பொருளாதார நிலையில் மிகவும் தரித்திரராய் இருந்தார்கள் என்பது மற்றொரு விளக்கம்.

கர்த்தருடைய கூட்டத்தார்: (2:9)

 யூதரில் சிலர் கிறிஸ்துவை மறுதலித்து சுவிசேஷத்திற்கு எதிர்த்து நின்றார்கள். தேவனுடைய ஜனமாய் இருந்தும் கிறிஸ்துவை மறுதலித்தபடியால் சாத்தானின் கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர்.

10 நாள் உபத்திரவம்: (2 :10)

ரோம சக்கரவர்த்திகள் 10 பேர் சபையை துன்பப்படுத்தினதை இது குறிக்கிறது என சிலர் கருதுகின்றனர்.

1. கி.பி. 64 ல் - நீரோ ராயன்
2. கி.பி. 81 ல் - டொமிசியன்
3. கி.பி. 98 ல் - ட்ராஜன்
4. கி.பி. 180 ல் - மார்க்கஸ்
5. கி.பி. 193 ல் - செப்டிமியஸ்சிவிரஸ்
6. கி.பி. 235 ல் - மாக்சிமஸ்
7. கி.பி. 249 ல் - டீளியஸ்
8. கி.பி. 254 ல் - வெல்லேரியன்
9. கி.பி. 270 ல் - ஆரிலியன்
10. கி.பி. 284 ல் - டயோகிளிஸியன்

உபத்திரவங்களை முன் அறிவித்த தேவன் மரணபரியந்தம் உண்மையாய் இரு என்று ததரியம் கூறுகிறார்.

4. ஜெயங்கொள்ளுகிறவனுக்குரிய வாக்குத்தத்தம்:

ஜெயங்கொள்கிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. மரணபரியந்தம் உண்மையாய் இரு. அப்பொழுது ஜீவ கிரீடம் உனக்கு தருவேன்.

மரணத்திற்கு எதிரானது ஜீவன். வெற்றிக்கு அடையாளமானது கிரீடம். மரணத்தின்மீது கொண்ட வெற்றியை காட்டுவதே இந்த ஜீவ கிரீடம். முதல் மரணம் என்பது சரீரத்தில் இருந்து ஆத்மா பிரிந்து செல்லுதல். இரண்டாம் மரணம் என்பது ஆத்துமா தேவனை விட்டு நித்தியமாய் பிரிக்கப்படுதல். மரணமும் பாதாளமும் அக்கினி கடலிலே தள்ளப்பட்டன. ஜீவபுஸ்தகத்தில் பேர் எழுதப்படாதவனும், அக்கினி கடலிலே தள்ளப்பட்டான். இதுவே இரண்டாம் மரணம். வெளிப்படுத்தல்: 20:14,15).