டிசம்பர் 02, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits - Part III

4. நீடிய பொறுமை - Long Suffering

நீடிய பொறுமை - சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொள்ளுதல்

2 பேதுரு:3:9 - "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்."

தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இராதிருந்தால், நாம் பாவம் செய்த போது நம்மை அழித்திருப்பார். அவர் நாம் மனந்திரும்புவதற்கு அநேக வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கிறார்.

எபிரேயர்:12:2 - "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."

1பேதுரு:2:23 - "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்."

தம்மால் உருவாக்கப்பட்ட மனிதன் தம்மை அவமதித்து, பாடுபடுத்தி, சிலுவையில் அறைந்த போதும் அவர் நீடிய பொறுமையோடு சகித்தார்.

நீடிய பொறுமையுடன் இருந்த பரிசுத்தவான்கள்:


1. யோபு

யோபு:13:15 - "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்."

தன்னுடைய பொருள்கள் யாவும் அழிந்து போன போதிலும், தன் பிள்ளைகள் யாவரும் சடுதியில் மரணமடைந்த போதிலும், தன் உடல் முழுவதிலும் வியாதியால் வேதனைப்பட்ட போதிலும், தன் மனைவி, நண்பர்கள் நிந்தித்த போதிலும் தேவனை குறை கூறாமல் யாவற்றையும் சகித்துப் பொறுயோடே இருந்தான்.

2. தாவீது

தான் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட போதிலும், அரசராக இருந்த சவுலின் கொடுமைகளை பொறுமையுடன் சகித்து, சவுலை கொல்வதற்கு தனக்கு வாய்ப்புகள் கிடைத்த போதும் அதை வெறுத்து தள்ளினான். அபிஷேகம் பண்ணப்பட்டவர் மேல் தன் கையை போட கூடாது என்று தன் காலம் வரும் வரை பொறுமையுடன் சோதனைகளை சகித்து வந்தான்.

இவர்கள் இருவருமே பொறுமையுடன் துன்பங்களை சகித்துக்கொண்டனர். முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டனர்.  யோபுவின் முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை மேலானதாக இருந்தது. தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாகி 40 வருஷம் அரசாண்டான்.

நீதிமொழிகள்:25:15 - "பொறுமையினால் பிரபுக்களையும் சம்மதிக்கப்பண்ணலாம்"

லூக்கா:21:19 - "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்."

யாக்கோபு:1:4 - "நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது."

1பேதுரு:2:19,20 - "ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்."

எப்பொழுது பொறுமையை இழக்கிறோம்?


  • தேவனைப் பார்க்காமல் சூழ்நிலையை பார்க்கும்போது பொறுமையை இழக்கிறோம்.


சங்கீதம்:106:32,33 - "மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்."

எண்ணாகமம்:20:3- 11 - மோசே தேவனை பார்க்காமல் தன்னை சுற்றியுள்ள முறுமுறுக்கும் ஜனங்களை பார்த்து தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான். 


  • தேவனை முழுமையாக நம்பாமல், மாம்சத்துக்கு இடம் கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம்.


ஆதியாகமம்:16:2-4 - "சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்"

ஆபிரகாம் தேவன் கொடுத்த வாக்கை விசுவாசிக்காமல், தன் மனைவியின் பேச்சை கேட்டு ஆகார் மூலம் தன் சந்ததி உருவாகட்டுமென்று தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான்.


  • கோபத்திற்கு இடங்கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம். 
பிரசங்கி:7:8,9 - "ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்."


பொறுமையின்மையின் விளைவுகள்:


  • பகை
  • பிரிவினை 
  • சண்டை
  • கொலை


நாம் நீடிய பொறுமையை தரித்துக்கொள்ளும்படி தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நம் தேவன் நீடிய பொறுமையாக இருந்தது போல நாமும் அதே பண்பை எல்லா சூழ்நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும்.

5. தயவு


தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது

எபேசியர்:2:6,7 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."

கர்த்தர் நம்மேல் வைத்த தயவினால், பாவத்திலிருந்து நம்மை இரட்சித்து, நீதிமானாக்கி, ஆபிரகாமின் பிள்ளைகளாகும் பாக்கியத்தை தந்து, உன்னத பரலோகத்தை பெறும்படி செய்தார்.


தயவுள்ளவனாயிருந்த யோசேப்பு:

         தன் சகோதரர்கள் தன்னை பகைத்து, துன்புறுத்தி, அடிமையாக விற்ற போதிலும், தன்னுடைய ஆளுகைக்கு கீழ் வந்தபோதிலும் அவர்களை வெறுக்காமலும், கடிந்து கொள்ளாமலும், தண்டிக்காமலும் தயவாய் அவர்களை மன்னித்து இரக்கம் பாராட்டினான்.
(ஆதியாகமம்:50:15-21)

தயவுள்ளவனாயிருந்த தாவீது:

         சவுல் தன்னை எவ்வளவு தான் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்தாலும், தன்னை ஏமாற்றியிருந்தும், அவன் இறந்த பின் அவன் வீட்டாரை அழிக்காமல் அவர்களுக்கு தயை செய்தான். யோனத்தானின் மகன் மேவிபோசெத்திற்கு சவுலின் நிலங்களை திரும்பக் கொடுத்து ஒரு இளவரசன் போல அனுதினமும் தன்னுடைய பந்தியில் விருந்துண்ணும் படி தயை செய்தான். (2சாமுவேல்:9:1-13)

தயவுள்ளவர்களாயிருக்க நாம் செய்ய வேண்டியவை:


1. மன்னிக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

கொலோசெயர்:3:12,13 - "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

மற்றவர்களுடைய குறைகளை மிகைப்படுத்தாமல், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல நாமும் மன்னிக்க வேண்டும்.

2. கடுஞ்சொல்லை தவிர்த்து இனிமையான சொல்லை பேச வேண்டும்

எபேசியர்:6:9 - "... கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்."

நீதிமொழிகள்:25:15 - "நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்."

மற்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தேவ அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தும் போது நம்மில் உள்ள தேவ சாயலை கண்டு அநேகர் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க வாய்ப்புள்ளது.

3. இரக்க குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

லூக்கா:10:29-37 -  நல்ல சமாரியனை போல மற்றவர்கள் மேல் இரக்கப்பட வேண்டும்.

நாம் தயவை தரித்துக்கொண்டு (கொலோசெயர்:3:12), பிறர் குறைகளை பெரிதாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மன்னித்து இரக்கம் காட்டவேண்டும்.



தொடரும்......