செப்டம்பர் 01, 2012

"பரிசேயன்"



பரிசேயன்
(Pharisee)

பரிசேயர்கள் கலிலேயாவில் வாழ்ந்தவர்கள். கிரேக்கச் சொல் "பாரிசெயாச்". எபிரேயச் சொல் "பெருசீம்". பரிசேயர் கிரேக்கச் சொல் ஒருமையில் "பாரிசேயாச்" என்றும், பன்மையில் "பாரிசேயாய்" என்று கூறலாம். பரிசேயர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுபடுத்திக் கொண்டவர்கள். பரிசேயன் என்றால், "பிரித்தெடுக்கப்பட்டவன்" என்று பொருள். 

கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மூன்றாம் நூற்றாண்டின் கடைசி பகுதியிலும் பாலஸ்தீனாவில் உள்ள 'ஹாசிடிம்'  (Hasidim) என்ற பக்திக்குரிய மக்கள் வாழ்ந்தார்கள். மக்கபேயர் புரட்சியின்போது இந்த ஹசிடியர்கள் - மக்கபேயர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இவர்கள் "காசீடிம்" என்ற வகுப்பாரிலிருந்து வந்தவர்கள். 'ஹசிடிம்' என்ற சொல்லை சிலர் 'சாசிடிம்' (Chasidim) என்று உச்சரிக்கிறார்கள். இச்சொல் சங்கீத புத்தகத்தில் 23 தடவை வருகின்றது. அங்கு இச்சொல் "பரிசுத்தவான்கள்" என்று மொழிபெயர்த்துள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மதப் பிரகாரமாக சுத்தமில்லாத கரியங்களிலிருந்து தங்களை பரிசேயர் வேறுபடுத்திக் கொண்டார்கள். 

பின்னர், ஹாஸ்மோனியர் ஆட்சியாளர்கள் யுத்தம் செய்ய வேண்டிய மனநிலையில் இருந்ததால் பரிசேயர் தங்களுடைய படைஉதவியை பின்வாங்கிக் கொண்டார்கள். இந்த 'பரிசேயர்' என்ற பெயர்  'ஜான் கிர்ஹேனஸ்' என்பவர்  யூதேயாவை ஆண்டபோது, இவர்களுக்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது. மகா ஏரோது ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய சுமார் 6000 பரிசேயர் இருந்தனர் என சொல்லப்படுகிறது.

ஜான் கிர்ஹேனஸ் (கி.மு.135 - கி.மு.105) காலத்திலும், அலெக்சாண்டர் ஜேன்னஸ் (கி.மு.103 - கி.மு.76) காலத்திலும் பரிசேயர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ராணி சலோமி அலெக்சாண்டிரா (கி.மு.76 முதல் கி.மு.67) காலம் "பரிசேயர்களின் பொற்காலம்" எனலாம். சாலமோனின் சங்கீதம் ராணி அலெக்சாண்டிராவை புகழ்ந்து பாடியது.

எருசலேமின் அழிவுக்குப்பின் பரிசேயர்கள் இந்த   யூதமதத்தை உயிர்ப்பித்தார்கள். அதற்கு 'ரபி யோகன்னா பென்சாகி' (Rabbi Johannan Benzakkai) என்பவர் இந்த யூத மதம் உயிர்ப்பிக்க தலைமைத்துவம் வகித்தார்.

இவர்கள் வேதப்பிரமாணத்திற்கு (Interpreters) விளக்கம் கொடுப்பவர்கள். ஜெப ஆலயங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள். கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாய் இருந்தனர். 

இவர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள்.  யூதர்களின் நியாயப் பிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கடைபிடிக்க முயன்றவர்கள். எனவே, இவர்களை பக்தி கூட்டத்தார் எனவும்  அழைப்பார்கள். ஆபிரகாமைப் போல தேவனை நேசிப்பவர்கள். இருப்பினும், பரிசேயரில் பெரும்பான்மையினர் சுயநீதியுள்ளவர்கள்.

இவர்கள் தங்களை நீதிமான்கள் என்று கருதியவர்கள். உண்மையில், கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள் புறம்பாக மட்டுமே நீதிமான்கள் போல் தோன்றினர். உள்ளேயோ தீமையினால் நிறைந்திருந்தனர். மாய்மாலக்காரராய் இருந்தனர். (மத்தேயு: 23:13-32).

என்றாலும், எல்லாப் பரிசேயர்களுமே மாய்மாலக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. நிக்கொதேமுவும், கமாலியேலும் பரிசேயர்கள்தான் என்றாலும், நேர்மையான, நீதியுள்ள மனிதர்களாயிருந்தனர். (யோவான்: 3:1; அப்போஸ்தலர்: 5:34). அப்போஸ்தலனாகிய பவுலும் கூட ஒரு பரிசேயனே! (அப்போஸ்தலர்: 26:5; பிலிப்பியர்: 3:5).

பரிசேய இனம் இன்னும் அழியவில்லை. பரிசேய சமயம் தான் இன்றைய  யூத மதத்தின் அஸ்திபாரமாகும். 

பரிசேயர்களில் 7 வகை உண்டு. 

1. தோள் பட்டை பரிசேயர்:

காணிக்கை போடும்போது மற்றவர்கள் காணும்படி விளம்பரப்படுத்தி போடுவது.

2. சற்று நில் என்று சொல்லுகிற பரிசேயர் கூட்டம்:

தர்மம் செய்யும்போது வழியருகே போகிறவர்களை சற்று நில் என்று சொல்லி பார்க்க வைத்து போடுபவர்கள்.

3. குருட்டுப் பரிசேயர்:

தாம் போகும்போது பெண்கள் எதிரில் வந்தால், கண்களை மூடி நடந்து செல்வார்கள். இவர்கள் சுவரில் முட்டி மோதி இரத்தம் வந்தாலும் கண்களைத் திறக்க மாட்டார்கள்.

4. குனிந்த பரிசேயர்:

இவர் சோதனைகளுக்குத் தப்பும்படி குனிந்துதான் நடப்பார்.

5. எப்போதும் தங்கள் நற்கிரியைகளை எண்ணிக் கொண்டிருக்கும் பரிசேயர்:

தங்கள் குறைகளை மூடும்படி தங்கள் நல்ல காரியங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பார்கள். 

6. தேவனுக்குப் பயப்படும் பரிசேயன்: 

யோபுவைப் போல் உண்மையாய் நீதியாய் வாழ்பவர்கள்.

7. தேவனை நேசிக்கும் பரிசேயன்:

ஆபிரகாமைப் போல தேவனை நேசிப்பவர்கள். இருப்பினும், பரிசேயரில் பெரும்பான்மையினர் சுயநீதியுள்ளவர்கள்.