மார்ச் 01, 2013

இஸ்ரேல் பயணத்திற்கு - அரசு நிதி உதவி

 
தமிழக நிதியுதவி திட்டத்தின் கீழ் இஸ்ரேல் புனித பயணம் சென்று வர தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதற்கான பயண முகவர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்களின் பயண நிரல்படி எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய 10 நாள் எருசலேம் புனித பயணத்திற்கு ரூ. 73,000 மற்றும் இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய 7 அல்லது 8 நாட்கள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ. 66,000 பயணத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு நிதியுதவி ரூ. 20 ஆயிரத்தை பயண முகவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் நேரடியாக செலுத்தப்பட உள்ளதால் பயனாளிகள் மீதத் தொகையான ரூ. 53,000 (10 நாட்கள்)  அல்லது ரூ.46,000 (7 அல்லது 8 நாட்கள்) மட்டும் பயண முகவர்களுக்கு செலுத்தினால் போதுமானது.

அரசு திட்டத்தின் கீழ் புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் மேலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

எனவே, எருசலேம் புனித பயணம் மேற் கொள்ள விருப்பமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் மேலும் தாமதமின்றி அதற்கான விண்ணப்பத்தினை,

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்,
807, (5 வது தளம்),
அண்ணா சாலை,
சென்னை - 600 002

என்ற முகவரிக்கு  "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்"  என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிறிபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ஆகிய இடங்களில் விண்ணப்பம் கிடைக்கும்.

www.tn.gov.in/bcmbcmw/welf-schemes_minorities - என்ற இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.