ஜனவரி 14, 2015

தாவீதின் வேண்டுகோள்


சங்கீதம்: 34:4 - 6 - "நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்".

தாவீதின் மூன்று வித வேண்டுகோள்:

1. பயத்திற்கு நீங்கலாக வேண்டும்.

2. வெட்கத்திற்கு நீங்கலாக வேண்டும்.

3. இடுக்கண்களுக்கு நீங்கலாக வேண்டும்.

மேற்கண்ட வேண்டுகோள் தாவீதுக்கு மட்டுமல்ல. இன்று நம்மில் ஒவ்வொருவருக்கும் இது தேவை. நாம் வாழ்வில் சுகித்திருக்க, நிம்மதியைக்காண இம்மூன்றிற்கும் நீங்கலாக வேண்டும். இந்த சங்கீதத்தை தாவீது பாடினபோது இருந்த சூழ்நிலை: தாவீது அபிமெலேக்குக்கு முன்பாக வேஷமாறினபோது அவனால் துரத்தி விடப்படுகையில் பாடின சங்கீதம் என வேதம் கூறுகிறது.

தாவீது தன் இளம் வயதிலேயே படக்கூடாத பாடுகளையெல்லாம் படுகிறதை காண்கிறோம். அதிலிருந்து விடுபட தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பத்தோடு  கவி பாடுவதை காணமுடிகிறது. நாம் என்னதான்  தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினாலும் கர்த்தர் தம் பரிசுத்தவான்களின் வாழ்வில் பாடுகளை அனுமதிக்கவே செய்கிறார். காரணம்...?  பாடுகளின் வழியே நாம் பெலனடையவும், கிருபையை பெறவும், எதிர்வரும் காலங்களில் தேவன் தரும் உயர்வை காத்துக்கொள்ளவுமே அப்படிச் செய்கிறார்.

இருப்பினும், பாடுகள் நம்மை சோர்வுறச் செய்தாலும், பாடுகளின் தாக்கம் சற்று குறைவதற்கு நாம் ஜெபிக்க வேண்டும். தேவன் அனுமதிக்கும் பாடுகள் நமக்கு அழிவைத் தராமல், அது நமக்கு மகிமையை கொண்டு வரக் கூடியவை என்பதை உணரவேண்டும். தாவீது மேற்கண்ட இம்மூன்றிலிருந்தும் எவ்விதம் தன்னை பலப்படுத்தவும், திடப்படுத்தவும் செய்தான் என்பதை தியானிக்கும்போது, நாமும் ஆவிக்குரிய பெலனை பெறுவது அதிக நிச்சயம்.

1. பயத்துக்கு நீங்கலாக வேண்டும்:


ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது விசுவாசம் நிறைந்தவனாகக் காணப்பட்டான். சங்கீதம்: 16:8 - "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" என்று தன் வாலிப வயதில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது விசுவாச கீதங்களைப் பாடினான். அப்பொழுது சிங்கத்தைக் கண்டாலும் அவனுக்கு பயமில்லை; கரடியைக் கண்டாலும் பயமில்லை. ஏன்... கோலியாத்தைக் கண்டாலும் பயமில்லை. என்ன ஒரு விசுவாச தைரியம்! (1சாமுவேல்: 17:36).

சிங்கம், கரடி, கோலியாத் - இம்மூன்றுகளிலும் போராடும்போது இருந்த தைரியம்... சவுல் துரத்தும்போது எங்கே போனது?!

 1சாமுவேல்: 27:1 - "பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், தப்பித்துக் கொள்வதைப்பார்க்கிலும் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்".

1சாமுவேல்: 21:12,13 - "..காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக் கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்".

1சாமு: 27:1 மற்றும் 21:12,13 இவ்விரண்டு சமயங்களிலும் தாவீது சவுலுக்கு பயந்து இவ்விதமாக முடிவெடுப்பதைக் காண்கிறோம்.

 பயம் - மாவீரன் தாவீதையே  ஓடிப்போய் கெபிகளில் ஒளியச் செய்கிறது என்றால்...பயம் எவ்வளவு கொடிது என பாருங்கள்.  பயம் மனிதனை எப்படியெல்லாம் மாறச்செய்கிறது பாருங்கள்.

"வீரனுக்கு ஒருநாள்தான் சாவு; கோழைக்கு தினம் தினம் சாவு" - என்பது ஒரு பழமொழி.

மனிதனுடைய வாழ்வில் பயமே பலவிதமான பிரச்சினைகளை கொண்டு வருகிறது. சரீரத்தில் வியாதி, பதட்டமான மனநிலை, தவறான முடிவெடுத்தல், குழப்பம், நம்பிக்கையற்ற மனநிலை போன்றவைகளை கொண்டு வருகிறது. பயம் - கனம் பெற்ற மனிதனைக்கூட தரம் தாழ்ந்து போகச் செய்து விடுகிறதையும், கூடுமானால் தற்கொலைக்கு நேராககூட கொண்டு சென்று விடுகிறதையும் உலக அனுபவங்களிலே அறிய முடிகிறது.

சிங்கம், கரடி, கோலியாத்திற்கே பயப்படாத தாவீது, சவுலுக்கு பயந்தது ஏன்?

சவுல் கர்த்தரால் அபிஷேகம் பெற்ற மனிதராயிருந்தபடியினால்தான். 1சாமுவேல்: 26:9-11 - "... கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற் போகிறவன் யார்? ... கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர்".

சவுலுக்கு எதிர்த்து நிற்பதனால் தேவ கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதினால் தாவீது கர்த்தருக்கு பயந்து சவுலை விட்டு விலகி விலகி ஓடுகிறதைப் பார்க்கிறோம். தாவீதின் பயம் - நியாயமானது. தீமைக்கு தீமை செய்யாமல், தீமையை விட்டு விலகுவது. விலகி ஓடுவதனால் கோழையல்ல. பாவம் செய்யாதபடிக்கு தன்னைக் காத்துக் கொள்ளவே. தேவனுக்கு விரோதமான பாவம், அபிஷேகம் பெற்றவருக்கு விரோதமான பாவம் தன்னை அணுகாது காத்துக் கொள்ளவே பயந்து ஓடுகிறான்.

எவ்வித பயம் தேவை - தேவையில்லை:

"ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்" (மத்தேயு: 10:28) என்று நமதாண்டவர் இயேசுகிறிஸ்து கூறியதை நினைவுகூர்வோம்.

ஒரு கர்த்தருடைய பிள்ளைக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயம் தேவை என்று வேதம் கூறுகிறது. "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதிமொழிகள்: 1:7; யோபு: 28:28). "அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம்: 112:1).

1. "... கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக் கொள்ளும் பொருட்டு, ... தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக் கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்..." (உபாகமம்: 17:19,20).

2. "உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு... தசமபாகத்தை பிரித்து..." (உபாகமம்: 14:22)

3. "...மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மை சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்" (2கொரிந்தியர்: 7:1)

4. "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல" (1யோவான்: 4:18)

5. "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்... அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்" (வெளிப்படுத்தல்: 21:8)


கர்த்தருடைய பிள்ளைக்கு பயம் தேவைதான். ஆனால், தேவையற்ற பயங்கள் நம்வாழ்வை சீர்குலைக்கும். நிலைமையை மேலும் மோசமாக்கும்.

தாவீதின் பயத்திற்கு தேவன் ஏற்ற வேளையில் ஒரு முடிவை உண்டாக்கினார். தாவீதின் வாழ்வில் ஏற்பட்ட எல்லாவித பயங்களுக்கும் தேவன் ஒரு முடிவை கொண்டு வந்தார். இதுபோல உங்களுடைய வாழ்வில் எத்தனையோ பயங்கள் உங்களை துரத்தலாம். நீங்களும் ஓடிஓடி களைத்துப் போயிருக்கலாம். பயப்படாதேயுங்கள். தாவீதின் தேவன் நம்மோடே. தாவீதை அவன் எல்லா பயங்களுக்கும் நீங்கலாக்கிய தேவன் இன்று உங்கள் எல்லாவித பயங்களுக்கும் உங்களை விடுவிக்க போதுமானவர்.

தாவீது தன்னைக் காத்துக் கொள்ள பயத்தினால் அறியாமையினால் சில தவறான முடிவுகளை எடுத்தாலும், பெலிஸ்தரண்டையிலே சென்று வாசம் பண்ண நேரிட்டாலும், இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ண பெலிஸ்தியர்கள் அவனை ஏவினாலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவனைத் தற்காத்து, இழி சொல்லிலிருந்தும், பழிச்சொல்லுக்கு ஆளாகாமலும் காத்துக் கொண்டார். அதேபோல காத்தராகிய தேவன் உங்களையும் காக்க வல்லவர்.

உங்கள் பயம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், எதுவாயிருந்தாலும் பயப்படாதேயுங்கள்! சங்கீதம்: 16:10 - "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்" என வேதம் கூறுகிறது. பரிசுத்தவான்களை பாதுகாக்கும் தேவன் உங்கள் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பார்.

"நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்" (சங்கீதம்: 56:3)



2. வெட்கத்திற்கு நீங்கலாக வேண்டும்:


தாவீதின் வாழ்வில் பலமுறை வெட்கமும் அவமானமும் ஏற்பட்டதுண்டு. சத்துருக்களினால் ஏற்படுத்தப்பட்ட வெட்கம், தான் பெற்றெடுத்த பிள்ளைகளினால் வந்த வெட்கம், தன் பாவத்தினால் வந்த வெட்கம், தன் மனைவிகளினால் வந்த வெட்கம், தன்னால் பலன் பெற்றவர்களினால் வந்த வெட்கம் என பல வெட்கங்களை, அவமானங்களை சந்தித்தவன் தாவீது. எனவே, கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்போது, இரண்டாவதாக, தான் வெட்கத்திற்கு நீங்கலாக வேண்டும் என வேண்டுதல் செய்கிறான்.

1. சத்துருக்களினால் ஏற்படுத்தப்பட்ட வெட்கம்:

-  தாவீதுக்கு வெட்கத்தையும் அவமானத்தையும் உண்டாக்கும்படியாக அகித்தோப்பேல், அப்சலோமுக்கு தவறான ஆலோசனை வழங்கினான். (2சாமுவேல்: 16:21)

-  "சீமேயி தாவீதை தூஷித்து: இரத்தப் பிரியனே, பேலியாளின் மனுஷனே தொலைந்துபோ, தொலைந்துபோ"  என வெட்கப்படுத்தினான். (2சாமுவேல்: 16:7).

2. தான் பெற்றெடுத்த பிள்ளைகளினால் வந்த வெட்கம்:

-  தாமார், அம்னோன் சம்பவம் (2சாமுவேல்: 13:13)

-  அப்சலோம் தாவீதின் ராஜ்யபாரத்தை கைப்பற்றி தாவீதுக்கு வெட்கத்தை உண்டுபண்ணினான். (2சாமுவேல்: 16:22)

3. தன் பாவத்தினால் வந்த வெட்கம்:

-  பத்சேபாளிடத்தில் செய்த பாவத்தினால் வந்த வெட்கம் (2சாமுவேல்: 12:7)

4. தன் மனைவிகளினால் வந்த வெட்கம்:

-  மீகாள் தாவீதை அவமதித்தாள் (2சாமுவேல்: 6:20-23)

-  தாவீதின் மறுமனையாட்டிகள் அப்சலோமோடே சயனித்து வெட்கத்தை கொண்டு வந்தார்கள் (2சாமுவேல்: 16:22)

5. தன்னால் பலன் பெற்றவர்களினால் வந்த வெட்கம்:

- நாபால் தாவீதை அவமதித்தான் (1சாமுவேல்: 25:10,11)

தாவீது இத்தனை வெட்கமான அவமானகரமான நிந்தைகளை சுமந்து திரிந்தான். ஆயினும், கர்த்தரைச் சார்ந்து ஜெயம் பெற்று தன் வெட்கத்திற்குப்பதிலாக இரண்டத்தணையான ஆசீர்வாத மகிமையை பெற்றுக் கொண்டான். சத்துருக்கள் நம் வாழ்வில் வெட்கங்களை நிந்தைகளை கொண்டு வரலாம். தாங்கிக்கொள்ள முடியாமல் தவறான முடிவெடுத்து தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தாவீதின் தேவன் நம் தேவன். தாவீதுக்கு அருளிய கிருபைகளை நிச்சயமாக நமக்கும் அவர் தருவார். விசுவாசத்தோடு கர்த்தரின் இரட்சிப்பிற்காய் நீடிய பொறுமையோடு காத்திருங்கள்.

தாவீதைப் போன்று உங்கள் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் வெட்கம், அவமானம், நிந்தை ஏற்பட்டிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், தாவீது தன் தேவனாகிய கர்த்தரிடம் இவ்விதமாய் வேண்டுதல் நமக்காக செய்துள்ளார். "சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காக காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக" (சங்கீதம்: 69:6). தன்னைப்போன்று வெட்கங்களினால், அவமானங்களினால், நிந்தனைகளினால் தலைகவிழ்ந்துபோன நிலையில், மனம் நொந்து போனவர்களுக்காக தாவீது ஜெபிக்கிறான். "என்னிமித்தம்... என்னிமித்தம்" என பரிந்து பேசுவதை காணலாம்.

சங்கீதம்: 119:6 - "நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப் போவதில்லை" என தாவீது கூறுகிறான். நாமும் நம்வாழ்வில் வெட்கம் வராதிருக்க, கர்த்தருடைய வேதத்தை நேசித்து, வேதத்தின் கற்பனைகளை வாசித்து கைக்கொள்வோம். அவரது கற்பனைகளை கண்ணோக்குவோம்.

ரோமர்: 5:5 - "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது".

ரோமர்: 10:11 - "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது".

நமது நம்பிக்கையும், விசுவாசமும் நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின்மேல் வைப்போமானால் நாம் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. (1பேதுரு: 2:6).

வாழ்வில் ஏற்படும் வெட்கம்,  நிந்தனை, அவமானங்களை கண்டு சோர்ந்து போகாதீர்கள். ஏனெனில், வேதம் சொல்கிறது: "கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்" (1பேதுரு: 4:13,14). "ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்" (1பேதுரு: 4:16).

"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை" (யோவேல்: 2:26).



3. இடுக்கண்களுக்கு நீங்கலாக வேண்டும்:


தாவீது வாழ்வில் பல இடுக்கண்களைத் தாண்டி வந்துள்ளதை வேதம் நமக்கு விவரிப்பதை காணலாம். இருப்பினும் அவன் அவையனைத்தையும் மேற்கொண்டதின் இரகசியம் என்னவெனில்... எது நேரிடினும், காத்தருடைய கையிலே விழுவேனாக எனக்கூறி தவறோ... தண்டனையோ... அது கர்த்தராலே தனக்கு கிடைக்கட்டும் என கர்த்தருடைய பாதத்திலேயே விழுந்துவிட அர்ப்பணிப்பதுதான் அந்த இரகசியம். "அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்" (1நாளாகமம்: 21:13). மனிதனுடைய இரக்கத்தைவிட தேவனுடைய இரக்கங்கள் பெரியது, உண்மையானது, மாறாதது, நிலைவரமானது என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தான். அதை சார்ந்திருந்தான்.

தாவீது தனது வாழ்வில் தவறுகளை அறிந்து செய்திருந்தாலும் சரி, அறியாமல் செய்திருந்தாலும் சரி, அத்தவறை அவன் உணரும்போதும் அல்லது அதை யாராவது சுட்டிக் காண்பிக்கும்போதும், கண்டித்து உணர்த்தும்போதும் அதை எதிர்த்துப் பேசாமல், மறுத்து, மறைத்து விடாமல், தன் தவறை மனதார ஒப்புக் கொண்டு, அறிக்கையிட்டு தன்னை தாழ்த்தி, திருத்திக் கொள்ள அர்ப்பணித்து விடுவான். இதுதான் தாவீதின் குணாதிசயம். "தன் பிழைகளை உணருகிறவன் யார்?..." (சங்கீதம்: 19:12).

இன்று ஆவிக்குரியவர்களாகட்டும், பொதுவான மனிதர்களாகட்டும், தன் தவறை ஒப்புக் கொண்டால்... எங்கே தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தினால், அதை மறுக்கவும், மறைக்கவும் முற்படுகிறார்கள். அது எவ்வளவு பெரிய நீதிகேட்டையும், தேவகோபத்தையும், மோசமான பின்விளைவுகளையும் கொண்டு வரும் என அப்படிப்பட்டவர்கள் அறியாமலும், உணராமலும் போகிறதுதான் மிக வேதனையான காரியம்.

செய்த தவறுக்கு கிடைக்கிற தண்டனையைவிட, அதை மறைப்பதற்கு வரும் ஆக்கினை மிக அதிகம். செய்த தவறை மறைப்பதற்கு மேலும் பற்பல பாவங்களை, தவறுகளை, மனித சட்டங்கள் மற்றும் தேவநீதிகளை மீற வேண்டியதாகும். பாவம் இதனால் பெருகுமே தவிர, குறைவதற்கு வழியில்லை. எனவேதான், நம் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்: "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதிமொழிகள்: 28:13). 

இடுக்கணிலிருந்து தப்ப ஒரே வழி - தன் பாவங்களை அறிக்கையிட்டு தேவன் பக்கமாய் மனந்திரும்புவதுதான் ஒரே வழி.

அதைவிட்டுவிட்டு, வேறு குறுக்குவழிகளை தேடுவதும், வேறு மார்க்கங்களை நாடுவதும், அன்னதானம், மற்றும் புண்ணியங்களால் மறைத்து விடலாம் என மனக்கணக்கு போடுவதும்  தேவஆக்கினைக்கு நேராக நம்மை வழிநடத்திவிடும்.  "நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்; சத்தியம் நமக்குள் இராது" (1யோவான்: 1:8) என வேதம் கூறுகிறது. எச்சரிக்கையாயிருங்கள். "கையோடு கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்" (நீதிமொழிகள்: 11:21) என்று வேதம் எச்சரிக்கிறது. விழிப்பாயிருங்கள். தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார். பாவத்தை மறைப்பது தேவனை பரியாசம் பண்ணுவதற்கு ஈடானது.

தாவீது தன் இடுக்கணில் தன்னைத்தனே ஆராய்ந்து, தன் தவறை ஒப்புக் கொண்டு, தாழ்த்தி, தேவனுடைய பாதத்தில் விழுந்து இரக்கம் பெற்றான்.

தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என அவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ள  (பத்சேபாள் விஷயத்தை தவிர) எவ்வித மாம்ச முயற்சியும் எடுக்க, அதற்கு பிற்பாடு அவன் முன்வரவில்லை.

நமது இடுக்கண்களில் நாம் என்ன செய்கிறோம்? எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கிறோம்? அது நமக்கு நன்மையை கொண்டு வருமா? தீமையை கொண்டு வருமா? அது தேவனுக்கு மகிமையை தருமா? சிந்தியுங்கள். எடுக்கின்ற முடிவு... ஆவிக்குரியதாய் இருக்கட்டும். இமேஜ் பாதிக்கப்படும் என அதை மனுஷர் கண்களுக்கு முன்பாக மறைக்க முயலாதீர்கள். மனிதர்களால் வரும் புகழ்ச்சி, கனத்திற்கு ஆசைப்பட்டு, இனி வரப்போகின்ற தேவனுடைய ஈடில்லா மகிமையை இழந்து போகாதீர்கள்.

இடுக்கண் என்பது தவறு செய்தாலும் வரும். தவறே செய்யாமலிருந்தாலும் வரும். இடுக்கண் மூன்றுவிதங்களில் நமக்கு வர வாய்ப்பு உள்ளது. அவை:

 1. இடுக்கண் ஒன்று சத்துருக்களால் வரலாம்.
2. அல்லது தேவனால் அனுமதிக்கப்படலாம்.
3. அல்லது நம் தவறுகளால் வரலாம்.

இடுக்கண் எந்த ரூபத்தில், எதனால்  வந்தாலும் அதிலிருந்து மீள ஒரே வழி: 

தாவீதைப்போல  கர்த்தருடைய பாதத்தில் விழுந்து விட வேண்டியதுதான் நாம் செய்யும் ஒரே வழி. சாலமோன் மற்றும் யோசபாத்தின் ஜெபம்தான்!

"எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்" (2நாளாகமம்: 20:9;  2நாளாகமம்: 6:28-31).

"இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்" (சங்கீதம்: 34:6).

"இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்" (பிரசங்கி: 7:7) என்று வேதம் கூறுகிறது. சவுல் தாவீதை கொன்றுபோட துரத்துகையில், அவன் கைக்கு தன்னைக் காத்துக்கொள்ள, எதிரிகளின் தேசத்தில் தஞ்சமடைய தாவீது போட்ட வேஷம் - மாவீரன் தாவீதையே பித்தங் கொண்டவனைப்போல மாறச்செய்தது (1சாமுவேல்: 21:12,13), கர்த்தருடைய வசனத்தின்படி, இடுக்கண் எவ்வளவு கொடிதானது பாருங்கள்.

'இடுக்கண் வருங்கால் நகுக' - என திருவள்ளுவர் கூறுவது நம்மை சிறிது நேரம் துன்பத்தின் நடுவே ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே உதவும். அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவாது. ஒருவேளை பித்தங்கொண்டவனைப்போல வேஷம் மாறி, தாவீது நகைத்ததை வள்ளுவன் கூறுகிறானோ? என்னவோ?!

நம் வாழ்வில் இடுக்கண் வர நேரிடும்போது, நம்மை எவ்விதத்திலும் தேவனுடையவர்களாக, தேவபிள்ளைகளாக, தேவ மனுஷராக விளங்கப்பண்ண வேண்டும் என தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். (2கொரிந்தியர்: 6:3-10).

இடுக்கண் வேளையில் தாவீது தன்னை தேவமனுஷனாகவே நமக்கு  ஒரு திருஷ்டாந்தமாக விளங்குகிறான். நாமும் அவ்விதமாக தாவீது, பவுல் போன்றோர்களைப்போல மாறுவோம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!