அக்டோபர் 23, 2012

தானியேலுக்கு தரிசனங்கள் வெளிப்படக் காரணங்கள்

 
தானியேலுக்கு தரிசனங்கள் வெளிப்படக் காரணங்கள்

"தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்ச ரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டு, தன்னை தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக் கொண்டான்" (தானியேல்: 1:8).

1.  பரிசுத்தமாய் வாழ உயிரை பணயம் வைத்தான்:

 யூதர்களுக்கு உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகள், பிரமாணங்கள் உண்டு. தேவன் சிலவற்றை அவர்களுக்கு விலக்கி வைத்தார். (உபாகமம்: 14:3-21; அப்போஸ்தலர்: 15:20). பாபிலோனின் உணவுகள் பாபிலோனிய தெய்வங்களுக்கு படைத்து பின்பு தரப்படும். எனவே, தன்னை அதில் தீட்டுப்படுத்தாதபடி வேண்டிக் கொண்டான். தானியேல் தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி காத்துக் கொள்ள தன் உயிரையே பணயம் வைத்தான்.  காரணம்:

சிறைக் கைதியாக வந்தான். ஆனால், விசேஷித்த கைதியாக காணப்பட்டான். ஆனால், பாபிரோனில் அனைவரும் எல்லாக் கடடளைகளுக்கும் கீழ்படிய வேண்டும். அக்கால ராஜாக்கள் சிறைப்பிடிக்கப்பட்டால், கைகால்கள் வெட்டப்பட்டும், கண்கள் பறிக்கப்பட்டும் மிகவும் கொடூரமாக நடத்தப்படுவார்கள். இவையனைத்தும் அறிந்தும், தானியேல் தன்னை தீட்டுப்படுத்திக் கொள்ளாதபடி பார்த்தான். தான் சாப்பிடவில்லை என ராஜாவிற்கு தெரிந்தால் தன் தலையை வாங்கி விடுவான் என அறிந்தும், தன் உயிரைப் பணயம் வைத்து தன்னை தீட்டுப்படுத்தாதபடி பாதுகாத்துக் கொண்டான்.

2.வாலிப வயதில் ஆண்மையை இழந்தான்:

சிறையிருப்பில் உள்ள தானியேலின் ஆண்மையை அழித்துப் போட்டார்கள். தனது வாலிப வயதில் ஆண்மையை இழந்தான். காரணம்: ராஜ அரண்மனையில் ராஜ குமாரத்திகள் உண்டு. எனவே, வாலிபர்களுக்கு ஆண்மையை இழக்கச் செய்து விடுவார்கள்.

3. தேவனுக்கு பிரியமானவனாகக் காணப்பட்டான்:

தானியேல்: 9:23 - "நீ மிகவும் பிரியமானவன்..."

தானியேல்: 10:11 - "...பிரியமான புருஷனாகிய தானியேலே..."

தானியேல்: 10:19 - "...பிரியமான புருஷனே..."

              -  என்று ஆண்டவரே தானியேலைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் தானியேல் ஆண்டவருக்கு பிரியமானவனாகவும், அன்புக்கு பாத்திரவானாகவும் காணப்பட்டான். அதேபோல புதிய ஏற்பாட்டில் அன்பின் சீஷன் என அழைக்கப்பட்டவனும், இயேசுவின் மார்பில் சாய்ந்தவனுமாகிய யோவான் பிரியமானவனாக இருந்தான். இவ்விரண்டு பேரும் ஆண்டவருக்கு பிரியமானவர்களாக இருந்தபடியால், தேவன் இவ்விரண்டு பேர்களுக்கும் கடைசிகால சம்பவங்களை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.

விசுவாசம், ஜெபம், தைரியம், உறுதி, பாவமான காரியங்களுக்கு ஒத்துப் போகாதிருத்தல் இவைகளனைத்தும் தானியேல் வாழ்க்கையின் சிறந்த நற்குணங்கள் ஆகும். எனவேதான், "பிரியமானவன்" என மூன்று இடங்களில் குறிப்பிடுகிறார்.