ஆகஸ்ட் 31, 2013

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 3


பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியமென்ன?:

இன்றை சூழ்நிலையில் இதை சற்று சிந்தித்து பார்ப்போம். இன்று இருக்கிற பெந்தேகொஸ்தே ஊழியக்காரர்கள் - "சினிமா பார்க்கக் கூடாது, கேளிக்கை கூடாது, வீண்பொழுது போக்குக் கூடாது, நகை போடக் கூடாது என சபைமக்கள் நடுவே போதிப்பது சரிதான். தவறல்ல. ஆனால், அதேசமயம், அதற்கான மாற்று வழிகளையும் சிந்தித்து செயல்பட்டால் நல்லது.

அதாவது சபையில் வருகிறவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்துக்கள் மற்றும் புறஜாதியினரே. இவர்கள் இந்த கேளிக்கைகளை உடனே விட்டுவிடவும் மாட்டார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி ஒன்று வேண்டும். (அதற்காக புறஜாதிய வழக்கப்படி அவர்களைப்போல  நாம் கொண்டாட இயலாது. தேவன் எதை அனுமதித்திருக்கிறாரோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்) நாம் வாழ்வதோ புறஜாதியார் மத்தியில்தான். நம்மைச் சுற்றிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.  அவர்கள் கொண்டாடுகிற விழாக்களை நம்மவர்கள் காணத்தான் செய்கிறார்கள்.

விக்கிரகங்களை தொழுதுகொள்ளும் மக்கள் அவைகளால் ஒரு பலனுமில்லை என அறிந்திருந்தும் அதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜீவனுள்ள தேவனை நாம் கொண்டாடக் கூடாது? என நம்மக்கள் நினைக்கத்தான் செய்வார்கள். இதன் விளைவுகளை பழைய ஏற்பாட்டு சம்பவங்களில் நாம் காண்கிறோம். (யாத்திராகமம்: 32:4,5).

ஜனங்களின் மனநிலையை அறிந்த தேவன் - இவர்கள் அந்நிய தேவர்களை நாடி சோரம் போகக் கூடாது என்பதற்காகத்தான் மாற்று ஏற்பாடாக - தேவன் பண்டிகைகளை ஏற்படுத்தினார் என கருதுகிறேன். வாசித்துப்பாருங்கள்: (யாத்திராகமம்: 34:22,23, உபாகமம்: 16:16, யாத்திராகமம்: 23:17,13,14).

நமக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு ஆராதனை ஒரு பண்டிகை போலத்தான். சிறப்பு தினங்கள், வாலிபர் கொண்டாட்டம், நற்செய்தி கொண்டாட்டம், விடுதலைப் பெருவிழாக்கள், குடும்ப ஆசீர்வாத கொண்டாட்டம், சிறப்பு உபவாசக் கூடுகை, சிறப்பு முகாம்கள், கருத்தரங்குகள், ஜெப முகாம், படைமுயற்சி கூட்டங்கள் ... போன்ற எத்தனையோ காரியங்கள் நமக்குண்டு. அடிக்கடி அதையெல்லாம் பண்டிகை கொண்டாட்டங்களைப்போல உற்சாகப்படுத்தி ஆத்துமாதாயம் செய்ய வேண்டும்.